உண்ட (மலையாளம்) - விமர்சனம்
நடிகர்கள் : மம்முட்டி, ஈஸ்வரி ராவ், சைன் டாம் சாக்கோ, இயக்குனர் ரஞ்சித், ஜேக்கப் கிரிகோரி மற்றும் பலர்
ஒளிப்பதிவு : சஜித் புருஷன்
இசை : பிரசாந்த் பிள்ளை
இயக்கம் : காலித் ரஹ்மான்
சத்தீஸ்கரில் நடக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து மம்முட்டி தலைமையில் ஆயுத போலீசார் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் வாக்குச்சாவடிக்கு சென்று பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு உதவியாக அங்கேயே ஒரு ராணுவ அதிகாரியும் உடன் இருக்கிறார்.. திருவிழா பட்டாசு சத்தம் கேட்டால் கூட மாவோயிஸ்ட் தாக்குதல் என கருதி, தங்களிடம் இருந்த துப்பாக்கி குண்டுகளை(உண்ட) எதிரிகளை தாக்குவதாக நினைத்து வீணடிக்கின்றனர்.
குண்டுகளை அனுப்பி வையுங்கள் என கேரளாவிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் குண்டுகள் தங்களிடம் இல்லை என்பதால் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்வதோடு குழுவின் தலைவர் மம்முட்டியுடன் ஒரு சிலர் முரண்பட்டு நிற்கிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட துப்பாக்கி குண்டுகள் கொண்ட பெட்டி, எதிர்பாராதவிதமாக காணாமல் போய்விடுகிறது. குண்டுகள் இனி கிடைக்காது என்கிற நிலையில் தேர்தல் நாளன்று மிகுந்த அச்சத்துடன் கைவசம் இருக்கும் அடிப்படை பாதுகாப்பு கவசம் மற்றும் லத்தியுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
எதிர்பார்த்தபடியே தேர்தல் நாளன்று பிரச்சனை, வாக்குச்சாவடி தேடி வருகிறது. போதுமான அளவு துப்பாக்கி குண்டுகள் இல்லாத சூழலில் இந்தப் பிரச்னையை அவர்களால் எதிர்கொள்ள முடிந்ததா..? எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடிந்ததா..? வந்த எதிரிகள் யார் என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது
கலைப்படத்தையும் கமர்சியல் படத்தையும் இணைக்கும் கோடு ஒன்று இருக்கும் அல்லவா..? சரியாக அந்த கோட்டிலேயே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.. போலீஸ் படம் என்றாலே அரசியல்வாதி, ரௌடி என்கிற வழக்கமான பார்முலாவை, இதில் அறவே ஒதுக்கிவிட்டு, மொழி தெரியாத ஒரு வடக்கத்திய மாநிலத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீசாரின் இயல்பான நிலையை, எதார்த்தம் மீறாமல் சித்தரித்திருக்கிறார்கள். அதற்காகவே முதலில் இயக்குனர் காலித் ரஹ்மானை பாராட்டி விடலாம்.
சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மம்முட்டி ஒருபக்கம் கம்பீரமும், அதேசமயம் ஒரு நடுத்தர வயது போலீஸ் அதிகாரிக்கே உண்டான இயல்பான சராசரி மனிதனின் குணாதிசயங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது குழுவினருக்குள் சலசலப்பு வந்து விடாமல் தடுப்பதும் எந்த நேரம், எந்த திசையில் இருந்து மாவோயிஸ்டுகள் தாக்குவார்கள் என ஒருவித பயத்துடனேயே எதிரிகளை எதிர் நோக்கி காத்திருப்பதும், துப்பாக்கி குண்டுகள் இல்லை என்கிற தகவல் வரும்போது, கையறு நிலைக்குத் தள்ளப்படுவதும் என காட்சிக்கு காட்சி மீட்டர் தீராத நடிப்பை வழங்கியுள்ள மம்முட்டி, இத்தனை வருடங்களில் அவர் போலீசாக நடித்த படங்களில் இருந்து இந்த படம் நிச்சயம் மாறுபட்டது என்பதை உறுதியாகச் சொல்லலாம் மம்முட்டி
மம்முட்டியின் மனைவியாக வெறும் இரண்டே காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகிறார் ஈஸ்வரி ராவ். மம்முட்டியின் குழுவில் இணைந்துள்ள போலீஸ்காரர்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை பிரதிபலித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீசாருக்கு அவர்களது குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் அவர்களின் பணியின்போது எந்தவிதமான சங்கடங்களை கொடுக்கின்றன என்பதை போகிற போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துகிறது.
இந்த போலீஸ் குழுவினருடன் ஏற்கனவே அங்கே தங்கியிருக்கும் ராணுவ அதிகாரியாக நடித்து இருப்பவர் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் பதற்றமில்லாமல் ஹேண்டில் செய்யும் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மற்ற போலீஸ் அதிகாரிகளாக வரும் இயக்குனர் ரஞ்சித், ஷைன் டாம் சாக்கோ, ஜேக்கப் கிரிகோரி ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித் புருஷனின் பங்களிப்பு இந்தப் படத்தில் ரொம்பவே அலாதியானது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள ஒரு வட இந்திய கிராமத்திற்குள் நாமே வலிய சென்று சிக்கிக் கொண்டது போன்ற உணர்வை படம் முழுவதும் தனது ஒளிப்பதிவில் காட்டி இருக்கிறார் மனிதர்.. பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் படம் முழுக்க ஒரு பய உணர்வை குறிப்பாக, இப்போது மாவோயிஸ்ட் தாக்குதல் நிகழும் என்கிற எதிர்பார்ப்பை நமக்குள்ளும் விதைக்கும் விதமாக கேமராவுடன் இணைந்து பயணிக்கிறது..
தனது முதல் படமான அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில், தந்தை மகனுக்கு இடையேயான அன்பை சொன்ன இயக்குனர் காலித் ரஹ்மான், தனது இரண்டாவது படத்தில் இப்படி ஒரு முற்றிலும் மாறுபட்ட பின்னணி கொண்ட போலீஸ் கதையை கையில் எடுத்திருப்பது ஆச்சரியமான அதேசமயம் வரவேற்கத்தக்க விஷயம். எந்த இடத்திலும் துளிகூட எதார்த்தம் மீறாமல் உண்மைக்கு பக்கத்திலேயே இருந்து கதையை நகர்த்திச் சென்றதன் மூலம் தன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த 'உண்ட' படம், போலீஸ் படம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்லும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் ட்ரீட் என்பதில் சந்தேகம் இல்லை.