Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பேஷ்... பேஷ்... பிரமாதம் நாகேஷ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

27 ஆக, 2016 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Nagesh-Sir

உன் நகைச்சுவைக்கு கிடைத்தது எத்தனை சபாஷ்

உன் நடனத்திற்கு கிடைத்ததோ எத்தனை பேஷ்


உன் நடிப்பிற்கு அடிமையானது தமிழ் தேசம் - என்றாலும்


உனக்கு மரியாதை செய்யத் தவறியது இந்திய தேசம்.


பல நுாறு படங்களில் பலவிதமான கதாபாத்திரங்கள். நகைச்சுவையில் இத்தனை சுவை உண்டா என ரசிகர்களை வியக்க வைத்தாய். நகைச்சுவைக்கு புதிய பரிமாணத்தையே உருவாக்கியவன் நீயன்றோ. மாதுவாய் (எதிர் நீச்சல்), தருமியாய் (திருவிளையாடல்), சுந்தரமாய் (சர்வர் சுந்தரம்), வைத்தியாய் (தில்லானா மோகனாம்பாள்), செல்லப்பாவாய் (பொம்மலாட்டம்), பாலுவாய் (நினைவில் நின்றவள்), இரு வேடங்களில் (அனுபவி ராஜா அனுபவி),


அவிநாசியாய் (மைக்கேல் மதன காமராஜன்), ஜோசப்பாய் (அவ்வை சண்முகி) அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து, உன் திறமையால் அதை ஒளிரச் செய்து, இன்றும் பல கோடி தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.


தமிழக மக்களை பல ஆண்டுகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கத் தானோ என்னவோ, மேடை நாடகத்தில் முதன் முறையாக சில நிமிடங்கள் வந்தாலும், வயிற்று வலியால் அவதிப்படும் ஒரே பாத்திரமாக, பல விதமான பாவங்களில் அம்மா... அம்மா... என, துடிப்பது போல் நடித்த காட்சி உனக்கு பிள்ளையார் சுழியானது. அந்த நாடகம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட ஆரம்பமானது உன் கலைச் சேவை.


உன் பிறந்த தினமான இன்று, உன் படங்களில் இருந்து சில மணியான நகைச்சுவை துளிகளை, தினமலர் வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறேன். டைமிங்கில் உன்னை மிஞ்சுவார் யாரும் இல்லை. எங்கு சந்தர்ப்பம் கிடைத்ததோ, அங்கெல்லாம் நீ புகுந்து கமெண்ட் அடிப்பாய். எத்தனையோ படங்களில் நுாற்றுக்கணக்கான உதாரணங்கள் சொல்லலாம். ஆனால், மணிகள் இதோ....




உத்தரவின்றி உள்ளே வா : ரவிசந்திரன், காஞ்சனாவிடம் பேச்சை ஆரம்பிக்கும் பொருட்டு என்னைப் பாரும்மா எனக் கூற, பின்னால் இருந்து நீ காஞ்சனாவை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களையும் பாரும்மா என்பதாகட்டும், காதலிக்க நேரமில்லையில் பாலையாவும், முத்துராமனும் பிக்னிக் போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது பாலையா வரவில்லை எனக் கூற முத்துராமன், நான் போகிறேன், எனக்கு வயசாகவில்லை, ஒரு இரும்பை கொண்டு வாங்க நான் கடித்துக் காட்டுகிறேன் எனக் கூற, பின்னால் இருந்து நீ இதற்கு முன்னால் சர்க்கஸில் வேலை பார்த்தீர்களா என, டைமிங்கில் வசனத்திற்கு கிடைத்த வரவேற்பு... அப்பப்பா... இதெல்லாம் வசனகர்த்தா எழுதி இடம் பெற்றதா என்பது சந்தேகமே.


அனுபவி ராஜா அனுபவி : தந்தை வேடத்தில் நடிக்கும் மேஜர் சுந்தரராஜன் கோபமாகி உன்னையும், முத்துராமனையும் வீட்டை, விட்டு வெளியே துரத்தி இனிமேல் நான் உங்களுக்கு அப்பனும் இல்லை, நீங்க இரண்டு பேரும் எனக்கு மகனும் இல்லை எனக் கூறுவார். உடனே நீ இப்படி சொன்னா எப்படிப்பா ரெண்டுல ஏதாவது ஒண்ணு ஒத்துக்கோங்க என முடிப்பது உன் டைமிங் உணர்வுக்கு சான்று. இவை எல்லாவற்றையும் விட, வில்லன்களிடம் நீயும், கதாநாயகனும் மாட்டிக் கொள்ள அவன் அடியாள் ஒருவன் துப்பாக்கியை நீட்டி நீங்கள் இருவரும் சாகப் போகின்றீர்கள், உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க எனக்கு அந்த துப்பாக்கி வேண்டும் எனக்கூற, இந்த காட்சிக்கு சிரிக்காதவர்கள் யார் இருக்க முடியும்.


