தினமலர் விமர்சனம் » வன யுத்தம்
தினமலர் விமர்சனம்
தமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் "வனயுத்தம்" மொத்தமும்!
கதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் "வனயுத்தம்! இது வீரப்பனின் கதையா.? தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா...? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!
வீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்டைகளையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.
விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, "குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார். வீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் "ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், "கெஸ்ட் ரோலா? "ஒஸ்ட் ரோலா? என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்!
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
வீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா.? விஜயகுமாரின் வெற்றிக்கதையா...? என்பதை புரியாதா புதிராக்கிவிடுகிறது.
எனவே "வனயுத்தம்", வழக்கமான "தமிழ்சினிமா சப்தம்! யுத்தம்!!" எனலாம்...--------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
வீரப்பனுக்கு உதவியதாகச் சொல்லப்படும் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை உண்டா? இல்லையா? என்ற பரபரப்பான நேரத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம்.
எல்லோருக்கும் தெரிந்த சந்தன வீரப்பனின் கதை. இதற்காக வீரப்பன் சம்பந்தப்பட்ட இடங்கள், காடுகள், அவனது நண்பர்கள், எதிரிகள், காவல் அதிகாரிகள் என்று அலைந்து சந்தித்து நிறைய உழைத்திருப்பது தெரிகிறது.
கிஷோர், வீரப்பனாகவே வாழ்ந்திருக்கிறார். நிறைய ஹோம் ஒர்க் செய்திருப்பது தெரிகிறது.
ரொம்ப நேரம் கழித்து வருகிறார் அர்ஜுன். போலீஸ் அதிகாரி வேடம் என்றால் சொல்லியா தரவேண்டும்? அதே மிடுக்கு. அதே அர்ப்பணிப்பு. அவர் வந்தபிறகுதான் டாக்குமெண்டரி தளத்திலிருந்து படம் ஆக்ஷனுக்கு மாறுகிறது.
மிலிட்டரிக்காரராக வரும் ஜெயபாலனும் நன்று.
படத்தின் மிகப்பெரிய பலம் விஜய் மில்டனின் கேமரா. வீரப்பன் காட்டுக்குள் நாமும் போய் வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதற்குப் பக்கபலமாய் ஆர்.ஆரும் மிரட்டுகிறது. பலே!
வீரப்பனின் மனைவி, குழந்தைகள் பற்றி எங்குமே குறிப்பிடாதது கொஞ்சம் தொய்வைத் தருகிறது. சட்டம்! ஆனால் அவன் ஏன் அப்படி ஆனான் என்பதைக் கொஞ்சம் கோடி காட்டியிருக்கலாம்.
காட்டுக்குள் வீரப்பனைச் சாய்க்க முடியாது என்று முடிவு செய்து வெளியில் கொண்டு வருகிறார்கள். அவனுக்கு கடைசியாய் மோர் தருகிறார்கள்!!!
சண்டையில் நல்லவன், கெட்டவன் எல்லாம் கிடையாது. ஜெயிப்பவன், தோற்பவன் மட்டும்தான் உண்டு - வசனம் யதார்த்தம்.
படம் முடிந்தபிறகு வீரப்பனுடன் பழகியவர்கள், ஆக்ஷனுக்குக் காரணமான அதிகாரிகள் போன்றவர்களின் வாக்குமூலத்தை டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சொல்லியிருப்பது வலு கூட்டுகிறது.
வன யுத்தம் - ஃபைல் காப்பி!
ஆஹா: உண்மைக் கதை, கேமரா.
ஹிஹி: ஒரே மாதிரியான காட்சிகள் ஏற்படுத்தும் டாக்குமெண்டரி உணர்வு
குமுதம் ரேட்டிங்: ஓகே.--------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
* ராஜீவ் கொலையாளிகளின் இறுதிநாட்களை குப்பி என்ற படம்பிடித்த இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், வீரப்பனின் கதையைக் கையிலெடுத்திருக்கும் படம் வனயுத்தம்!
* எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் தன் உடல்மொழியால் ஸ்கோர் செய்யும் கிஷோர், வீரப்பன் பாத்திரத்தில் விளையாண்டிருக்கிறார்.
* ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்குப் பெரிதாக ஆக்ஷன் எதுவும் இல்லை! மேப்பை விரித்து வைத்து ப்ளான் மட்டும் பாடுகிறார்.
* வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பாத்திரத்தில் நடித்த விஜயலட்சுமி நடித்திருந்தாலும் படத்தில் அவர் ஒரு சீனில் கூட இல்லை... குழந்தைகளைக் கூடக் காட்டவில்லையே ஏன்?
* வீரப்பனின் கூட்டாளிகளும், அவனைப் பிடிக்கவரும் போலீஸ் கதாபாத்திரங்களும் கனகச்சிதம்!
* மக்களிடமும், வீரப்பனிடமும் அன்பு காட்டிப் பரிவுடன் நடக்கும் போலீஸ் அதிகாரியை வீரப்பன் கொலை செய்த பின்னணி என்ன? ஏன் அதை இயக்குனர் செய்யவில்லை?
* போலீஸ் விவரித்த செய்திகளை மட்டுமே வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கும் இயக்குனர், வீரப்பனின் பார்வையில் ஒரு காட்சியைக்கூட நகர்த்தவில்லையே ஏன்? என்ன நிர்பந்தம்?
* போலீஸ் செய்ததாக பத்திரிகைகளில் பதிவாகி இருக்கும் விஷயங்களில் ஒன்றுகூட படத்தில் இல்லையே... ஏன்? அப்போ இது உண்மையாகவே வீரப்பனின் கதைதானா?
* முதல் பாதி வீரப்பனின் எழுச்சிப் படலம் எனில் மறுபாதி வீழ்ச்சிக் கதை! அந்த வகையில் படம் பார்க்கும் சராசரி ரசிகனை ரசிக்க வைத்து இருக்கையோடு கட்டிப் போட்டு ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ்!