ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழா, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மைய அரங்கில் இன்று மாலை 6.10 மணிக்கு ஆரம்பமானது.
இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய பாணியில் பாரா சூட்டோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை ஆரம்பித்தார். அதாவது இதுவரை பார்த்திபனை கோட் சூட் போட்டு பார்த்திருக்காத விதத்தில் என்பதைத்தான் பாரா சூட்டோடு என்று குறிப்பிட்டார். தன்னுடைய விழா அறிமுக உரையில் கமல்ஹாசனைப் பற்றிக் குறிப்பிடும் போது சினிமா என்கிற டிரேடிங் சென்டர் கமல்ஹாசன் என்றார். விழா நடைபெற்ற இடம் டிரேடிங் சென்டர் என்பது குறிப்பிடத்தக்கது.கமல் என்பதற்கு பார்த்திபன் கலைகளில் மரணமே இல்லாதவர் - கமல் என்ற புதிய விளக்கத்தை அளித்தார்.தொடர்ந்து பெங்களூருவைச் சேர்ந்த நடனக் குழுவினரின் ஆட்டக் களரி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
கமல்ஹாசனைப் பற்றி மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் எழுதிய கடிதம் உன்று வீடியோ உரையாக திரையில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கே. பாலசந்தர் கமல்ஹாசனைப் பற்றி நான் கமல்ஹாசனை கண்டுபிடிக்கவில்லை, நான் அவருக்கு ஒரு மேடையைத்தான் கொடுத்தேன்” என்று முத்தாய்ப்பாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடித வீடியோவின் கடைசியில் “டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா... என்று பாலசந்தர் குரலில் முடியவும், கமல்ஹாசன் மேடையில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் நுழைந்தார்.
கமல்ஹாசனின் பேச்சு, உணர்ச்சி பூர்வமாக அமைந்திருந்தது. பாலசந்தர் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையைப் பற்றியும் பாசத்தையும் பற்றியும் நீண்ட உரையாற்றினார். பாலசந்தரைப் பற்றி கமல் எழுதிய கவிதை ஒன்றையும் திரையில் வீடியோ பதிவாக திரையிட்டார்கள்.
அடுத்து தொகுப்புரையைத் தொடர்ந்து பார்த்திபன், “கே.பி உயிர் என்றால் கமல்ஹாசன் உயிர்” என்றார்.
பாலசந்தர் பற்றிய சிறு வீடியோ தொகுப்பு ஒன்று திரையிடப்பட்டது.
உத்தம வில்லன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, நாசர், எம்.எஸ். பாஸ்கர் படத்தைப் பற்றிப் பேசினார்கள்.
நாசர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க, தனது மகன் விபத்தில் சிக்கிய நேரத்தில் உத்தம வில்லன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கான காரணத்தை நெகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தினார். மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் எனது கவனத்தை திசை திருப்பவே நடிக்க வந்தேன் என்றார். “நான் நடித்த 500 படங்களை மறந்தாலும், இந்த படத்தை என்னால் மறக்கவே முடியாது,” என்றார்.
தொடர்ந்து உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு ஒன்று திரையிடப்பட்டது.
நடிகைகள் பார்வதி நாயகர், பூர்ணா நடனக் குழுவினருடன் கமல்ஹாசன் பாடல்கள் அடங்கிய மெட்லி ஒன்றிற்கு நடனமாடினர். நடனக் குழுவினரிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது மேடையில் பளிச்சிட்டது.
படத்தில் நடித்துள்ள ஊர்வசி, பார்வதி (பூ), பூஜா குமார், ஆன்ட்ரியா மேடையேறி அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஊர்வசி பேசும் போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, நான் கர்ப்பிணியாக இருந்தேன். ஆனால், நீண்ட நாட்கள் கழித்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை அவரிடம் மறைத்து விட்டேன். ஆனாலும், நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை அவர் கண்டுபிடித்துவிட்டார். படப்பிடிப்பு முடியும் வரை என்னை தாயுள்ளத்தோடு பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக டப்பிங் பேசி முடித்த இரண்டு நாட்களிலேயே எனக்கு குழந்தை பிறந்து விட்டது, என்றார்.
