
டான் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகுமா ?
இப்படத்தை முதலில் மார்ச் 25ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய "ஆர்ஆர்ஆர்" படம் கொரோனா அலையால் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
"ஆர்ஆர்ஆர்" படத்தை "டான்" படத்தை இணைந்து தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. அதனால், "டான்" படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படும் என நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி நேற்று "டான்" படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியாக "மே 13ம்" தேதியை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு காலை 9 மணிக்கு வெளியானது.
ஆனால், அதற்குப் பிறகு தமிழக அரசின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே மாதம் 5ம் தேதி முதல் மே 30ம் தேதி வரையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தார். மே 5 முதல் மே 13 வரையில் 6 முதல் 9 வகுப்பு வரை இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். எனவே, மே மாதம் முழுவதுமே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு மாதமாக அமைய உள்ளது.
ஏற்கெனவே கொரோனா அலைகளுக்குப் பிறகு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது குறைந்துவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணத்தால் பள்ளி இறுதித் தேர்வுகள் சரிவர நடக்கவில்லை. இந்த வருடமாவது சரியாக நடக்கும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அந்த மாதத்தில் குடும்பத்தோடு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது கண்டிப்பாகக் குறையும்.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள், சிறுமியர்கள், பெண்கள் என அனைவரும் வந்து ரசித்துப் பார்ப்பார்கள். மே மாதம் தேர்வுகள் காரணமாக "டான்" படத்தைப் பார்க்க அவர்கள் வருவார்களா என்பது சந்தேகம்தான். அதனால், படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைக்க வேண்டுமென கோலிவுட்டில் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!