மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவின் முத்திரை இயக்குனர்களில் ஆர்.சி.சக்தியும் ஒருவர். போலீஸ் குடும்பத்தில் பிறந்த கலைஞன், தனது புழுதிகுளம் கிராமத்திலிருந்து நாடகத்தை தேடி பரமக்குடிக்கு வந்தவர். அங்கிருந்து சினிமா தேடி சென்னைக்கு வந்தார். எல்லோரும் பக்தி நாடகம் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஆர்.சி.சக்தி போட்ட முதல் நாடகம் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சமூக நாடகம். இது எழுத்தாளர் ஆசைத் தம்பி எழுதிய நாவலை தழுவி நடத்தப்பட்டது.
கமலுடன் உணர்ச்சிகள்
ஆர்.சி.சக்தியும், கமலும் பரமக்குடி என்பதாலும், இருவரும் தீவிர சினிமா தாகம் மிக்கவர்கள் என்பதாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்த கமலுக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் கமல் நடிகனாக வேண்டும் என்று வற்புறுத்தியவர் சக்தி, கமலை நடிகராக்க பல புரட்யூசர்களை பிடித்து ஆரம்பித்த படம்தான் உணர்ச்சிகள். முதல் படத்திலேயே அப்போது அதிகம் மக்கள் அறிந்திராத பால்வினை நோய் பற்றிய கதைக் கருவை வைத்தார். அந்த படம் பாதியில் நிற்க உணர்ச்சிகள் கதையை வாங்கிய மலையாள தயாரிப்பாளர் அதனை மலையாளத்தில் ராசலீலா என்ற பெயரில் தயாரித்தார். அதில் கமல்தான் ஹீரோ. உணர்ச்சிகள் தமிழில் வெளிவருவதற்கு முன்பே மலையாளத்தில் தயாரான ராசலீலா வெளிவந்து வெற்றி பெற்றது. பின்னர் தமிழ்நாட்டிலும் ரிலீசானது. அதன் பிறகே தமிழில் உணர்ச்சிகள் வெளிவந்தது.
ரஜினியுடன் தர்மயுத்தம்
பீட்டர் செல்வகுமார் எழுதிய கோமா என்கிற நாவலைத்தான் தர்மயுத்தம் என்ற படமாக உருவாக்கினார் சக்தி. அந்தக் காலகட்டத்தில் யாரும் தொடாத உளவியல் ரீதியான கதை. சிறுவயதில் தன் தாய் தந்தையர் கொல்லப்படுவதை பார்க்கும் சிறுவன் பின்னாளில் பவுர்ணமி தினத்தன்று மட்டும் அந்த நினைவுகள் வந்து துடிக்கிற மாதிரியான கதை. அந்த நினைவுகளை கொண்டே எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்குற புதுமையான படமாக அது அமைந்தது.
சிறையில் புரட்சி
அனுராதா ரமணன் எழுதிய சிறை சிறுகதைதான், ''சிறை'' திரைப்படமாக உருவானது. தாலி செண்டிமெண்டை வைத்து தமிழ் சினிமா பெண்களை உருகி உருகி அழவைத்துக் கொண்டிருந்தபோது. அந்த தாலி செண்டிமெண்டை உடைத்து நொறுக்கி வெற்றி பெற்றார் ஆர்.சி.சக்தி. தன்னை சந்தேகப்படும் கனவனை விட தன்னை கெடுத்த பிறகு மனசாட்சி உறுத்தலுடன் தன்னை பாதுகாக்க நினைக்கும் வில்லனோடு வாழும் பெண்ணாக நடித்திருந்தார் லட்சுமி. கிளைமாக்சில் அவர் தாலியை கழற்றி எறியும் காட்சிக்கு பலத்த எதிர்ப்பு அப்போது. அந்தக் காட்சியை மாற்றினால்தான் படத்தை வாங்குவோம் என்று விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். அதையும் தாண்டி தைரியத்துடன் படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றார் சக்தி.
ராஜாங்கம், ஸ்பரிசம், தங்க கோப்பை, சந்தோஷ கனவுகள், உண்மைகள், தாலிதானம், நாம் உள்பட 22 படங்களை இயக்கினார் ஆர்.சி.சக்தி. அவற்றில் சில வெற்றி பெற்றிருக்கலாம். சில தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அவை ஒவ்வொரு விதத்திலும் தனித்தன்மை கொண்டவை.
நிறைவேறாத ஆசைகள்
கடைசியாக இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, இயக்கினார். குஷ்பு ஹீரோயின். ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை பேசிய படம். இந்தப் படத்தை தயாரித்த விதத்தில் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்த போதும் தயாரித்து முடித்தார். ஆனால் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. படத்தின் தலைப்பை பிற்பகல் என்று மாற்றிப் பார்த்தார். அப்போதும் அது யாராலும் வாங்கப்படவில்லை. இந்தப் படம் வெளிவந்தால் பல விவாதங்களை துவக்கி வைக்கும், என் பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கடைசி வரை அது நிறைவேறவில்லை.
பிற்பகல் படம் வெளிவரவேண்டும், கமலை வைத்து இன்னொரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் ஆர்.சி.சக்தியின் கனவாக இருந்தது. இரண்டும் நிறைவேறவில்லை. ஆர்.சி.சக்தி குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவை நேசித்து வணிக சமரசங்களை தாண்டி புதுமைகளை புகுத்திய புதுமை பித்தன் அவர். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.