பார்வதி கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பாடலான, கண்மணி அன்போடு.... பாடலின் பல்லவியை அருமையாகப் பாடினார். திடீரென மேடைக்கு எதிரில் அமர்ந்திருந்த கமலும் ஒரு வரிப் பாடி பார்வதியைப் பரவசப்படுத்தினார்.
தமிழ் தெரியாத பூஜா குமாரிடம் பார்த்திபன் பல கேள்விகளைக் கேட்க முயல, பூஜா குமார் தமிழ் தெரியாத காரணத்தால் கொஞ்சம் பேசத் தடுமாறினார். ஆன்ட்ரியாவை டிரான்ஸ்லேட் செய்யும் படி பார்த்திபன் கேட்டுக் கொண்டாலும், ஆன்ட்ரியா அதைக் கண்டு கொள்ளவேயில்லை.
ஆன்ட்ரியா பேசும் போது, உத்தம வில்லன் படத்திற்காக ஜிப்ரான் எப்படி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதை கமல் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். “விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, கமல்ஹாசன் அவர்கள் வாகை சூடவா படத்தின் பாடல் சிடியைக் கொடுத்து கேட்கச் சொன்னார். காரிலேயே அந்தப் பாடலை ஒரு மணி நேரம் கேட்டேன். உத்தம வில்லன் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர் என்று கமல்ஹாசன் சொன்னார்.
தொடர்ந்து உத்தம வில்லன் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் மேடையேறினார். கமல்ஹசானுடன் பணி புரிந்த அனுபவம், மிகப் பெரும் இயக்குனர்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் ஆகியோரை இயக்கிய அனுபவம் ஆகியவற்றைப் பற்றியும், இயக்குனராக அவருடைய பணி என்ன என்பதைப் பற்றியும் நீண்ட உரையாற்றினார்.
அடுத்து கமல், பூஜா நடித்த காதலாய்... பாடலின் 1 நிமிடப் பாடல் திரையிடப்பட்டது.
தொடர்ந்து 'உத்தம வில்லன்' படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் மேடையேறினார். கமல்ஹசானுடன் பணி புரிந்த அனுபவம், மிகப் பெரும் இயக்குனர்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் ஆகியோரை இயக்கிய அனுபவம் ஆகியவற்றைப் பற்றியும், இயக்குனராக அவருடைய பணி என்ன என்பதைப் பற்றியும் நீண்ட உரையாற்றினார்.
உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் மேடையேறி உத்தம வில்லன் எப்படி ஆரம்பமானது என்று தெரிவித்தனர். “இதை விட ஒரு முக்கிய தருணம் எனது வாழ்க்கையில் இல்லை,” என லிங்குசாமி கூறினார். இதுவரை சினிமா மேடையில் ஏறாத அவருடைய பெரிய அண்ணன், சின்ன அண்ணன் ஆகியோரை மேடையில் ஏற்றினார். கமல்ஹாசனும் உங்களுடைய பிரதர்ஸ்-ல் நானும் ஒருவன் என மேடையேறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ்-க்குப் பிறகு எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது திருப்பதி பிரதர்ஸ்ல் மட்டும்தான். பல முறை தயாரிப்பாளர்களான லிங்குசாமி, போஸ் ஆகியோரைக் கூப்பிட்டேன். அவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்ததேயில்லை,” என்றார்.
தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற இரணியன்.... பாடலின் ஒரு நிமிடப் பாடல் திரையிடப்பட்டது.
ஜிப்ரான் இசைக் குழுவைச் சேர்ந்த இருவர் படத்தில் இடம் பெற்ற சிங்கிள் கிஸ்கே... என்ற பாடலைப் பாடினர்.
அடுத்து உத்தம வில்லன் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பற்றிய சிறு வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது.
