ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுமேடையில் வைரமுத்துவை, அவன் - இவன் என்று பாரதிராஜா பேசுவார் என்றோ... அவரது பேச்சுக்கு, அதே மேடையில் வைரமுத்து பதிலடி கொடுப்பார் என்றோ... விழா அரங்கில் கூடியிருந்த திரையுலக ஜாம்பவான்களும், கலைவளர காசிறைக்கும் தொழிலதிபர்களும், கவியார்வலர்களும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை; ஆனால், அது நடந்துவிட்டது!
கவிஞர் வைரமுத்து மணிவிழாவை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக, கோவையில், கடந்த 12, 13 தேதிகளில் கொண்டாடி களித்தது வெற்றித்தமிழர் பேரவை. தமிழ்நடை பேரணியில் பல்லாயிரம் பேர் பங்கேற்க, மறுநாள் கருத்தரங்கம், பாராட்டு விழா, படைப்பரங்கம், கலையுலக வாழ்த்தரங்கம், என, கொடிசியா வளாகம் களைகட்டியது. அமெரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, மலேசியா என வெளிநாட்டு விருந்தினர்கள், தமிழக பேச்சாளர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கலையார்வ தொழிலதிபர்கள், கவியார்வலர்கள், பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் என, பிரபல பட்டாளமே சங்கமித்திருந்தது.
அரங்கின் இருக்கைகளை நூற்றுக்கணக்கானோர் அலங்கரித்துக்கொண்டிருக்க, கவிபேரரசு வைரமுத்துவை பாராட்டி பேச, அழைக்கப்பட்டார் பாரதிராஜா. டி சர்ட் - ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக மிடுக்கான தோற்றத்துடன், மைக்கை பிடித்தவர், வைரமுத்துவை வாழ்த்தியதுடன், கடந்தகால நினைவுகளை, கடினமாகவே பரிமாறத்துவங்கினார். மேடையில் எவ்வளவு அதிகமாக பொய் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாக கைதட்டல் கிடைக்கும். எவ்வளவு அதிகமாக பொய் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாக, உலகில் அரசுகளை ஆளமுடியும். பேச்சுத்திறமை உள்ளவன்தான் நாட்டை ஆள முடியும், என்பது, ஹிட்லர் முதல் இன்றுவரை நடக்கிறது, என்றார். அரங்கம் அதிர எழுந்தது கரவோசை.
தொடர்ந்து பேசிய அவர், சமீபகாலமாக, நான் மேடையில் பேசுவதில்லை என, முடிவெடுத்து இருக்கிறேன். மேடையில் பேசுவதை கேட்பது சுகம்; பேசுவதுதான் கடினம். சம்பிரதாயம், சடங்கு முறை, படிப்பறிவும், மேற்கோள் காட்டுதல் இவை எல்லாம் எனக்கு வராது. எழுதி வைத்துக்கொண்டு வரவில்லை. இங்கு, என்ன தோன்றுகிறதோ, அதை பேசிவிட்டு போவதுதான் என் பாணி. நான் தான் வைரமுத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். நான் இல்லை என்றால், வேறு யாராவது அறிமுகம் செய்திருப்பார்கள். விதைப்பது முக்கியமல்ல; நாம் விதைத்த விதை வீரியமுள்ளதாக இருக்க வேண்டும். நான் விதைத்த விதை வீரியம் உள்ள விதை. அதனால்தான், வைரமுத்து இன்றைக்கு மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.
என்னை வந்து சந்தித்த காலத்தில் சாதாரண மனிதன். ஆனால், அவர் திமிர் இருக்கிறதே, அது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. எந்த பின்புலமும் இல்லை. அவரை பாருங்கள் (வைரமுத்துவை), சட்டை மடிப்பு கலையாமல் எப்படி கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறார். இவரை, என்னிடம் ஓவியர் உபால்டுதான் அழைத்து வந்தார். கருப்பாக ஒல்லியாக, ஒரு வேஷ்டியைக் கட்டிக்கொண்டு என் முன் வந்து நின்றார். சினிமாவில் சான்ஸ் கேட்க வருபவனுக்கு, ஒரு பணிவு வேண்டும்.
ஆனால் அது இவரிடம் இல்லை. என் பெயர் வைரமுத்து; என்னை, நீங்கள் வேண்டும் என்றால் பயன்படுத்தி கொள்ளலாம் என்று, ஒரு புத்தகத்தை கொடுத்தார். என்னடா ஒல்லிக் குச்சி மாதிரி இருந்து கொண்டு இவ்வளவு திமிராக பேசுகிறானே என்று தோன்றியது. எல்லா கலைஞனுக்கும், எழுத்தாளனுக்கும் இந்த கர்வம் இருக்கும். நான் அதை அங்கீகரித்தேன். இந்த மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீ. எனக்கு சில கருத்து வேறுபாடு உண்டு; கருத்தில் இல்லை. வைரம் போல் பக்குவப்பட்டு வளர்ந்து இருக்கிறாய். பொதுவாக வைரம் பணக்காரர்களிடம் தான் போய் சேரும். ஆனால் நீ, பணக்காரர்களிடத்திலும், ஏழைகளிடத்திலும் போய் சேர்ந்து இருக்கிறாய். நீ கெட்டிக்காரன்; உன் கெட்டிக்காரத்தனத்தை கொண்டு எழுத்தையும், எண்ணத்தையும் வலிமையாக்கி இருக்கிறாய். எனக்கு, இது எல்லாம் தேவையா? என்று கூட தோன்றும். ஒருமுறை இவர் என்னை, தண்ணி வண்டி என்று சொல்லி விமர்சித்து இருக்கிறார். (அரங்கில் திடீர் சலசலப்பு) நான் நினைத்தேன், கவிஞர் என்னை, ஏன் தண்ணி வண்டி என்கிறார். தண்ணி வண்டியாக இருந்தாலும் தளும்பாமல்தான் செல்கிறது. எந்த இடத்திலும் தடுமாறியது இல்லை. அதனால், கவிஞன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறான்.
