ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
64-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ‛தர்மதுரை' படத்தில் ‛‛எந்தபக்கம்...'' என்ற பாடலுக்காக பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. வைரமுத்து பெறும் 7-வது தேசிய விருது இதுவாகும். விருது பற்றி வைரமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், இதில் பெருமையுறுவது நானல்ல, மொழிதான் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வைரமுத்து மேலும் கூறியிருப்பதாவது... அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் பாடல்களை பொறுத்தவரையில் தமிழ் தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.
தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன். இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.
தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகி வருகிறது. காதல் தோல்வி, மன அழுத்தம், அச்சம், வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்த வேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்.
“எந்தப்பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று - நீ
எந்தப் பாதை ஏகும் போதும்
ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காதல் உண்டு - சிறு
கரப்பான் பூச்சி தலைபோனாலும்
வாழ்வதுண்டு
உன் சுவாசப் பையை மாற்று - அதில்
சுத்தக் காற்றை ஏற்று - நீ
இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்
வாழ்ந்துவிடு” - என்று பாடுகிறாள்.
பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன்முனைப்பும், தன்னெழுச்சியும், தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றன. நல்ல சிந்தனைக்கும் மொழிவளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது. இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடர தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள் விபரம் வருமாறு...
1986 : முதல் மரியாதை
1993 : ரோஜா
1995 : கருத்தம்மா மற்றும் பவித்ரா
2000 : சங்கமம்
2003 : கன்னத்தில் முத்தமிட்டால்
2011 : தென்மேற்குப் பருவக்காற்று
2017 : தர்மதுரை