மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சினிமா எனும் கனவுலகம், சிலருக்கு கனவாகவும், சிலருக்கு கனவிலும் நினைக்காததாகவும் அமைகிறது. வருடத்திற்கு எத்தனையோ புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள், ஆனால், அவ்வளவு பேரும் முன்னணி நட்சத்திரங்களாக வருவதில்லை.
விளக்கு வெளிச்சம் அனைவர் மீது பட்டாலும் வெற்றி வெளிச்சம் ஒரு சிலர் மீது மட்டுமே அதிகம் விழுந்து அவர்களும் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். அப்படி நான்கைந்து நட்சத்திரங்கள் நடித்த ஒரு படத்தில் அறிமுகமானாலும் அவர்களில் தனியாகத் தெரிந்து அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று 25வது படம் வரை தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. நாளை வெளிவர உள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' அவருடைய 25வது படமாக வெளிவர உள்ளது. இந்த சாதனையை அவர் சரியாக பத்து ஆண்டுகளில் எட்டிப் பிடித்திருக்கிறார்.
அறிமுகம்
இஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜாம்ஷெத் அவ்வப்போது மாடலிங்கும் செய்து கொண்டிருந்தார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஜீவா, ஜாம்ஷெத்தை அழைத்து கேமரா டெஸ்ட் செய்தார். அது திருப்தியளிக்கவே ஜீவா இயக்கிய 'உள்ளம் கேட்குமே' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக 'ஆர்யா' என பெயர் வைத்து அறிமுகப்படுத்தினார். அந்தப் படம்தான் நடிகைகள் அசின், பூஜா ஆகியோருக்கும் அறிமுகப்படம். 2002ம் ஆண்டில் ஆரம்பமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாகி பின்னர் ஒரு வழியாக 2005ம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால், அதற்குள் ஆர்யா நடித்த இரண்டாவது படமான 'அறிந்தும் அறியாமலும்' படம் முதலில் வெளிவந்து ஆர்யாவின் அறிமுகப்படம் என்ற பெயரைப் பெற்றது.
'அறிந்தும் அறியாமலும்' படத்தில் பிரகாஷ்ராஜின் தத்தெடுக்கப்பட்ட மகனாக ஒரு ரவுடித்தனமாக கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருந்தார். நடிகனாக நுழைந்த முதல் படமான 'உள்ளம் கேட்குமே' படத்தில் ஒரு சாஃப்ட்டான கதாபாத்திரமாக இருந்தாலும், நடிகனாக வெளியில் தெரிந்த 'அறிந்தும் அறியாமலும்' படம் ஒரு ஆக்ஷன் கதாபாத்திரமாக அமைந்ததால் அதுவே ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, தமிழ் ரசிகர்களிடமும் ஆர்யா யார் என்பதை அறிந்து கொள்ளவும் வைத்தது.
ஆரம்பம்
முதலில் வெளிவந்த 'அறிந்தும் அறியாமலும்' படம் ஆர்யாவுக்கு கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இருந்தாலும் ஆரம்பத்தில் எல்லா நடிகர்களுக்கும் வரும் தடுமாற்றம் ஆர்யாவுக்கும் வந்தது. அடுத்தடுத்து அவர் நாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெறாமல் போயின. நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த 'ஒரு கல்லூரியின் கதை', இகோர் இயக்கத்தில் வெளிவந்த 'கலாபக் காதலன்', சரண் இயக்கத்தில் வெளிவந்த 'வட்டாரம்', விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளிவந்த 'பட்டியல்', புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த 'ஓரம் போ' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
ஆனாலும் மேலே சொன்ன ஐந்து படங்களிலும் ஆர்யாவின் கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைந்தது. 'ஒரு கல்லூரியின் கதை' படத்தில் ஒரு கல்லூரி மாணவராகவும், 'கலாபக் காதலன்' படத்தில் பொறுப்பான கணவனாகவும், 'வட்டாரம்' படத்தில் கொஞ்சம் ஸ்டைலிஷான அடியாளாகவும், 'பட்டியல்' படத்தில் லோக்கல் அடியாளாகவும், 'ஓரம் போ' படத்தில் ஆட்டோ டிரைவராகவும் நடித்திருந்தார். ஒரு படத்தின் கதாபாத்திரத்தின் சாயல் மற்ற எந்தப் படத்திலும் இல்லாத வகையில் இந்த ஐந்துப் படங்களில் அமைந்திருந்தாலும், வியாபார ரீதியாக இந்தப் படங்கள் வெற்றி பெறாமல் போனது ஆர்யாவுக்கு ஒரு தொய்வாகவே அமைந்தது.
திருப்பு முனை
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் எப்படியாவது ஒரு திருப்பம் அமைந்துவிடும். அப்படிப்பட்ட திருப்பம் ஆர்யாவுக்கு இயக்குனர் பாலா வடிவத்தில் வந்தது. ஒரு முன்னணி நடிகர் நடிக்க வேண்டிய 'நான் கடவுள்' படத்தை அவர் நடிக்க மறுக்க, அந்த வாய்ப்பு ஆர்யாவைத் தேடி வந்தது. விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுக்கு அவர்களுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தைத் தந்த இயக்குனர் பாலாவின் படமாயிற்றே, விடுவாரா ஆர்யா. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என 'நான் கடவுள்' படத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை சுலபத்தில் யாரும் ஏற்கத் தயங்குவார்கள். ஆனால், இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையில் தன்னை முழுமையாக 'நான் கடவுள்' படத்தில் ஈடுபடுத்திக் கொண்ட ஆர்யாவை அந்தக் கடவுள் காப்பாற்றிவிட்டார். அந்தப் படத்தில் நடித்தது ஆர்யாவுக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்து. 'நான் கடவுள்' படத்திற்கு முன், படத்திற்குப் பின் என ஆர்யாவின் திரையுலக வாழ்க்கையைப் பிரிக்கும் அளவிற்கு அந்தப் படம் அமைந்தது.
