நடிப்பு - ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாலி
தயாரிப்பு - சாட் சினிமாஸ்
இயக்கம் - ராஜாகஜினி
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
வெளியான தேதி - 31 ஜனவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகும் புதுமுகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அது வரவேற்கத் தகுந்த விஷயம் தான் என்றாலும், புதுமுகங்கள் தங்களை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான முதல் முயற்சியிலேயே முத்திரை பதிக்கும் அளவிலான படங்களை உருவாக்கத் தவறி விடுகிறார்கள்.
இந்தப் படத்தின் நாயகன் ரோஷன் உதயகுமார், நாயகனாக நடிப்பதற்குப் பொருத்தமான முக அமைப்பு, உடல்வாகு, ஓரளவிற்கு நடிப்பு என வைத்திருந்தாலும் அறிமுகமாகும் படத்தின் கதையைத் தேர்வு செய்வதில் எந்த ஒரு கவனமும் செலுத்தவில்லை என்று தெரிகிறது. 80களில் வரவேண்டிய ஒரு கல்லூரிக் காதல் கதையை 40 வருடங்களுக்குப் பிறகு கொடுத்து நம்மை சோர்வடைய வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜாகஜினி.
இப்போதெல்லாம் பல கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்துவதே இல்லை. கல்லூரி என்றாலே அதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கும் என ஒரு அரைகுறை அரசியலையும் படத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
ரோஷன், தனது கல்லூரி பேராசிரியை பிரியங்கா வீட்டில் தங்கி படித்து வருகிறார். கல்லூரி தேர்தலில் நின்று சேர்மன் ஆகிறார். அவருக்கும் கல்லூரி மாணவியான ஹிரோஷினி கோமாலி-க்கும் காதல் மலர்கிறது. இருவரது காதலையும் ஹிரோஷினியின் இன்ஸ்பெக்டர் அப்பா எதிர்க்கிறார். இதனிடையே ஒரு தகராறில் ஹிரோஷினியை ரோஷன் தாக்கி காயப்படுத்தியதால் ரோஷன் கைதாகி, ஜாமீனில் வருகிறார். ஹிரோஷினியும் அதை உண்மை என்று நம்புகிறார். ஒரு கட்டத்தில் பிரியங்காவால், ரோஷன் எப்படிப்பட்டவர் என்ற உண்மை தெரிய வர ஹிரோஷினி மனம் மாறி ரோஷனை ஏற்கத் தயாராகிறார். இதன் பின் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இதுதான் படத்தின் கதை என்றாலும் திரைக்கதையில் என்னென்னமோ சேர்த்து துண்டு துண்டாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன.
கல்லூரி மாணவர் கதாபாத்திரம் தனது வயதுக்குரிய கதாபாத்திரம் என்பதால் அதில் ஓரளவிற்கு நடித்து விடுகிறார் ரோஷன். நடனத்தில் தடுமாறுபவர் சண்டைக் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
ஹிரோஷினிக்கு காதலிப்பதைத் தவிர வேறு வேலை எதுவுமில்லை. கல்லூரி பேராசிரியையாக வெயில் பிரியங்கா. இன்ஸ்பெக்டராக மதுசூதன ராவ். அரசியல்வாதியாக வேலராமமூர்த்தி, தாதாவாக இரவிஷங்கர் ஆகியோரது கதாபாத்திரங்கள் அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஒரே ஒரு கல்லூரியைச் சுற்றியே நடக்கும் கதை. காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை.
கிளைமாக்சை இப்படி முடித்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துவிடுவார்கள் என நினைத்து அப்படி ஒரு கிளைமாக்சை அமைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காதலர்கள் தங்களை எப்படி கண்டுபிடித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக இயக்குனர் வைத்திருக்கும் அந்த ஒரு டச் மட்டுமே படத்தில் சிறப்பு.
உற்றான் - உரியவனல்ல