
விஜய் சேதுபதியால் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு லட்சம் பேர்
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் இ.பா.வீரராஹவன் கூறியிருப்பதாவது: புதுச்சேரியை சேர்ந்த நான் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். சமூக சேவையில் அக்கறை கொண்ட நான் 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்சப் குழுக்கள் மூலம் எனது சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வந்தேன்.
இத்தகவலை அறிந்த விஜய்சேதுபதி அவர் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என்னை பங்கேற்க செய்தார். அதன் பிறகு எனது பணிகளை தொடர்ந்து செய்ய உதவி செய்வதாக வாக்களித்தார். இதனால் எனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து முழுநேர பணியாக இதனை செய்ய ஆரம்பித்தேன்.
இதற்கு ஆதரவு பெருகவே இதனை ஒரு அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனமாக மாற்றச் சொன்னார். அதன்படி 2019ம் ஆண்டு வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் புதுச்சேரி தவளகுப்பத்தில் உள்ளது. இங்கு பணியாற்றும் முழுநேர பணியாளர்களுக்கு விஜய்சேதுபதி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் இந்த மார்ச் மாதம் வரை ஒரு லட்சத்து 133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மூலம் இணைந்துள்ளனர். இதுவரை 73 சுயதொழில் முனைவர்களை உருவாக்கி உள்ளோம், 17 வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளோம்.
இந்தத் தகவலை வெளியில் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் கண்டிப்பான முறையில் விஜய்சேதுபதி என்னைத் தடுத்து வந்தார். அவர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவரது இந்த பெரிய பணி உலகத்துக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது சொல்கிறேன். என்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!