ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எப்படியாவது நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை. மனசுக்குப்பிடித்த வேடங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை சம்பாதித்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் அழகி மோனிகா. தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...
* 23 வருட சினிமா பயணத்தில் நீங்கள் என்ன சாதித்ததாக கருதுகிறீர்கள்?
1990ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த அவசர போலீஸ்-100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக எனது கேரியரை தொடங்கிய நான், அதையடுத்து, சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரம்மா, என்றும் அன்புடன், பாண்டியன், சக்கரைதேவன், என் ஆசை மச்சான். சதி லீலாவதி, வரவு எட்டணா செலவு பத்தணா, இந்திரா, செல்லக்கண்ணு, ஆசை என பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் இந்திரா படத்தில், 'நிலாக்காய்கிறது நிதம் தேய்கிறது...' எனும் பாடலுக்கு படத்தில் நான்தான் நடித்தேன்.
அதன்பிறகு நான் நடித்த படம்தான் தங்கர்பச்சான் இயக்கிய அழகி. இந்த படத்தில் சின்ன வயது பார்த்திபனுக்கு ஜோடியாக அதாவது சிறுவயது தனலட்சுமியாக நடித்திருந்தேன். அந்தபடத்தில் நடித்ததற்காக ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான தரமான வேடங்கள்தான் கிடைக்கவில்லை. அதனால் என்னைத்தேடி வந்ததில் நல்ல வேடங்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தேன். அப்படி நடித்த பகவதி, சண்டக்கோழி, தாஸ் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் எனக்கு திருப்திகரமான வேடங்கள்தான் கிடைத்தது. அந்த வகையில், சினிமாவில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் என்னை தங்கள் குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணாக நினைக்கிற அளவுக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைத்திருக்கிறது. இது எனக்கு ரொம்ப சந்தோசமாகவே உள்ளது.
* மேல்தட்டு ஹீரோக்களுடன் நீங்கள் ஜோடி சேராதது ஏன்?
என்னைப்பொறுத்தவரை எந்த படங்களையும் ஹீரோக்களை மனதில் கொண்டு ஓ.கே பண்ணுவதில்லை. கதையும், எனது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் கால்சீட் கொடுத்து விடுவேன். ஆனால் அப்படி எனக்கு பிடித்த படங்கள் எல்லாமே வளர்ந்து வரும் மற்றும் புதுமுக நடிகர்களின் படங்களாகவே அமைந்து விட்டன. அதேசமயம், முன்னணி நடிகர்களான விஜய், விஷால், ஜெயம்ரவி போன்ற நடிகர்களின் படங்கள் கிடைத்தாலும், அதில் எனக்கு ஹீரோயினி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு கதாபாத்திரங்களுக்கு என்னை கேட்டனர். அந்த வேடங்கள் எனக்கு பிடித்திருந்ததால் நடித்தேன். மற்றபடி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர நான் மறுக்கவில்லை. சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதே உண்மை. மேலும், நான் கிளாமராக நடிக்க மறுப்பதினால்கூட அந்த மாதிரி வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
* சிலந்தியில் கிளாமராக நடித்த நீங்கள் தொடர்ந்து அப்படி நடிக்க மறுத்ததேன்?
சிலந்தியில் கிளாமராக நடித்ததே நான் செய்த தவறு. அந்த படத்தில் சரியான புரிதல் இல்லாமல் நடிக்க சம்மதித்து விட்டேன். அதனால்தான் அதன்பிறகு கிளாமர் வேடங்களாகவே என்னை முற்றுகையிட்டன. ஆனால் நான் திரும்பவும் அந்த தவறை செய்ய நினைக்கவில்லை. அதனால் அப்படி வந்த வாய்ப்புகளில் நடிக்க மறுத்து விட்டேன். அதன்காரணமாக எனக்கான படவாய்ப்புகள் குறைந்தது. ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு படங்களில் திருப்திகரமான மனநிலையிலேயே நடித்துக்கொண்டிருக்கிறேன்.
