நடிகர்கள் : தமிழ், ஸ்ரீபிரியங்கா , பிரசாத், உதயராஜ்
இயக்குநர் : இகோர்
தினமலர் விமர்சனம்
திருடு... பொய் சொல்லு... ஆனா., தேசத்த காப்பாத்து... எனும் புதுவித கான்செப்ட்டுடன், சஸ்பென்ஸ் காமெடி படமாக சற்றே தூக்கலான கதாநாயகியின் காமநெடியுடனும் வௌிவந்திருக்கும் படம் தான் வந்தா மல.
சிறுவயதிலேயே மளிகை கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கடலை உருண்டை திருடும் நான்கு குப்பத்து சிறுவர்கள், வளர்ந்து வாலிப வயதை எட்டியதும் வழிப்பறி, ஜேப்படி, செயின் ராப்பரி... என கூட்டு களவாணி தனத்தில் குடி கும்மாளம் என ஜாலியாக வாழ்கின்றனர்.
ஒருநாள் ஒரு இளம் பெண்ணிடமிருந்து இவர்கள் பறித்த தங்க சங்கிலியின் திறந்து மூடும் டைப் டாலரில் ஒரு துண்டு காகிதம் இருக்கிறது. அதில் என்னை காப்பாற்றினால் இரண்டு கோடி பணம் கிடைக்கும் எனும் வசீகர வாசகம் கண்டு, நால்வரும் தங்களது திருநங்கை நண்பியின் உதவியுடன் இரண்டு கோடியைத் தேடி படை எடுக்கின்றனர். இவர்களது களவாணித்தனம் துளியும் பிடிக்காத அந்த நால்வர் கூட்டணியில் உள்ள ஒருவனின் காதலியும் இவர்களை ஃபாலோ செய்கிறார்.
இந்நிலையில் அடிக்கடி போலீஸ் லாக்-அப்பிற்கு போகும் அந்த நால்வரையும், ஜெயிலுக்கு போகவிடாமல் பெயிலில் எடுக்கும் அந்த எரியா பெரியவரும் அகால மரணமடைய, ஏற்கனவே போலீஸின் வான்டட் லிஸ்ட்டில் இருக்கும் நால்வருக்கும் இரண்டு கோடி கிடைத்ததா.? கள்ளத்தனம் பிடிக்காத கள்வனின் காதலி காதலனுடன் சேர்ந்தாரா.?! திருடு... பொய் சொல்லு... ஆனா, தேசத்த காப்பாத்து... எனும் இப்பட கதையின் அடிநாதம் எப்படி? இறுதியாக பூர்த்தி ஆகிறது..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயன்றிருக்கிறது வந்தா மல படத்தின் மீதிக்கதை!
களவாணிப் பையனாக வரும் நாயகர் தமிழ், மாவு மில்லில் வேலை பார்த்தபடி மிளகாய் தூள் அரைத்த கையுடன், வாயுடன் வரும் தன் காதலியின் கார முத்தத்திற்கு பயந்து நடுங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. பைக்கில் சுத்துப்போட்டு தனியாக சிக்கும் பெண்களிடம் செயின் அறுக்கும் காட்சிகளிலும் தமிழ் சோடை போகவில்லை. தமிழ் மாதிரியே அவரது நண்பர்கள் பிரசாத், உதயராஜ் (மாஜி மாஸ்டர் நடிகர் இப்பொழுது இப்படம் மூலம் மிஸ்டர் நாயகராக களமிறங்கியிருக்கிறார்.), ஹிட்லர் உள்ளிட்டவர்களும் குப்பத்து குட்டி சங்கிலி பறிப்பாளர்களாக சென்னை குப்பத்து தமிழ் பேசியபடி நடிப்பில் ஈர்க்கின்றனர்.
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா மிளகாய்தூள் உதடுகளும், மிட்டா மிராசுகளையும் கவிழ்க்கும் காம பார்வையுமாக... ''இப்படி ஒரு பொண்ணு... நம்ம ஏரியாவில் இல்லையே...'' என இளசுகளை ஏங்க வைக்கிறார். 'இன்ஸ்' மகாநதி சங்கர், ஏரியா பெரியவர் வியட்நாம் வீடு சுந்தரம் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
சாம்.டி.ராஜின் இசையில், ''ஆன்னா ஆவன்னா அண்ணாதுரையை பாருங்கண்ணா...'' உள்ளிட்ட கானா பாடல்கள் களேபரம். மாரி வெங்கடாசலத்தின் ஔிப்பதிவு சென்னை சிட்டியின் தெருக்களிலும், குப்பத்து சந்து பொந்துகளிலும் சுற்றி சுழன்றடித்திருப்பது படத்திற்கு பலம்! இகோர் இயக்கிய காட்சிகள் எல்லாவற்றையும் படத்தில் வைத்தே ஆக வேண்டுமென படத்தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷ் பரிதவித்திருப்பதற்கு பதிலாக தன் கத்தரியை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்!
இதே இயக்குநர் இகோரின் இயக்கத்தில் முதல்படமாக வௌிவந்த கலாபக்காதலன் படத்தில், கதாநாயகர் ஆர்யாவை அவரது கொழுந்தியாள் பாத்திரம் விரகதாபத்துடன் துரத்தி துரத்தி காதலிக்கும்... வந்தாமல படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியங்காவே, கதாநாயகர் தமிழை, விரகதாபத்துடனும், மிளகாய் தூள் உதடுகளுடனும் துரத்தும் காட்சிகள் விரசம் என்றாலும் இளைஞர்களுக்கு சுவாரஸ்யம்!
சென்னை குப்பத்தையும், சென்னை குப்பத்து பாஷையையும், சில குப்பத்து இளைஞர்கள் குடி கும்மாளமென வழிப்பறி பணத்தில் வசதியாக வாழ முயற்சிப்பதையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குநர் இகோர், படம் பிடித்த அத்தனையையும் படத்தில் வைக்க முயற்சிக்காது இருந்திருந்தால் இன்னும் ஸ்கோர் செய்திருப்பார்.?அவ்வாறு இல்லாதது ''வந்தா மல போனா....'' எனும் அளவிலேயே இப்படத்தை கருத வைப்பது சற்றே பலவீனம்!
மொத்தத்தில், ''வந்தா மல - கொஞ்சம் வள வள...!''