ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று இந்தக் காலத்துப் பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள், இன்று ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள். விமானம் ஓட்டுவது வரை அவர்கள் உயரப் பறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆண்கள்தான் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்ற பிற்போக்குத்தனமான விஷயங்களுக்கு முடிவு கட்டிவிட்டார்கள். பெண்களால் நுழைய முடியுமா என்று விவாதிக்கப்பட்ட சில துறைகளில் கூட அவர்கள் நுழைந்து பல சாதனைகளை புரிந்திருக்கிறார்கள்.
அரசியல், சினிமா, ஊடகம், ராணுவம், மருத்துவம், பொறியியல், கட்டுமானம் என எந்தத் துறைகளை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் மகத்துவம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக திரைப்படத் துறையிலும் பல பெண்கள் நுழைந்து வியப்புக்குரிய படைப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பலர் உதவி இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் போகப் போக தமிழ் சினிமாவில் பெண்களின் சாதனைகள் நடிப்புத் துறையையும் மீறி படைப்புத் துறையில் பல புதுமைகளை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக தடம் பதித்து தங்கள் படங்களின் மூலம் மற்றவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த சில பெண் இயக்குநர்களைப் பற்றிப் பார்ப்போம்.
லட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 70, 80களில் முன்னணி நடிகையாக இருந்த லட்சுமி 1980ம் ஆண்டு வெளிவந்த 'மழலைப் பட்டாளம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஒரு கலகலப்பான குடும்பக் கதையாக அமைந்த இந்தப் படம் இன்றளவும் ரசித்துப் பார்க்கும் படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
சுஹாசினி
திரைப்படக் கல்லூரியில் அந்தக் காலத்திலேயே ஆண்களுக்கு நிகராக ஒளிப்பதிவுப் பயிற்சியைப் பெற்றவர் சுஹாசினி. ஆனால், திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமாகி சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர். 1995ம் ஆண்டு 'இந்திரா' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். விமர்சன ரீதியாக நல்ல படம் என்ற பெயரைப் பெற்ற படம் இது.
ரேவதி
தமிழில் இதுவரை ரேவதி எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும் 2002ம் ஆண்டு வெளிவந்த 'மித்ர மை பிரண்ட்' என்ற ஆங்கிலப் படம் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து ஹிந்தியில் 'பிர் மிலேங்கே, மும்பை கட்டிங்' என்ற படங்களையும், மலையாளத்தில் 'கேரளா கஃபே' படத்தையும் இயக்கியுள்ளார்.
ரோகிணி
80களில் நாயகியாக வலம் வந்து , அதன் பின் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வரும், பிரபல மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகிணி, 'அப்பாவின் மீசை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ்
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் 2012ம் ஆண்டு வெளிவந்த '3' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'வை ராஜா வை' என்ற கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா 2014ம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தியாவிலேயே மோஷன் கேப்சரிங் முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை இயக்கியவர் என்ற பெருமை செளந்தர்யாவுக்கு இந்தப் படம் மூலம் கிடைத்தது. ஒரு ஆண் இயக்குனர் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை பெண் இயக்குனராக புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கையாண்டு சாதனை படைத்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
தமிழில் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்திலும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆரோகணம்' படத்தின் மூலம் 2012ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து இவர் இயக்கி 2014ல் வெளிவந்த 'நெருங்கி வா முத்தமிடாதே' படம் பெரிய வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. தற்போது 'அம்மிணி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
பிரியா
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியா 2005ம் ஆண்டு வெளிவந்த 'கண்ட நாள் முதல்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இனிமையான காதல் கதையாக வெளிவந்த இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. 2007ம் ஆண்டு இவர் இயக்கி வெளிவந்த 'கண்ணா மூச்சி ஏனடா' அதிகம் கவனிக்கப்படவில்லை. அதன் பின் இவர் வேறு எந்தப் படங்களையும் இயக்காமல் இருக்கிறார்.
சுதா
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுதா 2010ம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' என்ற படத்தை இயக்கினார். விஷ்ணு, ஸ்ரீகாந்த் நடிக்க மல்டி ஹீரோ சப்ஜெக்டாக வெளிவந்த படம் இது. தற்போது மாதவன் நடிக்க 'இறுதிச் சுற்று' என்ற பெயரில் தமிழிலும், இந்தியில் 'சாலா காதூஸ்' என்ற பெயரிலும் இயக்கி வருகிறார்.
ஜே.எஸ்.நந்தினி
2009ம் ஆண்டு வெளிவந்த 'திரு திரு துறு துறு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஒரு பெண் இயக்குனர் நகைச்சுவை கலந்த ஒரு படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். சுமாரான வெற்றியையும், நல்ல விமர்சனத்தையும் இந்தப் படம் பெற்றது. சில வருடங்களுக்கு முன் 'கொலைநோக்கு பார்வை' என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். அந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் கைவிடப்பட்டது.
கிருத்திகா உதயநிதி
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி 2013ம் ஆண்டு வெளிவந்த 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் சுமாரான வெற்றியையும், ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்ற படமாக அமைந்தது. இருந்தாலும் அடுத்து இரண்டாவது படம் ஒன்றை விரைவில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் அது பற்றிய எந்த அறிவிப்பும் வரவில்லை.
அம்பிகா
80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த அம்பிகா 'நிழல்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 'பாயின் ஆப் வியூ' முறையில் எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் வெளியானது.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக சினிமா, தமிழ் பேச ஆரம்பித்த போதே 1936ம் ஆண்டு டி.பி.ராஜலட்சுமி 1936ம் ஆண்டில் வெளிவந்த 'மிஸ் கமலா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநராக அறிமுகமானார்.
அவர் ஆரம்பித்து வைத்த அந்த சாதனைப் பயணம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் தமிழ்த் திரையுலகில் இன்னும் பல பெண் இயக்குநர்களை எதிர்பார்க்கலாம்.