ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. காலத்தால் அழியாத பல்லாயிரம் பாடல்களை கொடுத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று(ஜூலை 14ம் தேதி) காலை 4.15 மணியளவில் காலமானார்.
திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இசை கச்சேரி முழங்க உடல் தகனம்
தொடர்ந்து இன்று காலை எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக அவரது இசையில் உருவான புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... என்ற பாடலுடன் இறுதி ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து அவரது உடலுக்கு முன்பாக இசை கச்சேரிகள் நடத்தியபடி இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
சுமார் 2.30 மணிநேரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட எம்.எஸ்.வி.யின் உடல் நண்பகல் 12.00 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தை வந்தடைந்தது. எம்.எஸ்.வி.யின் மகன்கள் மற்றும் உறுவினர்கள் இறுதிசடங்குகளை மேற்கொண்டனர். பின்னர் மின்மயானத்தில் வைத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் கமல்
எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதிசடங்கில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், எம்எஸ்வி., அவர்களின் உடல் மறைந்தாலும் இசையால் என்றும் வாழ்வார் என்று கூறினார்.
கமல் தவிர்த்து மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வானமும் அழுதது
எம்.எஸ்.வி.க்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், வானமும் தன் பங்கிற்கு கண்ணீர் துளியாய் சிறிய மழைச்சாரலையும் பொழிந்தது.
மெல்லிசை மன்னர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் கொடுத்த காலத்தால் அழியாத பாடல்களும், இசையும்... நிச்சயம் இந்த உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் திண்ணம்!