பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

சிறு வயதிலேயே நடிப்பு திறமையால் மக்களை ஈர்த்த நடிகை ஷாத்திகா. இவர் இரண்டு வயதிலிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிநடை போடுகிறார். இவர் கூறியதாவது:
நான் பிறந்து வளர்ந்தது சென்னை. என் சினிமா பயணம் நான் குழந்தையாக இருக்கும் போதே தொடங்கியது. 2 வயதாக இருக்கும் போது அம்மா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து விளம்பரம் கொடுக்க ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது உதவி இயக்குநர் ஒருவர் என் புகைப்படத்தை பார்த்து சத்யராஜ் நடிக்கும் 'வீரநடை' படத்தில் குஷ்புவிற்கு அக்கா மகள் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த குழந்தையை அனுப்ப முடியுமா என கேட்டார். அம்மாவும் சம்மதிக்க அங்கிருந்து தொடங்கியது என் சினிமா பயணம்.
விஜயகாந்துடன் 'சொக்கதங்கம்', மம்மூட்டியுடன் 'ஆனந்தம்', சரத்குமாருடன் 'சமஸ்தானம்', கார்த்திக்குடன் 'ரோஜாவனம்', விஜய்யுடன் 'குருவி' என பல்வேறு நடிகர்களுடன் 30க்கும் மேலான படங்களில் குழந்தை நட்சத்திரம், சகோதரி என நடித்துள்ளேன். பின் சீரியல்களில் வாய்ப்பு வந்தது.
'மங்கை' சீரியலில் ஆரம்பித்து கோலங்கள், மைடியர் பூதம், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட 25க்கு மேலான சீரியல்களில் நடித்துள்ளேன். காஞ்சனா, சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளேன்.
பின்னர் நடிப்பிற்கு பிரேக் கொடுத்து பி.டெக்., எம்.பி.ஏ., முடித்தேன். மீண்டும் சினிமாவிற்குள் வர முயன்றேன். அது நிறைவேறவில்லை என்றாலும் நம்பிக்கையோடு காத்திருந்தேன். பின்னர் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. 'மகாநதி' சீரியலில் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
எத்தனையோ ஆடிஷன்களில் நிராகரிப்பை சந்தித்துள்ளேன். இருந்தாலும் கலங்கியதில்லை. காரணம் என் அம்மா தான். என் ஊக்கசக்தியாக என்னை வழி நடத்துகிறார். நான் துவளும் போது என்னை தாங்குகிறார். அதனால் கஷ்டங்களை கடந்து வருவது கடினமாக தெரியவில்லை. இன்னும் சினிமாவில் என்னை நிரூபித்து கொண்டு இருக்கிறேன்.
இன்றும் என்னை பார்க்கும் ரசிகர்கள் 'நீங்களா அந்த குட்டி பொண்ணு' என என் மீது அன்பு செலுத்துகின்றனர். ஹீரோயினாக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.
எனக்கு போட்டோ ஷூட்கள் எடுப்பதில் ஆர்வம் இருப்பதால் ஷூட்கள் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன். மக்கள் நம்மீது வைக்கும் அன்பை ஊக்கமாக நினைக்கிறேன், என்றார்.