ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
''தங்கமீன்கள்'' படத்தில் இயக்குனர் கம் ஹீரோ ராம்மின் மனைவியாக 'வடிவு' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றவர் நடிகை ஷெல்லி. இவர் 44வது சர்வதேச திரைப்பட விழாவில், தேர்வான ஒரே தமிழ்படமான 'தங்கமீன்கள்' படத்தின் சிறப்பு காட்சியில் டைரக்டர் ராம், பத்மப்ரியா ஆகியோருடன் பங்கேற்றார். அவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* தங்கமீன்கள் தான் உங்களுக்கு முதல் படமா...?
ஆமாம். தங்கமீன்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனர் ராம்மிற்கு நன்றி சொல்ல வேண்டும். இயக்குனர் பாலா அவர்கள் பரதேசி படம் எடுத்தபோது என்னை கதாநாயகியாக நடிக்க அழைத்தார். ஆனால் அந்த சமயம் எனக்கு வேறு பணி இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. இருந்தாலும் அப்படத்தில் பின்னர் தேர்வாகி நடித்த வேதிகா அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். ஆனாலும் பாலா சார் இயக்கத்தில் அந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
* வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறீர்களா...?
''குங்குமப்பூ'' என்ற மலையாள டி.வி. நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் மூன்று வருடங்கள் நடித்துள்ளேன். அதன்மூலம் நல்ல பாராட்டு கிடைத்தது. கேரளா கபே என்ற படம், அதை 10 டைரக்டர்கள் சேர்ந்து இயக்கினார்கள். அதில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஹிட்டான சட்டக்காரி படத்தின் லேட்டஸ்ட் ரீ-மேக்கில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனீஜ் இயக்கிய வெயிட்டிங் ரூம் என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன்.
* நீங்கள் படித்திருப்பது...?
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டமும், பின்னர் இந்திரகாந்தி திறந்தவெளி பல்கலையில் சமூகப்பொருளாதார பட்டமும் பெற்றுள்ளேன். இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன்.
* தங்கமீன்கள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து...?
தங்கமீன்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாதது. என் கதாபாத்திரத்தை முதலிலேயே இயக்குனர் ராம் முழுமையாக விளக்கிவிட்டார். காட்சி எடுக்கும்போது காட்சியை பற்றி சொல்லிவிட்டார், நடிப்பதற்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தார். தேவைப்பட்டால் திருத்தம் சொல்லுவார். இந்தப்படம் தான் எனக்கு நடிக்கும் தன்னம்பிக்கையை உருவாக்கியது. பொதுவாக குழந்தைகளுக்கு அம்மா செல்லம் கொடுப்பார், அப்பா கண்டிப்பாக இருப்பார். ஆனால் இந்தப்படத்தில் நேர் எதிராக இருந்தது. தன் கணவர் சரியாக வேலைக்கு போகவில்லை, அவரிடம் பணமில்லை என்பது ஒரு குழந்தைக்கு தாயான வடிவு பாத்திரத்திற்கு பெரிய சுமை. இந்தப்படத்தை முடித்து கொண்டு வர ராம் சார் எடுத்த முயற்சிகள், தாங்கிய வலிகள் கொஞ்சமல்ல. ஒரு பெண்ணிற்கு பத்து மாதம் கர்ப்பம், பின்னர் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் ராம் சார், இந்த தங்கமீன்கள் படத்தின் கதையை ஐந்து வருடம் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட பெண்கள் போன்று அவரும் இந்த கதையை கர்ப்பத்தை சுமப்பது போல் சுமந்துள்ளார்.
* கோவா திரைப்பட விழாவில் நீங்கள் ரசித்து பார்த்த படங்கள் குறித்து...?
ஒரு சில படங்கள் தான் பார்க்க முடிந்தது. ஷ்ஷ்.. பெண்கள் கதறுவதில்லை என்ற ஈரான் நாட்டு படம், அப்படியே மனதில் நிற்கிறது. எட்டு வயது சிறுமியை அந்த அபார்ட்மென்ட் வாட்ச்மேன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். அந்த குழந்தையின் அலறலை கேட்டு, ஷெரின் என்ற பெண் காப்பாற்றுகிறாள். பலாத்காரம் செய்தவனை இரும்பால் தலையில் அடிக்க அவன் இறக்கிறான். தன் திருமண நிச்சயதார்த்தம் அன்று நடக்கும் இந்த சம்பவத்தால் அவளது திருமணம் நின்று, அவளும் சிறையில் அடைக்கப்படுகிறாள். ஒரு பெண் வக்கீலும், ஷெரினை திருமணம் செய்ய இருப்பவரும், ஷெரினை காப்பாற்ற எவ்வளவோ போராடுகின்றனர். ஆனால் இறுதியில் அவள் தூக்கிலிடப்படுகிறாள். அத்துடன் படம் முடிகிறது. இந்தப்படம் என்னை ரொம்பவே பாதித்தது. அதேப்போல் மலையாளத்தின் முதல் இயக்குனர் ஜே.சி.டானியலின் வாழ்க்கையை ஸெல்லுலாய்டு என்ற மலையாளப்படம் சித்திரிக்கிறது. கமல் இயக்கி இருந்தார். இதையும் மிகவும் ரசித்தேன்.
* எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்...?
கிராமத்து பெண், மாடர்ன் பெண் என இரண்டு வகையிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிக்கும் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருக்க வேண்டும். இயக்குனர்கள் என் நடிப்பில் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
* அடுத்த தமிழ்ப்படம்...?
ஓரிரு அழைப்புகள் வந்திருக்கின்றன. இன்னும் முடிவாக இல்லை.
தினமலர் வாசகர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -