ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிவிட்டர் சர்ச்சை புகழ் இயக்குனர் ராம் கோபால் வர்மா நேற்று 'ஐ' டிரைலரைப் பற்றி வெளியிட்ட ஒரு பதிவு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராம் கோபால் வர்மா அவருடைய பதிவில் குறிப்பிட்ட கடைசி வரிகள் வேண்டுமானால் சர்ச்சை என்ற வட்டத்துக்குள் அடங்கும். ஆனால், அவருடைய பதிவை அப்படியே 'யு டர்ன்' அடித்து சிலர் சர்ச்சையாக்கி வருகிறார்கள்.
ராம்கோபால் வர்மா அவருடைய டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “சற்று முன்னர்தான் 'ஐ' படத்தின் டிரைலரைப் பார்த்தேன். சங்கராந்தி கண்டிப்பாக சங்கர் ராத்திரியாக இருக்கும். 'ஐ' படத்திற்கு எதிராக பேச முடியாதவர்கள்தான் 'ஐ' படத்துடன் அவர்களுடைய படங்களை வெளியிடுவார்கள். 'ஐ' திரைப்படம் இந்திய இயக்குனர்களையும் யோசிக்க வைக்கும் . ஷங்கரைப் போல நம்மால் ஏன் நமது எல்லைகளை விரிவு படுத்த முடியவில்லை என யோசிக்க வைக்கும்.
ஹாலிவுட்டால் இந்தியப் படங்கள் அதிகமான கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருக்கிறது. ஆனால், 'ஐ' படத்தை அவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்வார்கள். கண்களைக் கவர்வதிலும், ஒரு மின்சாரத்தைப் பாய்ச்சுவதிலும் ரஜினிகாந்தை விட ஷங்கர் சிறந்தவர் என நினைக்கிறேன்.
ஷங்கர், ஆமீர்கானுடன் இணைந்தால் அது இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும். என்னுடைய கணிப்பின் படி 'ஐ' படத்தின் முதல் நாள் வசூல் 'லிங்கா' படத்தையும் மிஞ்சும். அதனால்தான் ஷங்கர் ரஜினிகாந்தை விட சிறந்தவர் என்று சொல்கிறேன்.
நான் ரஜினிகாந்தின் மிகப் பெரிய சூப்பர் ரசிகன், ஆனால் தற்போது என்னுடைய விசுவாசத்தை ஷங்கருக்கு மாற்றிக் கொண்டேன். பெரிய இயக்குனர்கள் எல்லாம் ஷாரூக், சல்மான், ஆமீர் ஆகியோரை நம்பி இருக்கிறார்கள். ஆனால், ஷங்கர், ரஜினிகாந்தையே அழித்து விட்டார். இதுதான் நட்சத்திரங்களின் பவருக்கு எதிராக ஷங்கரின் பவர்.
ஷங்கர் உங்களின் ட்விட்டர் முகவரி எனக்கு தெரியாது, ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். மொத்த இந்தியத் திரையுலகிலும் நீங்கள்தான் பாதை அமைத்துக் கொடுப்பவர். 'ஐ' படம் அதன் உண்மைத் தன்மை, கற்பனை வளம், தைரியமான முயற்சி ஆகியவற்றால் பல சாதனைகளை உடைக்கப் போகிறது.
'ஐ' டிரைலரைப் பார்த்த பின், ஒரு சுத்தமான வெளியில் இருந்து பார்க்கும் ஒரு சாதாரண மனிதனாக, தமிழ்நாட்டில், ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரை விட ஷங்கர் உயர்ந்தவர்,” என ராம் கோபால் வர்மா ஒரு நீளமான ட்விட்டரின் '140' வார்த்தைகள் என்ற எல்லையையும் மீறி பத்துக்கும் மேற்பட்ட பதிவாக 1400 வார்த்தைகளில் பாராட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.
