
பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி”
ஏப் 28, 2025
Advertisement
குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்தும் குடும்பத் திரைப்படங்கள், சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் சமூகத் திரைப்படங்கள், வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை சரித்திர திரைப்படங்ள், புராண இதிகாச காவியத் திரைப்படங்கள், நாட்டுப் பற்றை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்ற தேசபக்தி திரைப்படங்கள் என தென்னிந்திய திரையுலகில் தொடாத தளமே இல்லை எனும் அளவிற்கு அத்தனை தளங்களிலும் பயணித்து ஆயிரக் கணக்கான திரைப்படங்களை அள்ளி வழங்கியிருப்பதுதான் நம் தமிழ் திரையுலகம். நாம் பெரிதும் விரும்பி வாசித்து மகிழ்ந்திருந்த எண்ணற்ற நாவல்களையும், புதினங்களையும், சிறு கதைகளையும் கூட, திரைப்பட வடிவில் தந்து நம்மை மேலும் மகிழ்ச்சியடையச் செய்திருப்பதுதான் நம் தமிழ் திரையுலகம் என்றால் அது மிகையன்று.
“தில்லானா மோகனாம்பாள்”, “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “முள்ளும் மலரும்”, “காயத்ரி”, “ப்ரியா”, “விக்ரம்”, “அழகி”, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “நான் கடவுள்”, “அசுரன்”, “விடுதலை” என அன்று முதல் இன்று வரை வாசகர்களால் ஈர்க்கப்பட்ட பல நாவல்கள் திரைப்பட வடிவில் இன்னும் வந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் ஒரு திரைப்படம், அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அத்திரைப்படத்தின் கதை வார இதழில் தொடர்கதையாக வருவதென்பது அதுவரை தமிழ் திரைப்பட ரசிகர்களோ, வாசகர்களோ, கண்டிராத ஒரு புதுமை. அந்தப் புதுமையையும் நிகழ்த்தியிருப்பது தமிழ் திரையுலகமே.
இயக்குநர் கே சுப்ரமணியமும், "கல்கி" கிருஷ்ணமூர்த்தியும் நல்ல நண்பர்கள். தமிழ் பத்திரிகை உலகிலும், தமிழ் திரைப்பட உலகிலும், ஒரு புதுமையை உருவாக்க இவ்விருவரும் திட்டம் வகுத்தனர். அந்தப் புதுமையை முதன் முறையாக தமிழ் திரையுலகில் செய்து காட்டி வெற்றியும் பெற்றனர். ஒரு கதை ஒரு வார இதழில் தொடர்கதையாக வரத் தொடங்கிய காலம் தொட்டே, அந்தக் கதை திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டும் வந்தது. திரைப்படத்திற்கான பிரத்யேக புகைப்படங்களே தொடர்கதைக்கான படங்களாக பிரசுரிக்கப்பட்டும் வந்தன.
படத்தின் கலைஞர்களான எஸ் டி சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா, பாபநாசம் சிவான் ஆகிய கலைஞர்களை மனதில் வைத்தே "கல்கி" கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கதையை எழுதியிருக்கின்றார். அந்தத் தொடர்கதையின் பெயர் “தியாக பூமி”. அந்தத் திரைப்படத்தின் பெயரும் “தியாக பூமி”. 1939 மே 20 அன்று வெளிவந்த இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் பெயரிலேயே புடவைகளும், வளையல்களும் விற்பனைக்கு வரத் தொடங்கியிருந்தன.
“தியாக பூமி” புடவை, “தியாக பூமி” வளையல் என்றெல்லாம் வியாபாரம் பெருகத் தொடங்கி, படத்திற்கு வரும் ரசிகர்கள் கூட்டமும் ஆர்பரிக்கத் தொடங்கியிருந்தது. இதற்குப் பிறகு இதே போன்று ஒரு படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே அதன் கதை ஒரு வார இதழில் தொடர்கதையாக வந்தது என்றால், அது 1981ம் ஆண்டு கே பாக்யராஜ் நடித்து இயக்கியிருந்த “மௌன கீதங்கள்” திரைப்படம்தான். அன்றைய காலகட்டங்களில் ஒரு வார இதழில் இதன் கதை தொடர்கதையாக அந்தப் படத்தின் புகைப்படங்களோடு வெளிவந்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருந்தது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!