அது எனக்கு ஒரு சிறிய வடிகால். உன் உயர்வை விமர்சிக்க மாட்டேன்; என் படைப்பை யாரும் விமர்சிக்க முடியாது. என்னை விமர்சிக்கலாம்; என்னையும் உன்னையும் நான்கு சுவற்றுக்குள் வைத்து பேசிக்கொள்ளலாம். என் 73 வயதில் திரும்பி பார்க்கிறேன்; எதுவும் நிஜம் இல்லை; எல்லாம் மாயை. இந்த பாராட்டு, கைதட்டல் எல்லாம் இந்த கணத்தில் மறைந்து விடும். பெயரையும் புகழையும் நான் தேடிப்போனதே கிடையாது. வைரமுத்துக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. அதனால், இன்றைக்கு அவர் சாதனை படைத்து இருக்கிறார்; அவரை நான் வாழ்த்துகிறேன், எனக்கூறி முடித்தார்.
பாரதிராஜா பேசி முடித்ததும், அடுத்து, வைரமுத்து, என்ன பேசப்போகிறாரோ என்ற பரபரப்பு, அரங்கிலிருந்தவர்கள் மத்தியில் மேலும் அதிகரித்தது. அதற்கேற்பவே, வைரமுத்துவின் பேச்சும் அமைந்தது.
வைரமுத்துவின் பதிலடி பேச்சு
பாரதிராஜா அழகாக பேசினார். ஒலிபெருக்கி முன், பொய் பேசுவதை நிறுத்திவிட்டேன் என்றார். வாழ்க்கைக்கு சின்னச்சின்ன பொய் தேவையாக இருக்கிறது. ஒரு பொய், உண்மை போல் நன்மை செய்யும் என்றால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னை சுயம்பு என்று சொன்னார்; அதை ஏற்க மாட்டேன். விதை வீரியம் உள்ளதாக இருந்தாலும், அதை விதைக்க, ஒருவர் தேவை. விதை முளைக்க நிலம், நீர், காற்று தேவை. என்னை திமிர் உள்ளவன், கருவாயன் என்றெல்லாம் சொன்னார். என் தன்னம்பிக்கைக்கு பெயர், திமிர் என்றால், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். எந்த ஒரு விமர்சனமும் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் வரை அன்பு; அதுவே வெளியே வந்துவிட்டால் வம்பு. ஓட்டலுக்கு, நான் வாய்ப்பு கேட்டுப்போனபோது, 410ம் அறையில் தங்கி இருந்தார். இவரது, புதிய வார்ப்புகள் படத்தை, அப்போதுதான் பார்த்து இருந்தேன். அப்போது அவரிடம், சினிமாவில் எல்லாம் மாறி இருக்கிறது; திரைப்பட பாடல் மொழி மட்டும் இன்னும் மாறவில்லை என்றேன். அதை அவர் ரசித்தார். உயர்ந்த பாடலை, ஒரு உயர்ந்த கவிஞனால்தான் எழுத முடியும்.
சினிமாவில் மெட்டுக்கு பாட்டு என்பது என்ன? இசை அமைப்பாளர்கள் கிழித்துப்போடும் சப்தத்தை, தமிழால் தைத்து கொடுப்பதுதான் ஒரு பாடலாசிரியனின் வேலை...(வைரமுத்து பேசிக்கொண்டிருக்கையில், திடீரென பாரதிராஜா, மைக் அருகில் வந்து தனது பேச்சை துவக்கினார்)வைரமுத்து, நீ என்ன வேண்டும் என்றாலும் பேசலாம்; உனக்கு வித்தை தெரியும். எனக்கு உன் அளவுக்குத் தெரியாது. நான், ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் பேசினேன்; தவறு என்றால், மன்னித்துக்கொள்; நான் வருகிறேன், என, விரக்தியுடன் பேசிவிட்டு, சடாரென மேடையில் இருந்து கீழிறங்கி சென்றுவிட்டார்.
இதைப்பார்த்து, அரங்கிலிருந்த அனைவரும் ஒருவித அதிர்ச்சிக்கும், பரபரப்புக்கும் உள்ளாகினர். இருப்பினும், தொடர்ந்து நடந்தது நிகழ்ச்சி; ஒருவழியாக நிலைமையை சமாளித்து, உரையாற்றி முடித்தார் வைரமுத்து. கோவையில் நடந்த நிகழ்ச்சியில், அதுவும் பொதுமேடை ஒன்றில், இரு பிரபலங்கள் உரசிக்கொண்டது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.