14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழ்த் திரையுலகம் கடந்த ஆறு மாத காலமாக பல சோதனைகளை சந்தித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சோதனைகள் எல்லாமே ஒரு தொழில் நேர்மை சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் நம்பிக்கையும், நேர்மையும், நாணயமும் தவறும் போது அந்தத் தொழிலே பாதிக்கப்பட்டு விடுகிறது.
எந்த விதமான ஒப்பந்தப் பத்திரமும் இல்லாமல் சில பல தொழில்களில் வெறும் வார்த்தைகளை நம்பி மட்டுமே பல லட்சங்கள், ஏன் சில சமயம் பல கோடிகள் வரை வியாபாரம் நடக்கிறது. ஆனால், திரையுலகத்தில்தான் ஒப்பந்தம் போட்டாலும் அதை மீறுவதும், நஷ்டம் வந்தால் திருப்பிக் கேட்பதுமாக பல விஷயங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
இதற்கெல்லாம் முதல் புள்ளி வைத்தது போல 'லிங்கா' விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமானது. படம் வெளியான நான்கைந்து நாட்களிலேயே படம் நஷ்டம் என்று அந்தப் படத்தை வாங்கியி வினியோகஸ்தர்களே பேட்டிகளைக் கொடுக்க ஆரம்பித்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இன்று வரை அந்த விவகாரம் வளர்ந்து கொண்டேயிருக்கிறதே தவிர, அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சங்கங்களும் இரும்புக் கரம் கொண்டு அவற்றை அடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பக்கம் தயாரிப்புச் செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்க, மறுபக்கம் மல்டிபிளக்ஸ்களில் டிக்கெட் கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாகிக் கொண்டேயிருக்க படத்தைத் தயாரிக்கும் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களும் குறைந்து வருகிறார்கள், படம் பார்க்க வரும் ரசிகர்களும் குறைந்து வருகிறார்கள்.
இன்று படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் பலரில் முக்கால்வாசிப் பேர் புதியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் ரசனையாக படம் எடுக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. படங்கள் அதிகம் வருவதில் எந்த சாதனையும் இல்லை, தரமான படம் வருவதிலும், வசூலைக் குவிக்கும் படம் வருவதிலும்தான் சாதனை இருக்கிறது என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது. நானும் ஒரு சினிமா தயாரிப்பாளர் என்ற எண்ணத்தில் தங்களைக் காட்டிக் கொள்ளவே பலர் படம் எடுக்க வருகிறார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு படத்திற்குப் பிறகு அவர்களைப் பார்க்கவும் முடியவில்லை. அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்களோ வருடத்திற்கு ஒரு படம் தயாரித்தால் பெரிது என ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். அதற்கு இன்றைய அசாதாரணமான சூழ்நிலையே காரணமாக இருக்கிறது.
ஒரு படம் வெற்றி பெற்று விட்டாலே அந்தப் படத்தின் நாயகன் தனது சம்பளத்தை சில கோடிகள் உயர்த்தி விடுகிறார். தன்னால் அவ்வளவு வியாபாரம் நடக்கிறது, அவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று பக்கத்தில் இருப்பவர்கள் அந்த நாயகனை உசுப்பேற்றி விட்டு அவரது சம்பளத்தை உயர்த்தவும் காரணமாக இருக்கிறார்கள். நாயகர்களின் சம்பளத்திற்கே சில கோடிகள் போய் விடுகிறதென்றால் அதன் பின் தயாரிப்புச் செலவு, விளம்பரச் செலவு என மற்ற செலவுகளையும் கோடிகளில் கூட்டினால் ஒரு சிறிய, தரமான படத்தை எடுத்து முடிக்கவே 10லிருந்து 15 கோடி வரை ஆகி விடுகிறது.
ஒரு பக்கம் ஒரு கோடியில் படத்தை முடித்தோம், இரண்டு கோடியில் படத்தை முடித்தோம் என்று சிலர் சொல்லிய படத்தைப் பார்க்கும் போது அதன் தரம் எப்படி இருக்கிறது என்று சாதாரண ரசிகர்களே சொல்லிவிடுகிறார்கள். இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் சம்பளத்தைக் கேட்டால் மாத வருவாய் வாங்கிக் கொண்டு காலத்தைக் கடத்தி வரும் குடும்பத்தினர் வாய் மீது விரல் வைத்து ஆச்சரியப்பட மாட்டார்கள், தலைமீது கை வைத்துதான் ஆச்சரியப்படுவார்கள். அந்த முன் வரிசை நடிகர்களுக்கு சாதாரணமாக 30 கோடி ரூபாய் வரை சம்பளம் என்று திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். மற்றவர்களின் சம்பளம், தயாரிப்புச் செலவு ஆகியவற்றையும் கணக்கில் சேர்த்தால் 50 கோடியிலிருந்து 60 கோடி ரூவாய் வரை வந்துவிடும். அவ்வளவு பணத்தை முதலீடு செய்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள்.
