ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2018ம் ஆண்டின் கோடை விடுமுறை திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு சோதனையாகவே கடந்து போனது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரையுலகத்தில் நடந்த ஸ்டிரைக்கால் சினிமா வியாபாரமும் திண்டாடிப் போனது.
ஒரு பெரிய படம் வந்தால் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிடும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தப் பெரிய படம் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி தோல்விப்படமாக அமைந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்படி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 'காலா' படம் தோல்வியைத் தழுவ, அதிகம் எதிர்பார்க்காத படமாக வெளிவந்த 'டிக் டிக் டிக்' வியாபார ரீதியாக நல்ல வசூலைப் பெற்று லாபத்தையும் கொடுத்தது. எதிர்பார்த்தது நடக்காமல் போனது, எதிர்பாராதது நடந்தேறியது என 2018ம் ஆண்டின் ஜுன் மாதம் கடந்து போனது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படம் வந்தால் அடுத்த சில வாரங்களுக்கும், அதற்கு முன்னும் யாரும் படத்தை வெளியிட மாட்டார்கள். ஆனால், 'காலா' படம் வெளிவந்து அதன் ரிசல்ட் என்ன என்பது தெரிய வந்ததும் பலரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர்களது படங்களை வெளியிட்டார்கள். 'காலா' படத்தின் தோல்வியால், ரஜினிகாந்த் அவரை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஜுன் மாதம் 1ம் தேதி “ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்” ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'எக்ஸ் வீடியோஸ்' படம் சமூகத்திற்குத் தேவையான கருத்தைச் சொன்ன படமாக வந்தது. ஆனால், படத்தின் தலைப்பு, இது வேற மாதிரியான படம் என ரசிகர்களை நினைக்க வைத்து தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்காமல் தடுத்துவிட்டது.
டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் மகாபா ஆனந்த் நடித்து வெளிவந்த 'பஞ்சுமிட்டாய்' படம் வந்த சுவடே தெரியாமல் போனது. மகாபாவிற்கு டிவியில் கிடைத்த வரவேற்பு சினிமாவில் கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. மற்ற படங்கள் எண்ணிக்கையைக் கூட்டும் படங்கள் மட்டுமே.
ஜுன் 7ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது ரஜினிகாந்த்தின் 'காலா'. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் போனது. ரஜினி படம் என்றாலே தியேட்டர்களுக்குச் செல்லும் மக்களும் 'காலா'வை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
ரஜினிகாந்த்தை தன்னுடைய சுயவிருப்பத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் பா.ரஞ்சித் என்ற குற்றச்சாட்டே இந்தப் படத்தால் மிஞ்சியது. மருமகன் கடன்பட்டிருக்கிறாரே என நடித்துக் கொடுத்த மாமனார் ரஜினிகாந்த், இந்தப் படத்தால் மருமகனுக்கு மேலும் ஏற்பட்ட கடன் சுமையை அடைப்பாரா என திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தனுஷ், இந்தப்படம் எனக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
அடுத்த வாரமே ஜுன் 14ம் தேதி 'கோலி சோடா 2' மூலம் துணிச்சலாகக் களம் இறங்கினார் இயக்குனர் விஜய் மில்டன். முதல் பாகத்தில் இருந்த உணர்வு ரீதியான காட்சிகள் இந்தப் படத்தில் இல்லாதது படத்தைப் பற்றி அதிகம் பேச வைக்கவில்லை.
ஜுன் 15ம் தேதி “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, கன்னக்கோல், என்னோடு நீ இருந்தால்” ஆகிய படங்கள் வெளிவந்தன. எந்த தைரியத்தில் இந்த மாதிரி படங்களைத் தயாரித்து பணத்தைச் செலவழிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு காட்சிக்காவது இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் கொஞ்சமாவது வந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஜுன் 22ம் தேதி “ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேனோ, கார்கில், டிராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களில் ஓரளவிற்கு அறிமுகமான படங்களாக ''டிராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்” ஆகிய படங்களே இருந்தன. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருக்குள் இருக்கும் நடிகர் ஆசையைத் துறந்தால் அது ரசிகர்களுக்கு நலம் பயக்கும். இயக்குனராக பல அற்புதமான கருத்துக்களைக் கொண்ட படங்களைக் கொடுத்தவர் தற்போதைய 'டிரென்ட்' என்ன என்பது தெரிந்து கொண்டு 'டிராபிக் ராமசாமி'யைத் தொடாமலே இருந்திருக்கலாம்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'டிக் டிக் டிக்' படம் வெளிவரும் போதே சுமார் 4 கோடி பற்றாக்குறையுடன் தான் வெளிவந்தது என்றார்கள். ஆனால், படம் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து படம் வாங்கியவர்களுக்கு லாபம் கொடுத்துள்ளதாம். படத்தின் வெற்றிக்காக 'பார்ட்டி' வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்த 25 கோடி வசூல் என்பது உண்மையாகத்தான் இருக்கும். படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் படத்தின் கதைக் களம் புதிதாக இருந்ததால் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஜுன் 29ம் தேதியன்று 'அசுரவதம், இட்லி, செம போத ஆகாதே' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'அசுரவதம்' சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல கருத்தை முன்வைத்த படமாக இருந்தது. ஆனால், அதைப் படமாகச் சொன்னதில்தான் பிரச்சினையே. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சென்று சேர்ந்திருக்க வேண்டிய படம். என்ன தவறு என்பதை சம்பந்தப்பட்டர்கள் உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு படத்திற்கு தலைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை 'செம போத ஆகாதே' படக்குழுவினர் புரிந்து கொண்டிருப்பார்கள். படத்தின் பெயரே பெண்களை வரவிடாமல் செய்திருக்கும்.
ஜுன் மாதத்தில் வெளிவந்த 18 படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே ஒரு வாரத்தை முழுமையாகக் கடந்திருக்கும். ஒரு சில படங்கள் ஒரு நாளைக் கடந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். ஒவ்வொரு மாதமும் சுமார் 20 படங்கள் வருவதும் அதில் 2 படங்கள் மட்டுமே வெற்றி என்ற நிலையும் எப்போது மாறுமோ, இதை யார் மாற்றப் போகிறார்கள், இதற்கு யார் பொறுப்பு..?.
ஜுன் மாதம் வெளிவந்த படங்கள்...
ஜுன் 1 : ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்
ஜுன் 7 : காலா
ஜுன் 14 : கோலி சோடா 2
ஜுன் 15 : கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, கன்னக்கோல், என்னோடு நீ இருந்தால்
ஜுன் 22 : ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேனோ, கார்கில், டிராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்
ஜுன் 29 : அசுரவதம், இட்லி, செம போத ஆகாதே