ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
சித்தி, சித்தப்பாவுக்கு எதிரான புகாரை, பதிவு செய்யக் கோரியும், போலீஸ் பாதுகாப்பு கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகை அஞ்சலி, மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களுக்குப் பதிலளிக்கும்படி, போலீசுக்கு, "நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து : சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, பால திரிபுரசுந்தரி என்கிற நடிகை அஞ்சலி, தாக்கல் செய்த மனு: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளேன். என் தாயார், ஆந்திர மாநிலத்தில், வசித்து வருகிறார். உயிருக்கு ஆபத்து உள்ளதால், தற்போது, ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். என் சித்தி, பாரதிதேவி, அவரது கணவர் சூரிபாபு ஆகியோர் என்னை, அச்சுறுத்துகின்றனர்.
படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வருவதால், என் வீடு, சொத்து, வங்கி கணக்கு, பராமரிப்பு பணிகளை, சித்தி, சித்தப்பாவிடம் ஒப்படைத்தேன். கடந்த ஆண்டு, ஜூனில், சென்னை, வளசரவாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாங்கினேன். அதன்பின், அந்த வீட்டில் தான் வசித்து வந்தேன். வீட்டை பராமரிக்கும் பொறுப்பை, பாரதிதேவி, சூரிபாபுவிடம் ஒப்படைத்தேன். சினிமா இயக்குனர் களஞ்சியம், என்னை சினிமா துறைக்கு, அவரது படத்தின் மூலம், அறிமுகப்படுத்த முயற்சித்தார்; பணப் பிரச்னையால், அது நடக்கவில்லை. என் நலன் விரும்பி போல், அவர் நடிக்க ஆரம்பித்தார். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா தொழிலிலும் குறுக்கிட்டார். அவரை வீட்டில் அனுமதிக்க வேண்டாம்; அவர் சொல்படி நடக்க வேண்டாம் என, சித்தி, சித்தப்பாவிடம் கூறினேன். "என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என, களஞ்சியத்திடமும் கூறினேன். ஆனால், என் வார்த்தையை, அவர்கள் கேட்கவில்லை.
ரூ.57.30 லட்சம் கையாடல் : படப்பிடிப்புக்காக, பெரும்பாலும் வெளியூரில் இருப்பதால், அன்றாட தேவைக்காக, வெற்று காசோலையில் கையெழுத்திட்டு, பாரதிதேவியிடம் கொடுப்பது வழக்கம். அவர்கள் மீது இருந்த நம்பிக்கையால், அவ்வாறு செய்தேன். பல்வேறு காரணங்களையும், செலவினங்களையும் கூறி, வெற்று காசோலையில், என் கையெழுத்தை அவர்கள் பெற்றனர். இதனால், சந்தேகம் அடைந்து, சென்னை, தி.நகரில் உள்ள, இந்தியன் வங்கி கிளையில், கணக்கு விவரங்களை பெற்றேன்; அதிர்ச்சி அடைந்தேன். 57.30 லட்சம் ரூபாயை, வங்கியில் இருந்து எடுத்தது தெரிய வந்தது.
மிரட்டல் : இது குறித்து கேட்ட போது, என்னை மிரட்டினர். அவர்களின் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து, ஐதராபாத்தில், என் தாயார், சகோதரருடன் தங்கியுள்ளேன். என் வங்கிக் கணக்கை காட்டி, சூரிபாபு பெயரில், கார் வாங்கப்பட்டது. நான் கடன் பெற்றது போல் காட்டப்பட்டது. களஞ்சியத்தின் தூண்டுதல், ஆலோசனையின்படி, என் வீட்டில், பாரதிதேவி, சூரிபாபு, அவர்களின் குழந்தைகள் இருந்து கொண்டு, "வீட்டுக்கு வரக்கூடாது என, என்னை மிரட்டுகின்றனர். வீட்டில், எனக்குரிய, 50, சவரன் நகைகள் உள்ளன. அதையும், அவர்கள் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த, செப்டம்பரில் புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு, அந்தப் புகார் அனுப்பப்பட்டது. இதுவரை, புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரை பதிவு செய்து, விசாரணை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு கோரி, மற்றொரு மனுவையும், நடிகை அஞ்சலி தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், நீதிபதி தேவதாஸ் முன், விசாரணைக்கு வந்தன. மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஒரு வாரத்துக்கு, நீதிபதி தேவதாஸ் தள்ளிவைத்தார்.