ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலகட்டம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. என்னதான் வாரிசாக இருந்தாலும் அவர்களுக்குள் தனித் திறமை இல்லை என்றால் யாராலும் வெற்றி பெற முடியாது, ரசிகர்களும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். அவருடைய மூத்த மகன் சூர்யா 1997ம் ஆண்டு வெளிவந்த 'நேருக்கு நேர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமகமானார்.
சிவாஜி கணேசனின் வாரிசான நடிகர் பிரபுவிற்குப் பிறகு அழகான நடிகரான அறிமுகமானவர் என்ற பெருமை சூர்யாவுக்கு உண்டு. இருந்தாலும் முதல் படத்தில் தனி நாயகனாக இல்லாமல் விஜய்யுடன் சேர்ந்து தான் அறிமுகமானார். நடிக்கவும் தெரியாத, நடனமாடவும் தெரியாத சூர்யா மீது அப்போதே ஒரு ஆர்வம் ஏற்பட்டது.
அடுத்து கொஞ்சம் தடுமாறினாலும் அவருக்கு ஆபத்பாந்தவனாக வந்த இயக்குனர் பாலா, சூர்யாவின் திரையுலக வாழ்க்கையை 'நந்தா' படத்தின் அப்படியே திருப்பிப் போட்டார். அன்றிலிருந்து இன்று வரை அவ்வப்போது கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ்த் திரையுலகில் சூர்யாவுக்கென 'தானா சேர்ந்த கூட்டம்' நிறையவே இருக்கிறது.
1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி 'நேருக்கு நேர்' படம் வெளிவந்தது. நேற்றுடன் திரையுலகத்தில் 20 வருடங்களைக் கடந்த சூர்யா அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் திரும்பிப் பார்த்து நினைவு கூர்ந்து ரசிக்கத்தக்க படங்களில் நடித்த பெருமை சூர்யாவுக்கு உண்டு. அப்படி ரசிக்க வைத்த சூர்யாவின் சிறந்த பத்து படங்கள் அவரை நல்ல நடிகராகவும் அடையாளப்படுத்தின.
நந்தா
அறிமுகப் படமான 'நேருக்கு நேர்' படத்திலிருந்து தொடர்ந்து “காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப் பார், உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ்” என ஏறக்குறைய ஒரே மாதிரியான தோற்றங்களில் பெரிய வித்தியாசமில்லாத நடிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த சூர்யாவை, நல்ல நடிகராக மாற்றிய படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா. ஒரு முரட்டுத்தனமான இளைஞராக சூர்யாவின் நடிப்பும், முறைப்பும் அவரை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றன. அவருக்குள் ஒளிந்திருந்த நடிகரை வெளிக் கொண்டு வந்ததில் பாலாவுக்குத்தான் முக்கியப் பங்குண்டு.
காக்க காக்க
ஒரு படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தின் கதாபாத்திரப் பெயர் மனதில் பதிந்துவிட்டால் அதைவிட பெரிய வெற்றி எதுவும் கிடையாது. கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டவர்கள் அப்போது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். உயரம் குறைவாக இருக்கும் சூர்யா எப்படி பொருத்தமாக நடிப்பார் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், தன்னுடைய ஸ்டைலான, மிடுக்கான நடிப்பால் அனைத்து கேள்விகளுக்கும் 'அன்புச் செல்வன் ஐபிஎஸ்' கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வாயடைக்க வைத்தார் சூர்யா.
பிதாமகன்
'நந்தா' படத்தின் மூலம் சூர்யாவை ஆக்ஷ்ன் ஹீரோவாகவும், அருமையாக நடிக்கத் தெரிந்தவராகவும் அடையாளப்படுத்திய இயக்குனர் பாலா, சூர்யாவுக்குள் இருக்கும் மற்றொரு காமெடி நடிகரை வெளிக் கொண்டு வந்தார். இப்படி ஒரு நக்கல் கதாபாத்திரத்தை சினிமாவில் காட்ட முடியுமா என சக்தி கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு இருந்தது. படத்தின் கிளைமாக்சைப் பார்த்து அழாமல் இருக்க முடியாது. 'காக்க காக்க' போன்ற ஒரு சீரியசான படம் வந்ததற்கு அடுத்து 'பிதாமகன்' போன்ற படம் சூர்யாவின் திறமையை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பேரழகன்
அனைத்து நடிகர்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கும். வழக்கமாக ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் அப்படி இரட்டை வேடப் படங்களில் நடிப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் 'கூன்' விழுந்த கதாபாத்திரமாக முற்றிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து அதிசயிக்க வைத்தார் சூர்யா. மலையாள ரீமேக்தான் என்றாலும் தமிழில் சுவாரசியமான படமாக அமைந்தது. அப்போது சுமாரான வெற்றியை மட்டுமே பெற்ற இந்தப் படம் சூர்யாவின் நடிப்புக்காகவாது இன்னும் நன்றாக ஓடியிருக்கலாம்.
கஜினி
'நந்தா' படம் சூர்யாவுக்கு எப்படி ஒரு திருப்புமுனையைக் கொடுத்து வேறு ஒரு தளத்திற்கு அவரைக் கொண்டு சென்றதோ, அதே அளவிற்கு 'கஜினி' படத்தின் வெற்றியும் அவரை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றது. 'ஷார்ட் டைம் மெமரி லாஸ்' என்பதைப் பற்றி இந்தப் படத்தின் மூலம்தான் ரசிகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமோ என தன்னுடைய நடிப்பில் அவ்வளவு யதார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தார் சூர்யர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
ஆறு
ஒரு நடிகருக்கு ஏ, பி, சி சென்டர்களில் ரசிகர்கள் இருப்பது அவசியம் என திரையுலகத்தில் சொல்வார்கள். சூர்யா அதற்கு முன்பு வரை கொஞ்சம் 'ஏ' சென்டர் நடிகர் என்ற பெயரில்தான் இருந்தார். அவரை அனைத்து ரசிகர்களுக்கும் சென்று சேர்த்த படம் 'ஆறு'. இந்தப் படம்தான் சூர்யாவை ஒரு பரபர ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டிய படம். கதாபாத்திரத்திற்கேற்றபடி தோற்றம், நடிப்பு, பேச்சு என அனைத்தையும் மாற்றிக் கொள்ளும் பழக்கம் சூர்யாவுக்கு இந்தப் படத்திலும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
வாரணம் ஆயிரம்
மீண்டும் இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்த படம். மீண்டும் வித்தியாசமான சூர்யா, இரு வேடங்களில். இந்தப் படத்தின் பெயரைச் சொன்னாலே இப்போதும் சமீரா ரெட்டியும் மண்டியிட்டு காதலைத் தெரிவிக்கும் அந்த சூர்யா கண் முன் வந்துவிடுவார். தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களில் இந்தப் படத்தையும் தாராளமாகச் சொல்லலாம். இரண்டு வேடங்களிலும் சூர்யாவின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும். இளம் வயதில் வயதான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்திருப்பார். ஒரே படத்தில் மூன்று ஜோடிகளான சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோருடன் வெவ்வேறு விதமான காதல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சூர்யா.
அயன்
தமிழ் சினிமாவின் 'பிரில்லியன்ட் ஆக்ஷ்ன்' படங்களின் வரிசையில் அயன் படத்திற்கு முக்கிய இடமுண்டு. இப்படி ஒரு பரபரப்பான ஆக்ஷன் படம் தமிழ் சினிமாவிலும் வரும் என இயக்குனர் கே.வி. ஆனந்த் கொடுத்த சூப்பர் வசூல் படம். நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக அம்மாவுடன் அவ்வளவு பாசத்துடனும், முதலாளி மீது அவ்வளவு பரிவுடனும், காதலி தமன்னா மீது அவ்வளவு நேசத்துடனும், நண்பர் ஜெகன் மீது நெகிழ்ச்சியுடனும் என அயன் படத்தில் சூர்யாவின் நடிப்பு ஆகச் சிறந்த நடிப்பாகவே இருந்தது.
சிங்கம்
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த பக்கா கமர்ஷியல் படம். போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் சிறப்பாக நடித்துவிட்டால் அவருடைய கிராப் உயரும் என்று திரையுலகத்தில் சொல்வார்கள். ஏற்கெனவே, 'காக்க காக்க' படத்தில் சூர்யா நடித்திருந்தாலும் அதில் காக்கிச் சட்டை அதிகம் அணியாமல் இருப்பார். ஆனால் 'சிங்கம்' படத்தில் அவருடைய காக்கிச் சட்டை நடிப்பு கலக்கலாக அமைந்துவிட்டது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் டைப் நடிப்பு என்றாலும் அந்தப் படத்திற்கும் அந்தக் கதாபாத்திரத்திற்கும் அவ்வளவு பொருத்தமாக அமைந்தது.
7ஆம் அறிவு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் பெயர் சொல்லும்படியான ஒரு படம். கொஞ்சம் சரித்திரமும் கலந்த கதையில் போதி தர்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ என நமக்குள் எண்ணத்தை ஏற்படுத்தினார் சூர்யா. தமிழனின் பெருமையை சீன தேசத்திலும் நிலை நாட்டிய ஒரு துறவியின் கதை. ஒரு முழுமையான சரித்திரப் படத்தில் சூர்யா எதிர்காலத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசிக்க வைத்த படம். போதி தர்மன் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் அரவிந்த் கதாபாத்திரத்திலும் அவர் நடிப்பு அற்புதமான அமைந்தது. 'கஜினி' படம் அளவிற்குப் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சூர்யாவின் சிறந்த படங்களில் இந்தப் படமும் ஒன்று. அவர் நடித்த கதாபாத்திரங்களில் போதி தர்மன் கதாபாத்திரத்திற்கும் தனி இடம் உண்டு.
இந்த 20 வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்காமல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே சூர்யா நடித்திருக்கிறார். அதிகப் படங்கள் என்று பார்ப்பதை விட அவர் நடித்த படங்களும், கதாபாத்திரங்களும் அவரைப் பற்றிப் பேச வைக்கும் படங்களாகவே அமைந்து வருகின்றன. அப்படித்தான் அவரும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
'7ம் அறிவு' படத்திற்குப் பிறகு சூர்யா 'மாற்றான், சிங்கம் 2, அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, பசங்க 2, 24, சி 3' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவற்றிற்கு முன் வெளிவந்த படங்கள் அவரைத் தனியாக அடையாளம் காட்டக் கூடிய படங்களாக இருந்தன.
கடந்த சில வருடங்களில் சூர்யாவின் தேர்வில் கொஞ்சம் சறுக்கல் இருக்கிறது என்ற உண்மையையும் ஒத்துக் கொள்ள வேண்டும். நாம் பட்டியலிட்ட சிறந்த 10 படங்களுடன் ஒப்பிடும் போது கடந்த சில வருடங்களில் வந்த படங்களின் தரம் அவற்றை நெருங்க முடியாது என்பதே உண்மை.
இந்தக் குறையை 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலிருந்து சூர்யா மாற்றுவார் என நம்புவோம்.