தொடர்ந்து பேசிய ஜிப்ரான், “இந்தப் படத்தில் ஒரு பேராசிரியரிடம் நல்ல பெயரை வாங்கத் துடிக்கும் ஒரு மாணவனைப் போலத்தான் நான் பணியாற்றினேன்,” என்றார்.
அடுத்து மறைந்த கே.பாலசந்தர் , உத்தம வில்லன் படத்தில் நடித்த அவரது அனுபவத்தைப் பற்றிப் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது.
“கமல்ஹாசனும், ரமேஷ் அரவிந்தும் பணியாற்றி விதத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நடிக்கச் சென்ற முதல் இரண்டு நாட்கள் அமைதியாக அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்பதை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.
அடுத்து, வில்லுப்பாட்டு ஆறுமுகம், ஞான சம்பந்தன், மதன் கார்க்கி, விவேகா, லிங்குசாமி, கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்ட உத்தம வில்லன் படத்தைப் பற்றிய பாட்டு மன்றம் அரை மணி நேரத்திற்கு நடத்தப்பட்டது. படத்தில் இடம் பெற்ற பாடல்கள் குறித்து அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.
விவேகா, “கமல் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைப் போல் அல்ல, அவர்கள் அறிஞரின் ரசிகர்கள்,” என்று பேசி கமல்ஹாசன் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார்.
இப்படிப்பட்ட ஒரு பாடலைப் பற்றிய விவாத நிகழ்ச்சி என்பதற்கான காரணத்தைக் கமல்ஹாசன் கூறினார். “பாடல்களைக் கேட்கிறோமே தவிர, அவற்றைப் படிக்கிற பழக்கம் இல்லை. எனக்கு ரேடியோ மூலமாகவும், மற்றவை மூலமாகவும் பாடல்கள் மனதில் பதிந்தன. மற்றவர்களும் பாட்டைப் படிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு கவன ஈர்ப்புக்காகவே இந்த ஒரு விஷயத்தைச் செய்தேன். இந்தப் படத்தில் பாடல்களை முழுமையாகத் தமிழிலேயே எழுதியிருக்கிறேன்,” என்றார்.
“எனக்குள் இசையறிவு இருக்கிறதைப் பற்றிப் பேசினார்கள், இளையராஜாவுடன் இணைந்து 100 படங்களுக்கும் மேல் வேலை செய்து விட்டு இந்த அளவிற்குக் கூட மியூசிக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் மடையன்,” என்றார்.
தொடர்ந்து உத்தம வில்லன் படத்தின் புதிய டிரைலரை கமல்ஹாசன் மேடையில் அமைக்கப்பட்ட திரையில் வெளியிட்டார்.
அடுத்து வழக்கமான இசைத் தட்டை திரையுலகப் பிரபலங்கள் வெளியிடுவது போல் அல்லாமல், அதிலும் புதுமையைப் புகுத்தியிருந்தார் கமல்ஹாசன்.
ஒரு ரிமோட் கொண்டு அழுத்த திரையில் உத்தம வில்லன் பாடல்கள் அப்லோட் செய்யப்பட்டு வீடியோ அப்படியே காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து யாராவது பெற்றுக் கொண்டால்தான் நன்றாக இருக்கும் என்ற தயாரிப்பாளர் லிங்குசாமியின் ஆசையை நிறைவேற்ற, மும்பையில் இருக்கும் அவர் பெற்ற மகள் ஸ்ருதிஹாசனுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் தொடர்பு கொண்டு பாடலை டவுன்லோட் செய்து கொள்ளச் சொன்னார். இந்த உரையாடல்கள் மேடைத் திரையில் அப்படியே காட்டப்பட்டன.
கடைசியாக, விழாவுக்கு வந்த திரையுலகப் பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைவரும் மேடையில் குழும மேடையே கொள்ளாத அளவிற்கு ஒரு பெரிய புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
விழா அரங்கில் இடம் கிடைக்காத பலர் நின்று கொண்டே கடைசி வரை விழாவைக் கண்டு ரசித்தனர்.