மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தமிழிசையின் சகாப்தம், "வெண்கலக்குரல் மன்னன் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வன், உள் உறுப்புகளுக்கான மருத்துவ சிகிச்சை நிபுணர், தமிழிசை வேந்தர், கர்நாடக சங்கீத வித்வான், பல மொழிகளில் பாடும் திறன் படைத்தவர், வெளிநாடுகளில் கச்சேரிகளை நடத்தி தமிழிசையை உலகம் முழுவதும் கொண்டு செல்பவர் என பன்முகம் கொண்டவர் "பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம். தமிழக அரசின் "கலைமாமணி உட்பட 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று அவற்றுக்கு பெருமை சேர்த்து வருகிறார். தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அவர் மதுரையில் நம்மிடம் பேசியது..
* மருத்துவ நிபுணர், சங்கீத வித்வான், இரண்டும் எப்படி சாத்தியம்?
மருத்துவமும், சங்கீதமும், எனது இரு கண்கள். இருதுறைகளுக்கும் நேரம் ஒதுக்கி சாதனை படைத்து வருகிறேன்.
* இசையால் நோய்களை குணமாக்க முடியும், என கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டதுண்டா?
தியாகராஜ சுவாமிகள், தீட்சிதர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாச்சலக் கவிராயர் உள்ளிட்டோர் இசையால் நோய்களை குணமாக்கி உள்ளனர். தமிழக அரசின் "ராக ஆராய்ச்சி மையத்தின் தலைவராக குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தார். அதில் நானும் உறுப்பினர். இம்மையம் மூலம் இசையால் உயர் ரத்த அழுத்தத்தை சீர்படுத்திஉள்ளோம். அமெரிக்காவில் "மியூசிக் தெரபி என நவீன முறையில் இசையால் சிகிச்சை அளிக்கின்றனர்.
* இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு உங்களது இசை எந்தளவுக்கு உதவியது?
போர் முடிந்த தருவாயில் வவுனியாவில் தங்கியிருந்து வட்டாப்பழை கண்ணகி கோயிலில் கச்சேரி நடத்தி ஈழத்தமிழர்களை நேருக்கு நேர் களத்தில் சந்தித்து உதவி உள்ளேன். தொடர்ந்து உதவி வருகிறேன்.
* சினிமாவில் உங்கள் குரல் ஓங்கவில்லையே?
சினிமாவில் பாடினால் தான் பாட்டா? அதை நான் நம்புவதில்லை. என்னை பொறுத்தமட்டில் சினிமாவிலும் பாட வேண்டும். பிரபு, கார்த்திக், பிரசாந்த், ராமராஜன் போன்ற நடிகர்களுக்காக சினிமாவில் பாடியுள்ளேன். குரலில் தனித்துவம் வேண்டும். இது பலருக்கு இல்லை. எனது குரல் வளம் அனைவருக்கும் ஏற்றவாறு இருக்கும். எனினும், வாய்ப்பு தாருங்கள், என நான் யாரிடமும் கேட்டதில்லை. கிடைக்கும் வாய்ப்பை முழு திருப்தியுடன் செய்து வருகிறேன். என்னை சந்திக்கும் இசையமைப்பாளர்கள், எனக்கான சந்தர்ப்பம் வரும்போது வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். என் தரம் நிரந்தரம்.
* கர்நாடக வித்வான், என்றால் தான் கவுரவம் எனும் நிலை உள்ளதே?
கர்நாடகம் என்றால் பழமையானது என்பர். உலகின் முதல் மொழி தமிழ். பூம்புகார் கரையில் நடந்த நாடகம் தான் சிலப்பதிகாரம். "கரை நாடகத்தில் இருந்து பிறந்தது தான் கர்நாடகம். எனவே, கர்நாடக சங்கீதம் என்பது தமிழ் இசைதான். கர்நாடக சங்கீத வித்வான்கள், தமிழிசை வித்வான்களால் அரவணைத்து செல்லப்படுகிறார்கள்.
* உங்களது இசை வாரிசு?
எனது மகன் சந்தோஷ்முருகன், வைஷ்ணவி, வருண்கோவிந்த் ஆகியோர் முறைப்படி சங்கீதம் கற்றுள்ளனர். எனது சங்கீத குருவான பி.கிருஷ்ணமூர்த்தியிடம், சந்தோஷ்முருகன் சங்கீதம் கற்று வருகிறார். ""நீ இசைத்துறைக்கு தான் வரவேண்டும், என எனது தந்தை போல் சொல்லாமல், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற துறையில் வர வேண்டும். இறைவன் அருள் கிடைத்தால், அவர்களும் இசைத்துறையில் சாதிக்க முடியும்.
* தமிழ் சினிமா பாடல்களில் தமிழ்க்கொலை நடக்கிறதே?
- அது, அப்பாடலை எழுதிய கவிஞர், இசையமைப்பாளர் குற்றம்.
* எதிர்காலத்தில் திரை இசை எதை நோக்கி செல்லும்?
தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்கால திரை இசையில் பாடல்களே இருக்காது.