ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2014ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் வெளிவரும் மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிடும். இவற்றில் எண்ணற்ற சிறிய திரைப்படங்களும், சில பிரம்மாண்டமான திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இதுவரையில் வெளிவந்துள்ள படங்களில் பெரிய படங்கள், அதாவது பட்ஜெட்டில் அதிகமான படங்கள் என்று எடுத்துக் கொண்டால் “வீரம், ஜில்லா, கோச்சடையான், அஞ்சான், கத்தி” ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்த நான்கு படங்கள் மட்டுமே சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் என்று சொல்லப்படுகின்றன. மற்ற படங்களின் பட்ஜெட்டை சராசரியாக 4 கோடி ரூபாய் என்று வைத்தால் கூட மொத்தமாக 1000 கோடி ரூபாய் வரை இந்த அண்டு திரைப்படங்களின் தயாரிப்புப் பணிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள 'லிங்கா' படத்தின் தயாரிப்புச் செலவு மட்டும் 150 கோடி ரூபாய் என்றும் சொல்கிறார்கள். ஆக, 2014ல் மொத்த தயாரிப்புச் செலவு என சுமார் 1200 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டால் அதற்கு மேல் லாபத் தொகையாக எவ்வளவு கோடி இந்த ஆண்டில் வசூலாகியிருக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தால் அது பாதிக்குப் பாதி நஷ்டமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் திரையுலக மீடியேட்டர்கள்.
தயாரிப்பு செலவை விட விளம்பர செலவு அதிகம்
இப்போதெல்லாம் ஒரு படத்தின் பட்ஜெட்டை 2 கோடிக்கு முடித்தால் கூட அந்தப் படத்திற்கான விளம்பரச் செலவு மேலும் 2 கோடி ரூபாய் அளவிற்கு வந்துவிடுகிறது என தயாரிப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். ஆனாலும், பல படங்கள் 50 லட்ச ரூபாய்க்குள் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் அவற்றிலும் பல படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறி இருக்கின்றன.
100 நாட்களை கடந்தது எத்தனை படங்கள்.?
பல படங்கள் ஒரு வாரப் படங்களாகவும் சில படங்கள் ஒரே நாள் படங்களாகவும், மேலும் சில படங்கள் ஒரே ஒரு காட்சிப் படங்களாகவும் கூட இருந்திருக்கின்றன. 100 நாட்களைக் கடந்த படங்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் திரைப்படங்களின் வெற்றி அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை யாருமே 100வது நாள் விழாவைக் கொண்டாடவேயில்லை. 'வேலையில்லா பட்டதாரி' படம் மட்டுமே 100 நாளைக் கடந்தது என்றார்கள். அதனுடன் 'கோலி சோடா' படமும் 100 நாளைக் கடந்து ஓடியது.
ஏமாற்றிய பெரிய நடிகர்களின் படங்கள்
இந்தப் பட்டியலில் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய் ஆகியோரது படங்கள் இல்லாதது மிகப் பெரும் ஏமாற்றமே. ரஜினியின் அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படம் கூட சில வாரங்கள் மட்டுமே ஓடியது. விஜய் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு படங்களான 'ஜில்லா, கத்தி' ஆகிய படங்களில் 'கத்தி' படம் மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது. 'ஜில்லா' படத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு வெற்றிப் படம் என விஜய் ரசிகர்கள் கூறிக் கொண்டாலும் அந்தப் படம் பல ஏரியாக்களில் வாங்கிய விலையை விட வினியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தியதாம். அதே போலத்தான் அஜித்தின் 'வீரம்' படத்திற்கான பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டது என்கிறார்கள்.
வாங்கிய பணத்திற்கும் மேல் வசூலைத் தந்த படங்கள் என “கோலி சோடா, யாமிருக்க பயமே, மஞ்சப்பை, சதுரங்கவேட்டை, ஜிகர்தண்டா, சலீம், அரண்மனை, மெட்ராஸ், திருடன் போலீஸ்'' ஆகிய படங்களைச் சொல்கிறார்கள்.
விஜய்சேதுபதிக்கும் ஏமாற்றம் தான்
சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படம் சுமாரான வெற்றியையும், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த 'ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம்,' ஆகிய படங்கள் நிறையவே ஏமாற்றிவிட்டது. கடந்த ஆண்டில் இவர்களிருவரும்தான் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களாக இருந்தார்கள். மற்ற நட்சத்திரங்களில் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, போன்றோருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம் இருவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் கூட தோல்விப் படங்களாகவே அமைந்துவிட்டன.
