ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய சினிமா 100 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்தியத் திரையுலகம் மேலும் பல வியக்க வைக்கும் படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலக சினிமாவில் ஒரு தடம் ஆழமாகப் பதிந்திருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ், தெலுங்குத் திரையுலகத்தினர் உடைக்க ஆரம்பித்தனர்.
ரஜினிகாந்த்தின் சிவாஜி படம் வெளிவந்த பிறகு தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா உலக அளவில் ஒரு பரந்து விரிந்த வினியோகத்தை அடுத்தடுத்து ஏற்படுத்தியது. பின்னர் தெலுங்குத் திரைப்படங்களும் அந்த வழியில் வெற்றிகரமாக, தமிழ் சினிமாவை விடவும் கொஞ்சம் அதிகமாக நடை போட ஆரம்பித்தது.
பாகுபலி எனும் சரித்திரம்
2015ம் ஆண்டில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தி இந்திய சினிமா என்பது இந்தி சினிமா மட்டுமல்ல வேறு மொழிப் படங்களும் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன என்ற பார்வையை உலக சினிமா ரசிகர்களிடம் ஆழமாகப் பதிய வைத்தது. அப்படி ஒரு மகத்துவத்தை ஏற்படுத்திய பெருமை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியையே சாரும். 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் தேதி வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது.
பாகுபலி-2
முதல் பாகத்தை உருவாக்கும் போதே இரண்டாம் பாகத்தின் 40 சதவீதம் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து வைத்திருந்தனர். 2016ம் ஆண்டின் இறுதியில் இரண்டாம் பாகத்தை வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தனர். அதன் பின் 2017ம் ஆண்டின் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டால் இன்னும் வசூல் அதிகமாகும் என்ற காரணத்தால் நாளை ஏப்ரல் 28ம் தேதி படத்தை உலகம் முழுவதும் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான அளவில் வெளியிடுகின்றனர். முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் அதற்கான விடை தெரிய வரப் போகிறது.
ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
முதல் பாகத்தை அந்த சஸ்பென்ஸுடன் முடித்து வைத்ததே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. பாகுபலி என்ற இந்த ஒரு படத்தின் மீது ஏன் இத்தனை ஆர்வம், எதிர்பார்ப்பு. சினிமா ஆரம்பமான காலத்தில் முதலில் சரித்திரக் கதைகள்தான் திரைப்படங்களாக அதிகம் எடுக்கப்பட்டன. அதன் பின்புதான் சமூகக் கதைகளை படமாக்க ஆரம்பித்தனர். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சயின்ஸ் பிக்ஷன் கதைகளைப் படமாக்கும் அளவிற்கு இந்திய சினிமா உயர்ந்தது.
ஆனாலும், சரித்திரப் படங்களைப் பார்க்கும் ஒரு பாக்கியம் இன்றைய தலைமுறையினருக்கு, கிடைக்காமலே இருந்தது. கதைகளில் மட்டுமே சரித்திரக் கதைகளை அவர்கள் படித்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். இருந்தாலும் முந்தைய வரலாறு மீது இளம் தலைமுறையினருக்கு ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது. அந்த ஆர்வம்தான் பாகுபலி படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்த காரணமாக அமைந்தது.
பிரமிக்க வைத்த பிரம்மாண்டம்
எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் படத்தின் சாயல் பாகுபலி படத்திலும் இருந்தது என்று சொன்னார்கள். சரித்திரப் படம் என்றாலே ஒரு மன்னன், அந்த மன்னனுக்கு ஒரு எதிரி, சூழ்ச்சி வலை பின்னும் உடனிருப்பவர்கள் என்ற பொதுவான அம்சங்கள் இருக்கும். அதுதான் பாகுபலி படத்திலும் இருந்தது. ஆனால், அதை கண்களை விரித்துப் பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டம் என்ற அளவில் பிரமிக்க வைத்துவிட்டார் இயக்குனர் ராஜமௌலி.
ஒரு குறிப்பிட் நீள, அகல, உயர திரையில் அடக்கவிட முடியாத அளவிற்கு பாகுபலி படம் அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கதாபாத்திரங்கள், அந்தந்த கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள், அண்ணாந்து பார்க்க வைக்கும் அரண்மனை அரங்குகள், கணக்கிலடங்கா துணை நடிகர்கள், கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் என சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு பல விஷயங்கள் பாகுபலி படத்தில் இருந்தன. அது, இரண்டாம் பாகத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
பலமொழி கலைஞர்களின் பிரமாண்ட உழைப்பு
தெலுங்கிலிருந்து பிரபாஸ், ராணா டகுபட்டி, தமிழிலிருந்து சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், கன்னடத்திலிருந்து அனுஷ்கா, ஹிந்தியிலிருந்து தமன்னா என பல மொழி நடிகர்களை ஒன்றிணைத்து நடிக்க வைத்ததும் இந்தப் படம் இந்திய அளவில் ரசிக்கவும் காரணமானது. தொழில்நுட்பக் கலைஞர்கள் பல மொழிக் கலைஞர்கள் உட்பட உலகக் கலைஞர்கள் இந்தப் படத்திற்காக தங்களது உழைப்பையும், கற்பனையையும் கொட்டியுள்ளனர். பலரது உழைப்பில் ராஜமௌலி என்ற சிறந்த இயக்குனரின் படைப்பில் பாகுபலி 2 படம் நாளை வெளியாக உள்ளது.