* ஏன் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையா?
நடிப்பில் நம்பர்-ஒன் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், கிளாமராக நடித்து நம்பர் ஒன் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. காரணம், எப்படியாவது நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. குறைவான படங்களில், குறைந்த சம்பளத்தில் நடித்தாலும் மனசுக்கு திருப்தியான வேடங்களில், நல்ல நடிகை என்கிற இமேஜை காப்பாற்றும் வகையில் நடித்தாலே போதுமென்று நினைக்கிறேன். காரணம், பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் பெயர் கெட்டு விட்டால் அதை மாற்றுவது என்பது நடக்காத காரியம். அதனால்தான், இந்த விசயத்தில் நான் ரொம்ப கவனமாக இருந்து வருகிறேன்.
* சினிமாவில் நடிப்பு தவிர டைரக்ஷன் ஆசை உள்ளதா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஆனால், சினிமாவுக்கு வெளியே ஏதாவது பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. விரைவில் ஒரு ஷோரூம் திறக்க இருக்கிறேன். அதற்காக சினிமாவை விட்டு விடுவேன் என்பதல்ல. எனக்கான வாய்ப்புகள் கிடைக்கிறது வரை தொடர்ந்து நடித்துக்கொண்டேயிருப்பேன். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று நான் அடம்பிடிக்கவும் மாட்டேன். நல்ல வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிப்பேன். அந்த மாதிரி பல படங்களில் நடித்தும் இருக்கிறேன். அதனால் எனது சினிமா பயணம் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
* இப்போது நீங்கள் நடித்து வரும் படங்களில் எந்தமாதிரியான ரோல்களில் நடிக்கிறீர்கள்?
இப்போது கன்னிகாபுரம் சந்திப்பு, நதிகள் நனைவதில்லை என்ற இரண்டு தமிழ்ப்படங்களில் நடிக்கிறேன். தவிர மலையாளத்தில் 3 படம் கைவசம் உள்ளது. இந்த படங்களில் கிராமம், நகரம் என இரண்டுவிதமான கதைக்களங்களில் நடிக்கிறேன். அதோடு, எனது திறமையை முழுசாக வெளிக்கொண்டு வரும் கேரக்டர்கள் அமைந்திருப்பதால் இன்னும் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படங்களில் நடிப்பில் இன்னும் நான் ஸ்கோர் பண்ணுவேன்.
* படப்பிடிப்பு இல்லாத நேரங்களை எப்படி செலவிடுகிறீர்கள்?
ஸ்டேஜ் ஷோக்கள், கடை திறப்பு விழா என பிசியாகத்தான் இருக்கிறேன். சினிமா மட்டுமின்றி மற்ற துறைகளிலும் நேரத்தை செலவிடுவதால் மனதுக்கு ஒரு மாறுதல் கிடைக்கிறது. அதோடு நிறைய புதுப்புது அனுபவங்களும் கிடைக்கிறது. அதோடு, புதிதாக வெளிவரும் படங்களை தோழிகளுடன் சென்று பார்த்து ரசிப்பேன்.
* வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை பார்த்து விட்டீர்களா?
எனக்கு பிடித்த நடிகர்களில் வடிவேலுவும் ஒருவர். இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் அவருடன் நானும் நடித்திருந்தேன். அந்த படமும் எனக்கு உலக அளவிலான ரசிகர்களிடம் ரொம்ப நல்ல பெயரை வாங்கித்தந்தது. மேலும், தெனாலிராமன் படத்தை பார்க்கவில்லை. படப்பிடிப்புகள் பிசியாக நடந்து கொண்டிருப்பதால் பார்க்க நேரம் இல்லை. என்றாலும் கூடிய சீக்கிரமே அந்த படத்தை பார்த்து ரசிக்கும் ஆவலில இருக்கிறேன் என்கிறார் மோனிகா.