நடிகர்களின் சம்பளம் அதிகம்
படத்தின் தயாரிப்புச் செலவுகள் அதிகமாவதால்தான் படங்களுக்கான வசூலும் குறைகிறது என பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், தயாரிப்புச் செலவை விட நடிகர்களின் சம்பளத்தால்தான் பட்ஜெட் அதிமாகிறது என சிலர் சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் வரை ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நடிகர்கள் கூட தற்போது சராசரியாக ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள். சம்பளம் என்ற வகையில் மட்டுமே சில முன்னணி நடிகர்களின் நடிக்கும் படங்களுக்கு 15 கோடி ரூபாய் வரை செலவாகிறது. பின்னர் படத்தின் தயாரிப்புச் செலவு என மேலும் ஒரு 10 கோடி ரூபாய் என 25 கோடி ரூபாய் அளவில் இரண்டாம் நிலை நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குச் செலவாகிறது என்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு நடிகரின் மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்தே ஒரு படத்தின் பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சில பல காரணங்களால் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திவிட்டு அதன் பின் ரிலீஸ் நேரத்தில் போட்ட பணத்திற்கு பாதி பணம் என்ற அளவில் கூட வியாபாரம் நடப்பதில்லை என்கிறார்கள். அதற்கு முந்தைய படங்களின் வெற்றியை வைத்தும் ஒரு தவறான திட்டமிடலை செய்து விடுகிறார்கள். ஜீவா நடித்து வெளியான 'யான்' திரைப்படத்திற்கு மட்டுமே சுமார் 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக அந்தத் தயாரிப்பாளரே அறிவித்திருக்கிறார். அந்தப் படத்திற்கு தியேட்டர் வசூல் என்ற அளவில் கிடைத்தது வெறும் 3 கோடி ரூபாய்தானாம். சாட்டிலைட் உரிமை வகையில் சுமார் 6 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. படத்திற்கான நிகர நஷ்டம் சுமார் 20 கோடி என்கிறார்கள். இப்படி மேலும் சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரு நகைச்சுவை நடிகர் தற்போது ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் வரை சம்பளமாகக் கேட்கிறாராம். அவர் வரி, வரியாகப் பேசி நடித்தால் கூட சிரிப்பு மட்டும் வரவே மாட்டேன்கிறதாம். அப்படியும் அவர் சம்பளத்தைக் குறைக்கவேயில்லை என்கிறார்கள்.
இயக்குநருக்கும் சம்பளம் அதிகம்
சமீபத்தில் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூலித்த ஒரு முன்னணி நடிகரின் படத்தில் படத்தின் நாயகனை விட இயக்குனருக்கு அதிக சம்பளம் என்கிறார்கள். அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு மட்டுமே 70 கோடி ரூபாயாம். ஆனால், 100 கோடி ரூபாய் மேல் வசூலித்ததாகச் சொல்கிறார்கள். அதில் விளம்பர செலவினங்களும் அடங்குமாம். அதே நடிகரின் அடுத்த சரித்திரப் படத்தை சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப் போகிறார்களாம்.
அதையெல்லாம் விட இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள உச்ச நட்சத்திரத்தின் படத்தில் அவருக்கென்று என்ன சம்பளம் என்பதை எப்படி நிர்ணயம் செய்வது என்று முழித்து வருகிறார்களாம். அவர் தனக்கென சம்பளம் இவ்வளவு என்று கேட்டு பல வருடங்களாகிவிட்டது. படத்தின் வசூலில்தான் அவர் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மொத்தமாக வாங்கிவிடுவார் என்கிறார்கள். அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம். அவ்வளவு செலவு ஆகிறதென்றால் படத்தின் வசூல் எவ்வளவு கோடிகளைத் தாண்ட வேண்டும்.
காத்திருக்கும் பெரிய படங்கள்...!
இன்னும் டிசம்பர் மாதக் கடைசியில் வெளிவர உள்ள சில படங்களின் செலவுத் தொகை 150 கோடியைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள். இவற்றோடு அடுத்த ஆண்டு முதலிலேயே வர உள்ள 'ஐ, என்னை அறிந்தால்' ஆகிய இரண்டே இரண்டு படங்களின் செலவு எப்படியும் 200 கோடியைத் தாண்டிவிடவும் வாய்ப்புள்ளது.
வரும்காலத்தில் இன்னும் கூடும்... குறையாது!
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்தின் உண்மையான செலவு என்ன என்பதை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களே தெரிவிப்பதில்லை. அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் வெளியாகும் தகவல்கள்தான் செலவுத் தொகை என செய்திகளாக வெளிவருகின்றன. இப்படி ஒரு படத்திற்கு ஆகும் செலவுத் தொகை வரும் ஆண்டுகளில் இன்னும் கோடி கோடியாகக் கூட வாய்ப்பு இருக்கிறதே தவிர, குறைவதற்கு வாய்ப்பே இல்லை.
கோடி கோடியாக செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் மேலும் பல கோடிகளை வசூலித்துத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, சம்பந்தப்பட்டவர்களை தெருக் கோடிக்குள் நிற்க வைக்காமல் இருந்தாலே போதும்...!