ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்', தமிழர்கள் வாழ்வையும், கலாச்சாரத்தையும் சொல்லும் அற்புத காவியம். கணவனின் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரை மன்னனையே கேள்விகேட்டு மதுரையை எரித்த வீரப் பெண்ணின் வரலாறு. அதுவே தி.மு.க., தலைவர் மு.கருணாநிதியின் கைவண்ணத்தில் திரைக்கதை வடிவமெடுத்து ''பூம்புகார்'' என்ற திரைக்காவியமாக 1964ம் ஆண்டு வெளிவந்தது. பி.நீலகண்டன் இயக்கியிருந்தார்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும், விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்தார்கள், ராஜஸ்ரீ மாதவியாக நடித்திருந்தனர். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார். மேகலா பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
சமூக படங்களில் கருணாநிதியின் பராசக்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதைப்போல பூம்புகாரும் தனியானதொரு புரட்சியை ஏற்படுத்தியது. புராண படங்களும், மாயாஜால படங்களும் வந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த பிரமாண்ட சரித்திர படம். வியக்க வைக்கும் அரங்க அமைப்புகள், சண்டை காட்சிகள், சோழனின் அரண்மனை இடிந்து தடைமட்டமாகும் காட்சிகள், மதுரை தீப்பறி எரியும் கிளைமாக்ஸ் காட்சிகள் என பிரமிக்க வைத்தது.
எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் கோவலன் கண்ணகியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருந்தார்கள். பின்னாளில் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.
கதை : எல்லோரும் அறிந்த சிலப்பதிகார கதைதான். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகிக்கும், கோவலனுக்கும் திருமணம் நடக்கிறது. கோவலன் சம்பாதிக்கும் பொருள் அனைத்தும் அவர் ஆசை நாயகி மாதவிக்கு செல்கிறது. இதனால் கோவலன் கண்ணகி இருவரும் வறுமை நிலைக்கு வருகிறார்கள். மீதம் இருக்கிற மாணிக்க சிலம்பை வைத்து புதிய தொழில் செய்து பிழைக்கலாம் என்று மதுரைக்கு வருகிறார்கள். ஒரு சிலம்பை விற்கப்போன இடத்தில் மன்னன் நெடுஞ்செழியனின் மனைவியின் காணாமல்போன சிலம்பு என்று தவறாக கருதி காவலர்கள் கோவலனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த, மன்னன் தீர விசாரிக்காமல் மரண தண்டனை விதிக்க கண்ணகி மன்னனிடம் நிதி கேட்டு மதுரையை எரிக்கிறாள்.
கருணாநிதி : படத்தின் முன்பகுதியில் சிலப்பதிகாரம் உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார் கருணாநிதி. அவரது தூய தமிழ் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்தியது. பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சி போன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் கண்ணகி நீதிகேட்டு சிலம்பு வீசிய காட்சி அன்று மட்டுமல்ல இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.
"யார் கள்வன் என் கணவனா கள்வன் அவரை கள்வென் என்று சொன்ன இந்த அவையோரோ கள்வர்"
"நல்லான் வகுத்ததா நீதி. இங்கு வல்லான் வகுத்ததே நீதி"
"இது கோப்பெருந்தேவியின் சிலம்பு, இல்லை இது கோவலன்தேவியின் சிலம்பு"
"இது மாணிக்கப்பரல்கள் அல்ல என் கணவன் கோவலனின் ரத்த துளிகள்"
"கோவலன் கள்வன் அல்ல யானே கள்வன்"
"நீதி தவறிய பாண்டிய நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு. மணிமுடி எதற்கு வெண்கொற்ற குடை எதற்கு-?"
இப்படிப்பட்ட அனல் தெறிக்கும் வசனங்கள் காலத்தை வென்று நிற்கின்றன.
தேனினும் இனிய பாடல்கள்...! : "என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்.... நான் உன்னை நினைத்தேன்...", "பொன்னாள் இதுபோலே இனி வருமா...", "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்... உள்ளிட்ட பத்து பாடல்களும் ஆர்.சுதர்சனத்தின் இசையில் காலத்தை கடந்து நிற்கிறது.
தமிழ் சினிமா சரித்திரத்தில் பூம்புகார் தவிர்க்க முடியாத பதிவு, பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!