அரசியலை விட்டு விடுங்கள். ரஜினிகாந்த் - ஷங்கர் இருவரைப் பற்றி ராம்கோபால் வர்மா ஒரு படைப்பாளியாக இன்னொரு படைப்பாளியைப் பாராட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. ஷங்கரை விடவும் ஹிந்தித் திரையுலகிலும் சில சாதனைகளைப் புரிந்த ராம்கோபால் வர்மா பாராட்டியது ரஜினிகாந்தின் சில தீவிர ரசிகர்களுக்கு கடுமையான எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது.
எப்போதுமே திரையுலகம் என்பது 'கேப்டன் ஆப் தி ஷிப்' என அழைக்கப்படும் ஒரு படத்தின் இயக்குனரை மட்டுமே நம்பி இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த இயக்குனரைச் சார்ந்தே இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் மொத்த பேரும் புகழும் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்குத்தான் போய் சேருகிறது. அதே ஒரு படம் தோல்வியடைந்து விட்டால் அனைவருமே அந்த இயக்குனரை நோக்கி மட்டுமே கை காட்டுவார்கள். தோல்விக்கு இயக்குனரை கை காட்டுபவர்கள், வெற்றி பெறும் போது அந்த இயக்குனரை நோக்கி கையைக் காட்டுவதில்லை. அந்தப் புகழில் மற்றவர்கள் பங்கு பெறவும் விரும்புவதுமில்லை.
ஷங்கர் என்ற ஒரு இயக்குனரை தமிழ் சினிமாவின் சிறந்த ஒரு படைப்பாளியாக தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ரஜினிகாந்தும் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்கிறார். ஆனால், ஒரு சூப்பர் ஸ்டாருக்கும் 'சூப்பர் ஹிட்'களைக் கொடுக்க ஒரு 'சூப்பர் பவர்' இயக்குனர்தான் தேவைப்படுகிறார்.
ரஜினிகாந்த் என்ற ஒரு சூப்பர் ஸ்டாருக்கு 'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களில் கிடைத்த புகழுக்கும் பெயருக்கும் ஷங்கரும் ஒரு காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'லிங்கா' படத்தில் அவருக்கு முந்தைய அந்த இரண்டு படங்களில் கிடைத்த பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்பதுதான் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.
அவரே, சிறந்த இயக்குனர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்த விழாவில் கூட 'பாகுபலி' படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக அவருடைய ஆவலை வெளிப்படு்த்துவதும் எதைக் காட்டுகிறது.
ராம்கோபால் வர்மா அவருடைய டிவிட்டர் பதிவில் கூட நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகனாத்தான் இருந்தேன். ஆனால், தற்போது அந்த விசுவாசத்தை ஷங்கருக்கு மாற்றிக் கொண்டேன் என்றுதான் கூறியிருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது.
சரி, ஷங்கர் இயக்கிய படங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னணியில் இருந்த காலத்திலேயே அப்போது முன்னணியில் இல்லாத அர்ஜுனை நடிக்க வைத்து அவருடைய முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
இரண்டாவது படமான 'காதலன்' படத்தில் நடன நடிகராக இருந்த பிரபுதேவாவை 'காதலன்' படம் நாயகனாகவும் தொடர்ந்து நடிக்க ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கமல்ஹாசன் நாயகனாக நடித்து வெளிவந்த 'இந்தியன்' படத்தின் அற்புதமான கதையமைப்பையும், கதாபாத்திர அமைப்பைப் பற்றியும் இன்றும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். கமல்ஹாசனை இரு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இன்று வரை அந்தப் படத்தை பேச வைத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஷங்கர்தான்.
அடுத்து இயக்கிய 'ஜீன்ஸ்' திரைப்படம் பெரிய வெற்றிகளைக் குவிக்காத பிரசாந்தை நாயகனாக நடிக்க வைத்து இரு வேடங்களில் இப்படிக் கூட நடிக்க வைக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தினார்.
