ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட நடிகர், துனியா விஜய் நடிக்கும் சினிமா படப்பிடிப்பில், ஹெலிகாப்டரிலிருந்து அணையில் குதித்த இரண்டு வில்லன் நடிகர்கள், ஏரியில் மூழ்கி பலியாகினர்.
கன்னட நடிகர் துனியா விஜய், மூன்று வேடங்களில் நடிக்கும், மாஸ்தி குடி திரைப்பட படப்பிடிப்பு, கர்நாடகா வில் நடந்து வருகிறது. வில்லன்களாக, அனில், உதய் நடித்து வந்தனர். நேற்று காலை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள திப்பகொண்டனஹள்ளி அணையில் நடந்தது.
நூறு அடி உயரம் : காலை, 11:00-க்கு, திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு துவங்கியது. மதியம், 2:40க்கு, ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீரில் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, அணையில், 30 அடி உயரத்திற்கு நீர் இருந்தது.
பாதுகாப்பு கவசம் : இதற்காக, நடிகர் விஜய், பாதுகாப்பு கவசம் அணிந்து இருந்தார். இயக்குனர் கூறியதும், 100 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த ஹெலிகாப்டரில் இருந்து, வெற்றுடம்புடன் இருந்த அனிலும், உதயும் குதித்தனர். அவர்களை தொடர்ந்து, விஜய் குதித்தார்; பின், பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால், விஜய் நீந்தி கரைக்கு வந்து விட்டார். ஆனால், அனில், உதய் நீரில் தத்தளித்தனர். இதைப் பார்த்த படக்குழுவினர், ஏற்கனவே தயாராக இருந்த மோட்டார் படகில், அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக சென்றனர். திடீரென மோட்டார் பழுதடைந்ததால், படகு பாதி வழியிலேயே நின்றுவிட்டது. அதற்குள், இரண்டு நடிகர்களும் நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்பு படையினர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர், ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேற்று இரவு வரை, இருவரும் மீட்கப்படாததால், அவர்கள் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாகசத்தால் நேர்ந்த துயரம் : நீரில் மூழ்கிய இருவரும், படப்பிடிப்பு தொடர்பாக, நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அனில் கூறியதாவது: ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீரில் குதித்து சாகச காட்சியில் நடிக்கும்படி, ஸ்டன்ட் இயக்குனர் கூறினார். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், நடிக்க போகிறேன். சாகச காட்சியில் நடிப்பதால், பயமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உதய் கூறியதாவது: ஏற்கனவே எனக்கு காய்ச்சல் உள்ளது; நீச்சலும் தெரியாது. ஒருவேளை தண்ணீரில் மூழ்கினால், மீண்டு வரும் தைரியம் உள்ளது. எனக்கு மாடி மீது நின்று பார்த்தாலே தலை சுற்றும். இப்போது ஹெலிகாப்டரிலிருந்து, 100 அடி உயரத்திலிருந்து கீழே குதிக்கும் காட்சியில் நடிப்பதை நினைத்தால் பயமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிபந்தனை மீறல் : ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் அனுமதி கோரியதால், ஆழம் இல்லாத பகுதியில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், பெங்களூரு குடிநீர் வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், படக்குழுவினர், நிபந்தனையை மீறி, ஆழமான பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதால் அசம்பாவிதம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.