தென்றல் சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடித்து தமிழ்நாட்டு பெண்களின் இதயங்களில் குடியேறியவர் ஸ்ருதிராஜ். 15 திரைப்படங்களில் நடித்தபோது தனக்கு கிடைக்காத பெயரையும், புகழையும் அந்த ஒரே சீரியலில் வாங்கிக்கொடுத்ததால் அதன்பிறகு சினிமாவை மூட்டை கட்டி வைத்து விட்டு முழுநேர சின்னத்திரை நடிகையாகி விட்டார் ஸ்ருதி.
அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடித்த ராஜி கேரக்டரும் அவருக்கு ரொம்ப நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் வக்கீல் வேடத்தில் நடித்து வரும் அவர், அபூர்வ ராகங்களில் வேலைக்காரி வேடத்தில் நடிக்கிறார். அழுக்கு படிந்த முகத்துடன் பாவாடை தாவணி கெட்டப்பில் அவர் நடித்து வரும் பவித்ரா கேரக்டருக்கு, நாளுக்கு நாள் ரசிகைகள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்களாம்.
இதுபற்றி ஸ்ருதிராஜ் கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை பகட்டான பணக்கார வேடங்களில் நடிக்கும் வேடங்களைவிட, ஏழை பெண்ணாக நடிக்கும் கேரக்டர்களுக்குத்தான் நேயர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது. கதைப்படி நான் சந்திக்கிற பிரச்சினைகள், அதை தீர்க்க நான் படும் கஷ்டங்களைப் பார்த்து சீரியல் பார்க்கும் பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள். அதில் நான் நடிக்கிறேன் என்பது அவர்களுக்கு போதும் அவர்களால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. எங்காவது என்னை பார்த்து விட்டால் கையை பிடித்துக்கொண்டு அன்போடு பேசுகிறார்கள். தங்களது குடும்பத்தில் ஒருத்தி போலவே பேசுகிறார்கள்.
அந்த வகையில், இப்போது நான் நடித்து வரும் அபூர்வ ராகங்கள் தொடர் போகப்போக பெண்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் ரீச்சாகி விடும் என்று கூறும் ஸ்ருதிராஜ், இதன்பிறகு இதைவிட அழுத்தமான கதைகளில் சவால்களை எதிர்கொள்ளும் புரட்சிகரமான வேடங்களில் நடிப்பதில் தனக்கு அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.