ரஜினிகாந்த் 'முதல்வன்' படத்தில் நடித்திருந்தால் அந்தப் படம் எங்கேயோ போயிருக்கும், அதாவது மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் என்று அப்போது கூட இயக்குனரைப் பற்றித்தான் பேச வைத்தார்கள். அந்தப் படத்தில் மீண்டும் அர்ஜுனை நடிக்க வைத்து திரைப்படம் என்பது இயக்குனர்களின் மீடியம்தான் என்பதை மீண்டும் புரிய வைத்தார்.
ஓரளவிற்காவது முன்னணியில் உள்ள நடிகர்களை வைத்துதானே எடுக்கிறார், புதுமுகங்களை வைத்து வெற்றி பெறுவாரா என்று பேசியவர்களை 'பாய்ஸ்' படத்தின் மூலம் வாயடைக்க வைத்தார். விமர்சன ரீதியாக பல எதிர்ப்புகளை அந்தப் படம் ஏற்படுத்தினாலும், கமர்ஷியல் ரீதியாக அது ஒரு தோல்விப் படமல்ல .
விக்ரம் என்ற சிறந்த நடிகரை, 'அந்நியன்' படத்தில் அட இப்படிக் கூட ஒரு நடிகரை நடிக்க வைக்க முடியுமா, என அதிசயிக்க வைத்தார், வியக்க வைத்தார்.
சிவாஜியும், எந்திரனும் ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரை, உச்சத்தில் உள்ள நடிகரை மீண்டும் ஒரு உச்சத்திற்கு ஏற்றிய படங்கள் என்று யாருமே மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது.
'நண்பன்' படம் ரீமேக் படம்தான் என்றாலும் கூட அதில் ஷங்கரின் தனித்துவத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது.
இப்போது மீண்டும் 'ஐ' படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகினரையும், உலக சினிமா ரசிகர்களையும் 'மெர்சலாயிட்டேன்' என மிரள வைத்து வருகிறார். ராஜமௌலி, ராம் கோபால் வர்மா போன்ற நமது பக்கத்தில் உள்ள திரையுலகினர் கூட வியந்து பாராட்டி வருகிறார்கள்.
அவ்வளவு ஏன் ரஜினிகாந்திடமே சென்று ராம் கோபால் வர்மா சொன்னது தவறா..என்று கேட்டால் கூட இல்லை இல்லை அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று சொல்வார்.
ஒரு இயக்குனர் என்பவர் மற்றவர்களை பட்டை தீட்டும் ஒரு படைப்பாளி. வெற்றி பெறும் எந்த ஒரு இயக்குனருக்கும் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் தேவையில்லை, ஆனால், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விரும்பும் ஒரு ஸ்டார் நடிகருக்குத்தான் ஒரு திறமையான இயக்குனர் தேவைப்படுகிறார்.
தங்கம் அப்படியே இருந்தால் அதற்கு மதிப்பில்லை, அதை உருக்கி, செதுக்கி நகையாக மாற்றினால்தான் அதற்கும் மதிப்பு கூடும். வைரம், பூமிக்கடியில் கரியாக இருப்பதில் என்ன பயன், அதை பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தால்தானே கோடிகளை அள்ளும்.
அதைத்தான் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ராம்கோபல் வர்மா போன்ற சக படைப்பாளிகள் அதை ஆமோதிக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது....அவர் முதலில் சொன்ன 1300 வரிகளை விட்டு விட்டு, கடைசி 100 வரிகளை பிடித்துக் கொண்டு சர்ச்சையைப் பெரிதாக்கி நெருப்பு மூட்டி, குளிர் காயாமல், படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் உலகமே வியக்கும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வழி விடுங்கள்...இல்லை என்றால், அதே காதல், தாய் மாமன் எதிர்ப்பு, காதலுக்கு உதவி புரியும் நண்பன், ஒரே அடியில் பத்து பேரைச் சாய்க்கும் நாயகன் என தமிழ் சினிமாவை நீங்கள் அப்படியேதான் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்....
அப்புறம் எப்படி நீங்கள் விரும்பும் 3 நாளில் 100 கோடி வசூல், ஆஸ்கர் விருது எல்லாம் கிடைக்கும்...