
ஒரு நடிகை உருவாகிறார்...!: மனம் தளராத மவுனிகா
ஜூலை 07, 2024
Advertisement
தோல்விகளை கண்டு துவண்டு போகாமல், நமக்கான துறையை தேர்ந்தெடுத்து முன்னேற்ற பாதையில் பயணிப்பவர்கள் வாழ்வின் உயரத்திற்கு சென்று வெற்றிக்கனியை சுவைக்கின்றனர். அப்படிப்பட்டவர் தான் சேலத்தை சேர்ந்த வளரும் நடிகை மவுனிகா செந்தில்குமார். இவர் தோல்விகளை கண்டு அச்சப்படாமல் திரை உலகில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இவர் மனம் திறந்ததாவது: என் வீட்டில் நான் ஒரே பொண்ணு. அதனால் செல்லமாக வளர்ந்தேன். கோவையில் கல்லுாரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது. அதற்கான சூழல் அமையவில்லை. பெங்களூருவில் எம்.பி.ஏ.,படித்து அங்கேயே ஒரு தனியார் நிறுவனத்தில் 2019ல் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். சில மாதங்களில் எனக்கு நடிப்பு மீதான ஆசை, ஈர்ப்பு அதிகமாகியது. இதனால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்தேன்.
எல்லோரையும் போல கொரோனா காலம் என்னை வீட்டிலே முடக்கியது. என் கனவுகளுக்கான எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தது. முயற்சியையும், மன தைரியத்தையும் கைவிடவில்லை. என்னை அரசு போட்டித் தேர்விற்கு தயாராக அம்மா வலியுறுத்தினார். அதற்காக சென்னை சென்று சில மாதங்கள் படித்தேன். அதிலும் என்னால் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. அடிக்கடி சினிமா ஆசை துரத்திக் கொண்டே இருந்தது. அதனால் எனக்கான நேரத்திற்காக காத்திருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் மூலமாக யுடியூபில் ஷாட் வீடியோஸ் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தகட்டமாக "ஹஸ்பண்ட் இன் ஒண்டர்லேன்ட்"எனும் குறும்படத்தில் நடிக்க தொடங்கினேன். அது வெளியானதும் இளைஞர்கள் மத்தியில் "வைரலானது". தொடர்ந்து வாய்ப்பு வரத்தொடங்கியது. "யாச்சே"எனும் வெப்சீரிசில் நடித்தேன். அதுவும் வரவேற்பை பெற்று தந்தது. இதனால் எனக்கு தேவையான செலவுகளை நானே பார்த்து கொண்டு வீட்டிற்கும் பணம் அனுப்பும் நிலை ஏற்பட்டது. அது மகிழ்ச்சியை தந்தது.
அடுத்தகட்ட உயர்வாக "கன்னத்தில் முத்தமிட்டால்" எனும் தொலைக்காட்சி நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள். கிடைத்த வாய்ப்புகளை விடாமல் அதையும் நடித்தேன். நாடகம் பார்க்கும் பெண்கள் மனதில் என் முகம் நிற்க ஆரம்பித்தது. சினிமாவுக்காக பல ஆடிஷன்கள் சென்றிருக்கிறேன். அதில் பலவற்றில் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தபோதிலும் மனதைரியத்தையும், தன்னம்பிக்கையும் என்றுமே நான் இழந்ததில்லை.
முயற்சிகளிலிருந்து பின்வாங்காமல் முன்னேறி செல்வதற்கான யூகத்தை அமைத்து பொறுமையாக காத்திருந்தேன். அப்போது "பிளாஷ்பேக்" எனும் படத்தில் ரிப்போர்ட்டராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து "லப்பர் பந்து" படத்தில் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் நடித்துள்ளேன். இவை இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
நாம் நாமாக இருந்தாலே செல்லக்கூடிய இடத்திற்கு தானாக சென்று விடலாம். ஒரே ஒரு வாழ்க்கை தான் நம்மிடம் இருக்கிறது. அதை நமக்கு பிடித்தது போல் வாழ்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எத்தனை தோல்விகள் வந்தாலும் பிடித்த விஷயத்தை பின்வாங்காமல், மனம் தளராமல் செய்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்றார்.
எத்தனை தோல்விகள் வந்தாலும் பிடித்த விஷயத்தை பின்வாங்காமல், மனம் தளராமல் செய்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!