மின்னலே : நீ ஒரு லைப்ரரி நடத்திக் கொண்டிருப்பாய், புத்தகம் வாங்க வந்த பெண் புத்தகம் எடுத்ததும், பேர் என்னம்மா என கேட்க ஹேமா என, பதில் வர போம்மா என ரைமிங்காய் முடிப்பாய். வி.கே.ராமசாமியுடன் ஒரு படத்தில் தந்தையும், மகனுமாய் ஓட்டல் நடத்துவீர்கள்,. இன்றைய ஸ்பெஷல் என, நீ அறிவிப்பு பலகையில் கேழி ... என எழுதிக் கொண்டு இருப்பாய். வி.கே.ஆர் கோழிக்கு கால் எங்கே எனக் கேட்க, நான் என்ன படமா வரையறேன், கால் எல்லாம் போடுவதற்கு என பதில் அளிக்க கைதட்டல் ஒலி விண்ணை தொட்டது.


ஆம், இல்லை, எஸ், நோ என ஒரு வார்த்தையில் நீ பதில் சொல்லி இருப்பாயா என்பது சந்தேகம். காதலிக்க நேரமில்லை படத்தில் கதை கேட்க நீ ரவிச்சந்திரனை தேடி போகும் போது, அவர் நீ மிஸ்டர் விஸ்வநாதன் சன் இல்லை என்று கேட்கும் போது ஆமாம் என்று சொல்லாமல் எக்ஸாட்லி அவர் தான் எங்க அப்பா என்று ஆரம்பித்து, அதே படத்தில் பாலையாவும், நீயும் முத்துராமனை பார்க்கப் போகும் போது டேய் கப்பலை பார்த்திருக்கியா என, பாலையா கேட்க அப்பா அது எனக்கு இப்படிப்பா என, சொடக்கு போட்டு கூறுவது மைக்கேல் மதன காமராஜனில் கமலஹாசனின் (காமேஸ்வரனின்) முதல் இரவுக் காட்சியில், அந்த பாட்டி ஆப்பிள் சாப்பிடறாளே எனக் கேட்க பார்த்திருக்கேன் என்று பதில் சொல்வது என எல்லா படங்களிலும் ஆம், இல்லை ஒரு சொல் பதிலை தவிர்த்து உன் தனித் தன்மையை காட்டினாய்.


பட்டணத்தில் பூதம் : உன் காதலி உன்னிடம் எங்க மாமா ஒரு நாய் வளர்த்தார் அதற்கு சீசர்னு பேரு வைச்சார். ஆனா, 3 நாளில் செத்துப் போச்சு என்பார். உடனே நீ பேரு வச்சாரு சரி, சோறு வைச்சானா என்றதும் ரசிகர்களின் குபீர் சிரிப்பை அடக்க முடியுமா.


அனுபவி ராஜா : நீயும் முத்துராமனும் அத்து மீறி கதாநாயகி வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்களை வர்ணித்ததும், அவர் தந்தை கோபமாக ஐ ஆம் ஹெர் பாதர் என்றதும் வி டோன்ட் பாதர் என்பதையும் மறக்க முடியுமா.


நினைவில் நின்றவள் : கே.ஆர்.விஜயா புத்தகத்தை பார்த்து சமைத்துக் கொண்டு இருப்பார். அவர் கணவரின் நண்பனான நீ புத்தகத்தை பார்த்து, படித்து, அடுத்தது என்ன, அடுத்தது என்ன என அவர் கேட்க நீயோ ஒவ்வொரு கேள்விக்கும், அடுத்தடுத்த பக்கத்திலிருந்து குறிப்புக்களை படிக்க, சாம்பார் பசை போல ஆகியிருக்கும், இதை என்ன செய்வது என அவர் கேட்க வெளியில் ஒரு நாய் இருக்கு, அதற்கு கொடு, அதற்கு ஒண்ணும் ஆகவில்லை என்றால் என்ன பண்ணலாம் என அவர் கேட்க உடனே நீ நாளையிலிருந்து இதையே செஞ்சு அதுக்கு கொடு என்பாய். இதற்கு ஈடான காட்சி இன்று கிடைக்குமா...


இன்னொரு படத்தில் உசிலை மணி தண்ணீரில் விழுந்து விட, அவரை நீயும் உன் நண்பனும் காப்பாற்றுவீர்கள். அவர் உங்களுக்கு வேலை கொடுப்பதாக கூறுவார். உங்களுக்கு என்ன தெரியும் என கேட்க உன் நண்பன் கார் ஓட்டத் தெரியும் என்பான். உடனே டிரைவர் ஆக சேர்ந்து கொள்கிறேன் என்பார். உன்னை பார்த்து உனக்கு என்ன தெரியும் எனக்கேட்க நீ அவனுக்கு கார் ஓட்டத் தெரியும்னு எனக்கு தெரியும் என்பாயே, இதற்கு ரசிகர்கள் எப்படி சிரித்திருப்பார்கள் என சொல்ல வேண்டுமா... மனிதம் உள்ளவரை நகைச்சுவை இருக்கும், நகைச்சுவை உள்ளவரை நீ இருப்பாய். எங்களை சிரிக்க வைத்த நாகேஷே... உனக்கு நன்றி!


-ரா.ரவிச்சந்திரன்,


திரை நகைச்சுவை ஆராய்ச்சியாளர்


சென்னை. 99406 75576


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in