காலம் கடந்து போக, கடந்து போக அனைத்துமே மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் டிஜிட்டல் வந்ததால் சிக்கனமாகப் படத்தை முடிக்கலாம் என்கிறார்கள். ஆனால், சம்பளம் என்ற விஷயம் எட்டாத உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. அப்படியென்றால் புதிதாக வரும் இயக்குனர்களை ஃபிலிமில் படமெடுங்கள் என்று சொன்னால் பட்ஜெட் எங்கே போகும், பார்த்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் சிக்கனத்தைக் கொடுக்க, அதே தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் என படத்தின் பட்ஜெட்டை மறுபக்கம் கூட்டிக் கொண்டே போகிறார்கள்.
சரி, நமது அபிமான நடிகர்களின் படங்கள் தியேட்டருக்கு வந்து விட்டது போய்ப் பார்க்கலாம் என்றால், தியேட்டருக்குள் நுழைவதிலிருந்தே மீட்டர் வட்டி போல ஒரு படத்தைப் பார்க்கும் செலவுகள் வானுயரப் பறந்து விடுகின்றன. யாராவது அதைக் குறைப்பதைப் பற்றிப் பேசுகிறார்களா என்றால் இல்லை. பல மல்டிபிளக்ஸ்களில், ஒரு மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் 50 ரூபாய் என்றால் , மூன்று மணி நேர பார்க்கிங் கட்டணம் 150 ரூபாய், ஆனால் ஒரு டிக்கெட் விலையோ 120 ரூபாய் மட்டுமே. இடைவேளையில் காபி குடிக்கலாம் என்றால் 25 ரூபாய், பாப் கார்ன் 50 ரூபாய் என அது வேறு மாதிரியான கொள்ளையாக இருக்கிறது.
படம் பார்க்க வருபவர்களில் 75 சவதவீதம் பேர் நடுத்தரக் குடும்பத்தினர்தான் என்பது யாருக்கும் புரியாமல் இருக்கிறதா அல்லது புரிந்தும் தெரியாமல் இருப்பது போல் நடிக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பதில் ஆரம்பித்து, தயாரிப்புச் செலவையும் குறைத்து, தியேட்டர்களின் டிக்கெட் விலையையும் நியாயமாக வைத்து ஒரு படத்தை வெளியிட்டால் அந்தப் படம் ஏன் லாபத்தைக் கொடுக்காது. ஒரு படத்திலேயே கோடி கோடியாக சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது.
இதே தமிழ்த் திரையுலகத்தில்தான் 150 படங்களை தயாரித்த நிறுவனங்களும் இருக்கின்றன, 100, 50 படங்களைத் தயாரித்த நிறுவனங்களும் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஏன் படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி விட்டார்கள். அவர்களுக்குத் தெரியாத சிக்கன நடவடிக்கையா, ஆனால், அவர்களையும் மீறி இன்று மற்றவர்களின் கை ஓங்கிப் போனதுதான் இதற்குக் காரணம். சினிமாவில் முதலாளிகள் வரும் போதுதான் தொழிலாளிகளும் சிறப்பாக இருக்க முடியும். ஒரு காலத்தில் அந்த முதலாளிகளாக இருந்த தயாரிப்பாளர்கள் இன்று தங்களது முதலாளித்துவத்தை இழந்து விட்டார்கள். அவர்களுக்குரிய மரியாதையும், மதிப்பும் போய்விட்டது. சினிமாவை ரசனையாக, பக்தியாகத் தயாரித்தவர்கள் இருந்தவரை சினிமாவும் நன்றாகவே இருந்தது, அவர்களை சுதந்திரமாக, அவர்களது எண்ணங்களுக்கு ஏற்றபடி படமெடுக்க வைத்தால் இந்தத் திரையுலகம் இன்னும் ஏற்றம் பெறும்.
அடுத்து, ரசிகர்களையும் சொல்லியே ஆக வேண்டும். இன்று சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் ஒரு படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான விஷயங்களை வேண்டுமென்றே பரப்பி அந்தப் படத்தின் ஆயுளை சீக்கிரமே முடித்து விடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் அடுத்த ரசிர்களின் படங்களைக் கிண்டலடிப்பதும், அந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை என்று எழுதித்தள்ளுவதும் வாடிக்கையாகி வருகிறது. இங்கு எந்தப் படமுமே 100 சதவீத தரத்துடன் வருவதில்லை, குறைகள் இல்லாத படமும் இல்லை. ஆனால், சிறு குறையைக் கூட பெரிதாக்கி, ஊதி என் தலைவனின் படத்தை விட அந்தப் படம் அதிக நாள் ஓடி விடுவதா என முடிந்தவரை அதைக் கெடுத்து விடுகிறார்கள்.