ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2018ம் ஆண்டின், முக்கால் ஆண்டைக் கடந்துவிட்டோம். இந்த ஒன்பது மாதங்களில், சுமாராக 120க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் மீதமுள்ள மூன்று மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர உள்ளன. அந்த எண்ணிக்கை மேலும் கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை.
இந்த ஆண்டு முடிவதற்குள் பல பெரிய படங்கள் வெளிவர உள்ளன. இதனால், தமிழ் சினிமாவில் கடுமையான போட்டி ஏற்படலாம். டிக்கெட் பிரச்சினையைக் கூட மக்கள் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், தியேட்டர்களில் உள்ள தின்பண்டங்களின் விலையை மட்டும் தியேட்டர்காரர்கள் குறைக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார்கள்.
ஒரு சிறிய பாக்கெட் பாப்கார்ன் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, தயாரிப்பாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தவில்லை. தியேட்டர்காரர்கள் சங்கம் இது பற்றி வாயே திறக்க மறுக்கிறது. இவையெல்லாம் சற்று சரி செய்யப்பட்டால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்தது.
செப்டம்பர் 7ம் தேதி “அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்'' என ஒரே நாளில் 6 படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'டார்ச்லைட்' படத்தில் மட்டும்தான் தெரிந்த நடிகையான சதா நாயகியாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தை விளம்பரப்படுத்தவோ, பத்திரிகையாளர் காட்சியை நடத்தவோ கூட முடியாத நிலைக்கு படத்தின் தயாரிப்பாளர் ஆனானார்.
பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் கதை என்பதும், அதில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சதா நடித்திருந்தார் என்பதும் இந்தப் படத்திற்கு பிளஸ் பாயின்ட்தான். இருப்பினும், அதைக் கூட சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டார்கள். மற்ற படங்கள் இந்த வருடப் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள் மட்டுமே.
செப்டம்பர் 13ம் தேதி 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன. இதில் 'சீமராஜா' படம் மிகவும் அதிகமாக செலவு செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் என்பதால் 'சீமராஜா' படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்தக் கூட்டணி தவறவிட்டது. எந்தவிதமான திருப்புமுனையும் இல்லாத திரைக்கதை, சிரிக்க வைக்காத நகைச்சுவை என பல விஷயங்களில் இயக்குனர் பொன்ராம் கோட்டைவிட்டார். படத்தின் தேவையற்ற சில காட்சிகள், ஹீரோயிசம் ஆகியவை சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை லேசாக அசைத்துப் பார்த்துவிட்டன.
கன்னடத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன 'யு டர்ன்' படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியிட்டனர். சென்னையில் உள்ள வேளச்சேரி என்று சொல்லிவிட்டு, ஆந்திராவில் ஏதோ ஒரு நகரில் எடுக்கப்பட்ட காட்சிகள் இது தமிழ்ப் படம் என்ற உணர்வை ஏற்காமல் செய்துவிட்டன.
செப்டம்பர் 21ம் தேதி 'ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'சாமி 2' படம் மட்டுமே அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2003ல் வெளிவந்த 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை 15 வருடங்கள் கழித்து எடுத்து வெளியிட்டார்கள். முதல் பாகம் ஏற்படுத்திய ஒரு பரபரப்பை இந்த இரண்டாம் பாகம் ஏற்படுத்தாமல் விட்டது. சமயங்களில் ஒரு தெலுங்கு டப்பிங் படம் பார்க்கிற உணர்வையும் இந்தப் படம் ஏற்படுத்தியது. மற்ற படங்கள் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறின.
செப்டம்பர் 27ம் தேதி 'செக்கச் சிவந்த வானம்', 28ம் தேதி 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் வெளிவந்தன. மாதத்தின் கடைசியில் வெளிவந்த இந்த இரண்டு படங்கள்தான் செப்டம்பர் மாதத்தை சிறப்பித்த படங்களாக அமைந்தன. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படம் மல்டிஸ்டார் படமாக அமைந்தது. பலரும் 'மணிரத்னம் இஸ் பேக்' என்று பாராட்டினார்கள். ஆனால், மணிரத்னத்தின் 'டச்' இந்தப் படத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாததால் இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'பரியேறும் பெருமாள்'. சாதி பெயரைச் சொல்லாமலேயே சாதிய வன்மத்தைச் சொன்ன படம். எந்தவித சாதி பேதமும் இல்லாமல் அனைத்து ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்து பாராட்டினார்கள். மாரி செல்வராஜ் போன்ற வாழ்வியல் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களே தமிழ் சினிமாவின் தற்போதைய தேவை.
செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த 14 படங்களில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற படங்களாக அமைந்தது. இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட மற்ற படங்களான 'சீமராஜா, சாமி 2' ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அதிக நஷ்டத்தைத் தராமல் குறைவான நஷ்டத்துடன் தப்பித்துவிடும் என்கிறார்கள்.
எத்தனை முறை சொன்னாலும் அனைத்து இயக்குனர்களும், ஹீரோக்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் ஒன்றுதான் 'கன்டென்ட் இஸ் கிங்'.
செப்டம்பர் மாதம் வெளியான படங்கள்
செப்டம்பர் 7 : அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்
செப்டம்பர் 13 : சீமராஜா, யு டர்ன்
செப்டம்பர் 21 : ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2
செப்டம்பர் 27 : செக்கச் சிவந்த வானம்
செப்டம்பர் 28 : பரியேறும் பெருமாள்