கமர்ஷியல் வெற்றி
'நான் கடவுள்' படம் திறமை ரீதியில் பெயரை வாங்கிக் கொடுத்த அளவிற்கு வியாபார ரீதியில் பெயரை வாங்கித் தரவில்லை. அடுத்து ஆர்யா நடித்து வெளிவந்த 'சர்வம்' திரைப்படமும் ஆர்யாவை ஏமாற்றியது. இருந்தாலும் அடுத்தடுத்து வெளிவந்த 'மதராசப்பட்டிணம்', படம் பெயருடன், கமர்ஷியலான வெற்றியையும் பெற்றது. அதற்கும் அடுத்து வெளிவந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் முழுக்க முழுக்க மிகப் பெரும் கமர்ஷியல் வெற்றிப் படமாக அமைந்து ஆர்யாவுக்கென மார்க்கெட்டில் ஒரு பெயரையும் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தின் வெற்றிதான் ஆர்யாவை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாக இருக்காது. அந்தப் படம் போல் வரப் போகும் படங்கள் அமையும் என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடமும், வினியோகஸ்தர்களிடமும் இருப்பது இயல்பான ஒன்றுதான்.
மல்டி ஸ்டார் படங்கள்
பொதுவாக ஓரளவிற்குப் பெயர் கிடைத்தவுடன் எந்த ஒரு ஹீரோவும் வேறொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பதை தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தவிர்ப்பார்கள். ஆனால், ஆர்யா அது பற்றியெல்லாம் பெரிதாக நினைக்காமல் இன்றுவரை மல்டி ஸ்டார் படங்களில் நடித்து வருகிறார். அவர் அறிமுகமான 'உள்ளம் கேட்குமே' படத்திலும் ஷாம்-உடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின் 'நான் கடவுள்' படத்திற்குப் பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் 'அவன் இவன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் தன் நண்பரான விஷாலையும் பாலாவிடம் நெருக்கமாக அறிமுகப்படுத்தி வைத்து இருவருமே சேர்ந்து நடித்தார்கள். “வேட்டை' படத்தில் மாதவனுடன், 'ராஜா ராணி' படத்தில் ஜெய்யுடன், 'ஆரம்பம்' படத்தில் அஜித்துடன், சமீபத்தில் வளிவந்த 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தில் ஷாம், விஜய் சேதுபதி ஆகியோருடனும் ஆர்யா இணைந்து நடித்துள்ளார். அடுத்து 'பெங்களூர் டேய்ஸ்' படத்திலும் பாபி சிம்ஹா, ராணா டகுபதி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.
சிறப்புத் தோற்றங்கள்
'கேமியோ' எனப்படும் சிறப்புத் தோற்றத்தில் இந்தக் காலத்தில் அதிகமான படங்களில் நடித்தவர் என ஆர்யாவைக் குறிப்பிடலாம். சமீபத்தில் வெளிவந்த 'இன்று நேற்று நாளை' படம் வரை பல படங்களில் நட்புக்காக சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
கிசுகிசுக்கள்
அதிகமான கிசுகிசுவில் சிக்கி வரும் ஒரு நடிகராக ஆர்யா இருந்து வருகிறார். எந்த ஹீரோயினுடன் நடித்தாலும் சரி ஆர்யாவைப் பற்றியும் அவருடன் இணைந்து நடிக்கும் நடிகையைப் பற்றியும் கிசுகிசு கண்டிப்பாக வந்து விடுகிறது. மற்ற ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு ஆர்யாவுக்கும் ஹீரோயின்களுக்குமான நட்பும், பழக்கமும் அதிகம் இருக்கிறது என கோலிவுட்டே கிசுகிசுக்கிறது.
மற்ற மொழிகள்
தமிழில் மட்டுமல்லாது இரண்டு மலையாளம், ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா.
தயாரிப்பாளர்
நடிகராக இருப்பதோடு தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் ஆர்யா. நாளை வெளிவர உள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தை அவரோ சொந்தமாகத் தயாரித்து, வெளியிடகிறார். அது மட்டுமல்ல 'அழகுராஜா' படத்தின் தோல்வியில் மற்ற ஹீரோக்களால் கண்டு கொள்ளப்படாமல் இருந்த இயக்குனர் ராஜேஷை அழைத்து இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார். 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் மூலம் ஆர்யாவை கமர்ஷியல் ஹீரோவாகவும் வெற்றி பெற வைத்தவருக்கு ஆர்யா செய்த நன்றிதான் அது என்று திரையுலகமும் ஆர்யாவை பாராட்டத் தவறவில்லை.
பத்து வருடங்களில் 25 படங்கள் என்பது இந்தக் காலத்தில் பெரிய சாதனைதான். படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தாலும், கடந்த சில படங்களாக கமர்ஷியல் பாதையில் மட்டுமே ஆர்யா பயணித்து வருகிறார். மீண்டும் 'நான் கடவுள், அவன் இவன்' போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் பட்சத்தில் தன்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ளலாம்.
25 படங்கள் 50 படங்களாகி விரைவில் 100 படங்களைத் தொட ஆர்யாவுக்கு வாழ்த்துகள்...!