ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஆலியா பட். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் உட்தா பஞ்சாப். சர்ச்சையோடு, கோர்ட் படியேறி எல்லாம் சென்று வந்துள்ள இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்து ஆலியா பட் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது..
உட்தா பஞ்சாப் படத்தில் எதற்காக நடித்தீர்கள்?
உட்தா பஞ்சாப் கதையை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. போதைக்கு எதிராக பலதரப்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அப்படி வெளிவந்த படங்கள் எல்லாமும் போதையையும், அதன்தீமையையும் முழுசாக சொல்லவில்லை. ஆனால் உட்தா பஞ்சாப் படம் அப்படியல்ல, போதைக்கு அடிமையானவர்களை பற்றி முழுமையாக சொல்லியிருக்கிறோம். இந்தப்படத்தில் மொத்தம் நான்கு கதைகள், நான்கு கதைகளும் நான்கு பேருடைய வாழ்க்கையையும், போதைக்கு அடிமையானவற்றையும் சொல்லப்போகிற படம். உட்தா பஞ்சாப் படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு எதுவும் இல்லை, இப்படம் இப்படியொரு சிக்கலில் மாட்டும் என்றும் நினைக்கவில்லை. படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் இப்படத்திற்கு ஏண்டா போனோம் என்று நிச்சயமாக நினைக்கமாட்டார்கள்.
படத்தில் பீகாரி பெண்ணாக நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
உட்தா பஞ்சாப் படத்தில் நான் பீகார் பெண்ணாக நடித்ததோடு பீகாரி மொழியையும் பேசியிருக்கிறேன். பீகாரி மொழி பேச எனக்கு சிரமமாக இல்லை, ஆனால், பீகாரி பெண்ணாக நடிக்கத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. நானோ சிட்டியில் வளர்ந்த பொண்ணு, பாலீஷ் போட்டது போன்று மேனி, எனது தோற்றம், நடை, உடை... உள்ளிட்ட எல்லா விஷயங்களும் நகரத்து பெண்ணை பிரதிபலிப்பது போன்று இருக்கும். ஆனால் படத்தின் கதைக்கோ நான் கிராமத்து பெண் போன்று இருக்க வேண்டும். நடிகர் பங்கஜ் திரிபாதியும், இயக்குநர் அபிஷேக் சவுபே தான் நான் எந்த மாதிரி நடிக்க வேண்டும் சொல்லிக்கொடுத்தார்கள். குறிப்பாக பீகாரி கிராமத்து பெண் போன்று நடிக்க நடிகர் பங்கஜ், எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுத்தார்.
ஹைவே படத்தை போல் உட்தா பஞ்சாப் படத்திலும் உங்களுக்கு கிளாமர் அல்லாத ரோல் தான் போல...?
ஆமாம். பொதுவாக பாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் தங்கள் ரோலில் கொஞ்சம் கிளாமரை எதிர்பார்ப்பார்கள். ஆனால் எனக்கு இந்தமாதிரி ரோல் அமைந்தது பற்றி கவலையில்லை. உட்தா பஞ்சாப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்துவிட்டு நானே அதிர்ச்சிக்குள்ளானேன். ஆனால் எனது சக நடிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் இந்த ரோலில் நான் சிறப்பாக நடித்தேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நான் வித்தியாசமான ரோலில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதோடு அந்த ரோல் எனது முந்தைய படத்தின் ரோலோடு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று எண்ணுகிறேன். என் சினிமா கேரியரில் கிளாமர் அல்லாத வேடங்களில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறேன்.
உங்களின் முந்தைய படமான ஷாந்தார் சரியாக போகவில்லை, உங்களின் மனநிலை எப்படியிருந்தது?
என்னுடைய படம் தோல்வியடைந்த போது மிகவும் வருத்தப்பட்டேன். யாரும் தோல்வி படம் கொடுக்க வேண்டும் என்று நடிப்பதில்லை. சில சமயங்களில் அந்தமாதிரி நடந்து வருகிறது. சில படத்தில் கதை நன்றாக இருக்கும், ஆனால் அந்த கதைக்கு ஏற்ற வலுவான காட்சிகள் திரையில் தெரியாது. இந்த காரணத்திற்காகத்தான் ஷாந்தார் படமும் தோல்வியடைந்தது. படத்தில் நல்ல கதையிருந்தது, ஆனால் அதை சிறப்பாக படத்தில் காண்பிக்கவில்லை. மேலும் என்னுடைய ஒரு படம் தோல்வி அடைந்ததது என்றால் அடுத்தப்படத்தை வெற்றி படமாக கொடுக்க ஒரு கடுமையாக உழைப்பேன்.
உட்தா பஞ்சாப் படத்திற்கு ரசிகர்கள் எந்தளவுக்கு வரவேற்பு தருவார்கள்?
உட்தா பஞ்சாப் படம் மட்டுமல்ல மற்றவர்களின் படமும் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து தான் அமையும். இந்தப்படத்தை பொறுத்தமட்டில் 50-50 இருக்கும். இப்படத்தை பார்த்துவிட்டு யாராவது ஒருவர் போதை பழக்கத்தை கைவிட்டால் கூட மகிழ்ச்சி தான். ஹைவே படத்திற்கு பிறகு பெண்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு அதிகளவில் குரல் கொடுத்து வருகின்றனர். அதேப்போன்று உட்தா பஞ்சாப் படத்திற்கும் போதையில் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் அதை எப்படி எதிர்கொள்வது என்ற விஷயத்தை தெரிந்து கொள்வார்கள்.
இன்றைய இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா?
அப்படி சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமாக இருக்கிறார்கள். இணையதளம் என்ற ஒன்று அவர்களை ஒரே கிளிக்கில் எல்லாவற்றையும் வீட்டிற்கே கொண்டு வர செய்கிறது. இன்றைய இளைஞர்கள் அனைவரும் மிகவும் முற்போக்கான சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். ஆனால் அதோடு அவர்களுக்கு கொஞ்சம் பொறுப்புணர்வும் வேண்டும். இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் யாருக்கும் தங்கள் மீதோ, தங்கள் குடும்பத்தின் மீதோ கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு ஆலியா பட் கூறினார்.