ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரான பொன்வண்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. அவரை நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பொன்வண்ணன் எழுதிய ராஜினாமா கடிதம் வெளியாகியுள்ளது.
கடிதம் எழுதிய தேதி : 4 டிசம்பர் 2017
அன்பிற்கினிய சகோதரர், தலைவர் திரு. நாஸர் அவர்களுக்கு...
வணக்கங்களுடன் உங்கள் பொன்வண்ணன்.
2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர்சங்கத்தின் தேர்தலில், நாம்ஒன்றினைந்து செயலாற்றிய போது, நமக்குள் சில பொதுக்கொள்கைகளை வகுத்துக் கொண்டோம்! அதில் முக்கியமானது - தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், இக்காலகட்டங்களில் “அரசியல் சார்பற்று” செயல்பட வேண்டும் என்பது!
அத்துடன் - நாம் பொறுப்புக்கு வந்ததும் “முதல்வர்” ஜெயலலிதா அவர்களிடம் வாழ்த்துபெற சென்றபோது, அவரும் இதையே வலியுறுத்தி பாராட்டினார். அதன் தொடர்ச்சியாகவே கலைஞர், “சோ” ராமசாமி, விஜயகாந்த் என அனைவரையும் அரசியல் சார்பற்று சந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, பல காலகட்டங்களில் நம்மீது அரசியல் சாயம்பூச பலர் முற்பட்டபோது, அதை மறுத்து, அரசியலற்று தான் செயல்படுகிறோம் என “ஊடகங்களில்” பலமுறை நாம் பேட்டிகொடுத்ததை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் .
கடந்த காலங்களிலிருந்து மாறுபட்டு “அரசியலற்ற தலைமையின்' கீழ் நடிகர் சங்கம் செயல்படுகிறது என, நம் நடிகர்களும், பொதுவாழ்வில் உள்ளவர்களும்
நம்மை பாராட்டி வருகிற சூழ்நிலையில்- தற்போது நமது “செயலாளர்” இன்று Rk நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் அனைவரும், தேர்தலில் நிற்க தகுதி படைத்தவர்கள்தான்! அரசியலில் ஈடுபடுவது அவரின் தனிப்பட்ட முடிவுதான் என்றாலும், இது ஏற்கனவே நாம் பேசிவந்ததிற்கு முரனில்லையா..? கடந்தகால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி,குறைசொல்லி,பொறுப்புக்கு வந்த நாம்,
அதே தவறை செய்வது சரியா..? இதையே பதவிக்காலம் முடிந்து இம்முடிவை எடுத்திருந்தால், நட்பு ரீதியாக நான் வரவேற்றிருப்பேன்.
ஆனால் நடிகர் சங்க பொறுப்பையும், அனைவரும் உழைத்து. அதனால் வரும் புகழையும், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், பதவிக்காலத்தில் தன் “அரசியல் தலைமைக்கான” தகுதியாக பயன்படுத்தி கொள்வதில் உடன்படமுடியவில்லை..! அவர் எடுத்திருக்கிற அரசியல் முடிவுகள், இனி வரும் நம் அனைத்து செயல்பாடுகளையும் கேள்விகுறியாக்குகின்றன.! இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற “நடிகர் சங்கதலைமை” என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது..!
இதுவரை சுயநலமற்ற தன்மையுடன் செயல்பட்டு வந்த சேவை மனப்பான்மையே நம் பலமாகவும்,தனித்தன்மையாகவும் இருந்தது..! இதற்குபின் அந்த தனிபெயரை நாம் பெற முடியுமா..?
அத்தோடு, வருகிற ஐனவரி 7ம் தேதி மலேசியாவில் நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு 200க்கு மேற்பட்ட நடிகர்களை அழைத்து போக வேண்டியுள்ளது. நிகழ்சிபற்றி பல விவாதங்கள் செய்யவேண்டியுள்ளது.. இதற்காக பல செயற்குழு உறுப்பினர்கள்,pro,மேனேஐர்கள் உங்க(தலைவர்) மேற்பார்வையில் உழைத்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதைவிட்டு, தேர்தல் களத்திற்கு சென்றுவிட்டால்,இங்கே பொதுச்செயலாளர் வேலையை, முடிவை யார் எடுப்பார்கள்? அது எதிர்காலத்தில் பல சட்ட பிரச்சனையை உருவாக்காதா..?
இந்த அரசியல் நிகழ்வுக்கு பின் அவர் பேசும் கருத்துக்களினால் வரும் விமர்சனங்கள் அனைத்தும், நடிகர் சங்கத்தையும், அதில் பொறுப்பில் உள்ள நம்மையும் இணைத்தே வரும்! இதில் நேரடியாக சம்பந்தப்படாத நாம், விமர்சனத்தை ஏற்கவும் முடியாமல், பதிலும் சொல்ல முடியாமல், இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம்!
அதனால் - நடிகர் சங்க பொறுப்பில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவதலயே, அவரின் தனிப்பட்ட அரசியல் செயல்பாடுகள் என் மேல் படர்வதையும், அதனால் எதிர்காலத்தில் (நான் சம்பந்தப்படாமலே) வரும் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலளிப்பதையும் விரும்பவில்லை!
எனவே, இதற்கு பின் இப்பொறுப்பில் (உப தலைவராக) இருந்தால், எதிர்காலத்தில் என் தனித்தன்மையை இழப்பதுடன்,முரண்பாடான மனநிலையிலும் செயல்படவேண்டிவரலாம்... அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும். உடன்பாடில்லாத விசயங்களில் மவுனம் காப்பது,அல்லது வீன் விவாதங்களில் ஈடுபடுவது இரண்டுமே ஆரோக்கியமானதல்ல.! எனவே இன்றிலிருந்து (4. டிசம்பர் 2017) “துணைத் தலைவர்” பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
தர்மசங்கடமான இச்சூழலில் இந்த முடிவுதான் சரி என எம்மனசு சொல்கிறது. எதிர் காலங்களில் நமக்கான நட்புடன் பயனிப்போம். இதுவரை என்னுடன் இனைந்து பயணித்த உங்கள் அனைவரும் என் அன்பு வணக்கங்கள் !
மற்றபடி சங்கத்தின் வாழ்நாள்உறுப்பினரான”நான்-மலேசிய கலை நிகழ்விற்கும்,உங்களின் அனைத்து சங்க மேம்பாட்டிற்கான நற்செயலுக்கும்,
நீங்கள் அழைத்தால்,வெளியிலிருந்து எனது ஆதரவையும்,உழைப்பையும் எப்போதும் தர தயாராக இருக்கிறேன்!
நான் ஏற்றுக்கொண்ட பதவிக்காலத்தை முடிக்காமல் விலகுவதில் எனக்கு வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு நான் தள்ளப்பட்டதிற்கான என் உணர்வுகளை புரிந்துகொண்டு இக்கடிதத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
இதுபோன்ற நிலையில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, வருகிற செயற்குழுவில் விவாதித்து, எனக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்த வேண்டுகிறேன்.!
என்றும் நட்புடனும்
ப்ரியங்களுடனும்...
பொன்வண்ணன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.