
பிளாஷ்பேக்: கண்ணீர் திலகம் ஸ்ரீரஞ்சனி
தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனியை "பராசக்தி" படத்தில் சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க அழைத்து வந்தனர் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. தமிழ் சுத்தமாக தெரியாத ஸ்ரீரஞ்சனி முதலில் நடிக்க மறுத்தார். ஆனால் கதைப்படி கல்யாணி கேரக்டர் எப்போதும் துன்பத்தில் தவிக்கும் கேரக்டர் என்பதால் ஸ்ரீரஞ்சனியை விட்டால் வேறு யாரும் அப்போது பொருத்தமாக இல்லை என்று அவருக்கு தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தார்கள்.
"பராசக்தி" படம் வெற்றி பெற தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு ராஜி என் கண்மணி, மூன்றெழுத்து, ரத்தகண்ணீர், இல்லறஜோதி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பராசக்தி படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்தவர் "இல்லற ஜோதி" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். "குமாரி" என்ற படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்தார்.
தமிழிலும் தெலுங்கிலுமாக 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் சோகமாக நடித்ததால் இவரை "கண்ணீர் திலகம்" என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தார்கள். தமிழ், தெலுங்கில் பல ஆண்டுகளாக குணசித்ர வேடங்களில் நடித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!