முதல்பாகத்தை விட இரண்டு மடங்கு வியாபாரம்
சுமார் 150 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட முதல் பாகம் 700 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்பட்டது. இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட அதிகம் செலவு செய்து சுமார் 250 கோடி வரை செலவு செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் வியாபாரம் முதல் பாகத்தின் வியாபாரத்தை விட பல மடங்கு அதிகமாகவே விற்றுள்ளார்கள். சில ஏரியாக்களில் முதல் பாகத்தின் வசூல் தொகையை விடவும் அதிகமாக விற்றுள்ளார்கள். இரண்டாம் பாகத்தின் வியாபாரம் சுமார் 500 கோடி ரூபாய் வரை நடைபெற்றுள்ளது.
ரூ.1000 கோடி வசூலிக்குமா...?
முதல் பாகத்தின் வசூல் 700 கோடியாக இருக்கும் நிலையில், இரண்டாம் பாகத்தின் வசூல் 1000 கோடிடையக் கடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி 1000 கோடி ரூபாயைக் கடந்தால் இந்தியத் திரையுலகில் முதன் முறையாக 1000 கோடிடையக் கடக்கும் திரைப்படம் என்ற பெருமைய ஒரு தெலுங்குப் படம் பெறும். அது மட்டுமல்ல, முதல் நாள் வசூலாக இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் 100 கோடி ரூபாயை ஒரே நாளில் கடந்ததில்லை. அந்த சாதனையையும் பாகுபலி 2 நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை படைத்த டிரைலர்
இரண்டாம் பாகத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதற்கு பாகுபலி 2 படத்திற்கான டிரைலர் சாதனையே ஒரு உதாரணம். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ஒரு சில மணி நேரங்களிலும், ஒரு சில நாட்களிலும் தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்தது. இன்னமும் அந்த டிரைலர்களை பலர் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
பம்பரமாய் சூழன்ற பாகுபலி டீம்
ஒரு படத்தை தயாரித்து முடிப்பதுடன் படக்குழுவினரது வேலை முடிந்துவிடுவதில்லை. அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களுக்கும் சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அதையும் இக்குழுவினர் சரியாகச் செய்து வருகிறார்கள். ஐதராபாத், சென்னை, மும்பை, கொச்சி, துபாய் என பல ஊர்களுக்கும் சென்று தங்களது படத்தைப் பற்றியும், தங்களது உழைப்பைப் பற்றியும் எடுத்துச் சொல்லி மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கிறார்கள்.
வியக்கும் முன்பதிவு
பாகுபலி 2 படத்திற்கான முன் பதிவும் எதிர்பார்த்ததை விட மேலாக போய்க் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதிலும் பல இணையதளங்களில் 24 மணி நேரத்திற்குள் பல லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. சில இணையதளங்கள் நேற்று முடங்கும் அளவிற்குப் போனது.
அமெரிக்காவில் மட்டும் 1000 தியேட்டர்
அமெரிக்காவில் மட்டும் பாகுபலி 2 சுமார் 1000 தியேட்டர்களுக்கும் சற்று அதிகமாக வெளியாக உள்ளது. இன்றே பல தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளது. அதன் மூலமே சில கோடிகளை இன்றே வசூலித்துவிடும். சிறப்புக் காட்சிகள் முன் பதிவும் தங்கல் திரைப்படத்தின் சாதனையை முறியடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐமேக்ஸ் விருந்து
ஐமேக்ஸ் திரையிடலிலும் அதிக தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது. தமிழில் இப்படம் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்குக் குறைதான்.
பாகுபலி-2-வும் காவிரி சர்ச்சையும்
ஒரு பக்கம் சரித்திரத்தை நோக்கி பாகுபலி 2 படத்தின் பயணம் இருந்தாலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் அதன் பயணம் இருந்தது. கர்நாடகாவில் படத்தை வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. காவிரி பிரச்சனைக்காக 9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் பேசிய பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று ஏப்ரல் 28ம் தேதி பந்த்தையும் அறிவித்தார்கள். கடைசியில் சத்யராஜ் வருத்தம் தெரிவிக்க கன்னட அமைப்புகள் தங்களது எதிர்ப்பை திரும்பப் பெற்றன.
தமிழில் தடையில்லை
தமிழிலும் படத்தை வாங்கிய வினியோகஸ்தரான ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகம் இருந்தது. கடைசியில் சுமார் 10 கோடி நஷ்டத்துடனேயே படத்தை முதலில் வாங்கிய கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், ஒரு வழக்கும் விசாரணக்காகக் காத்திருந்தது. அந்த பிரச்னையும் தீர்ந்துள்ளது, படத்தை வெளியிட தடையில்லை என்று கோர்ட் கூறிவிட்டது.
இந்திய சினிமாவுக்கு பெருமை
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், எவ்வளவு எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் பாகுபலி படத்தின் முதல் பாகமும் சரி, இரண்டாம் பாகமும் சரி இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு பெருமையைத் தரக் கூடிய படைப்பாகவே இருக்கும்.
ராஜமௌலியே இதற்குப் பிறகு இதை விட அதிக பொருட்செலவில் வேறு பிரம்மாண்டமான சரித்திரப் படத்தை இயக்கினாலும் பாகுபலி படம் போன்ற பெயரையும், புகழையும், வசூலையும் பெற முடியுமா என்பது சந்தேகமே.