மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பாலிவுட்டின் குயினாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். ஆரம்பகாலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டவர், தொடர் வெற்றியால் இப்போது நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தேசிய விருதும் பெற்றுவிட்ட கங்கனாவின் நடிப்பில் வரும் வாரம் வௌியாக இருக்கும் படம் ''கட்டி பட்டி''. இப்படம் பற்றிய அனுபவங்களை கங்கனா பகிர்ந்து கொண்டுள்ளதாவது...
கட்டி பட்டி எந்த மாதிரியான படம்.?
கட்டி பட்டி என்று படத்தின் தலைப்பை கேட்டவுடன், இந்தப்படம் ஏதோ இரண்டு நண்பர்கள் சம்பந்தப்பட்ட கதையோ, இரண்டு சகோதரிகள் சம்பந்தப்பட்ட கதையோ என்று நினைத்தேன். ஏனென்றால் இதுபோன்ற பெயர் உடைய கதைகள் எல்லாம் அந்தமாதிரி தான் இருக்கும். ஆனால் இந்தப்படம் அப்படிப்பட்ட கதையல்ல, ஒரு அழுத்தமான காதல் கதையாகும். மக்கள் எல்லோரும் இந்தப்படம் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் தம்பதி பற்றிய கதை என்று நினைக்கிறார்கள், அப்படி கிடையாது, இது ஒரு ரொமான்ட்டிக் காதல் கலந்த படம்.
எதன் அடிப்படையில் கதையை தேர்வு செய்வீர்கள்.?
இதில் சந்தேகமே வேண்டாம், முழுக்க முழுக்க கதையை மையப்படுத்தி, எனக்கு எந்தளவுக்கு அழுத்தமான வேடம் இருக்கிறது என்று பார்த்து தான் கதையை தேர்வு செய்வேன். குயின் படத்தில் நல்ல ரோல் அமைந்தது, அதைக்காட்டிலும் தனு வெட்ஸ் மனு படத்தில் நல்ல ரோல் அமைந்தது. இப்போது கட்டி பட்டியில் அப்படியொரு நல்ல ரோல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் கதையை தேர்வு செய்யும் போது முந்தைய படங்களில் இருந்து எனது ரோலை வித்தியாசப்படுத்தி காட்டும் வேடங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன்.
ஒரு நடிகையாக வெற்றி பெற்ற பின்னர் எந்த மாதிரி நீங்கள் உணருகிறீர்கள்.?
ஒரு நடிகையாக வெற்றி பெறுவதற்கு முன்னர் என்னிடம் ஒரு படம் கூட கிடையாது, ஆனால் இப்போது அப்படியில்லை, தினமும் ஒரு படம் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் தான் நான் நடிக்கணும் என்ற கட்டாயம் கிடையாது. எனக்கு பிடித்த படங்களில் நடிக்கிறேன். வருகிற எல்லா பட வாய்ப்புகளையும் நான் ஏற்பதில்லை, சில படங்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறேன்.
தொடர் வெற்றிக்கு பின்னர் ஏதேனும் அழுத்தம் உள்ளதா.?
நிச்சயமாக. தொடர் வெற்றி படங்களுக்கு பின்னர் ரசிகர்கள் என்னிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இதனால் முன்பை விட இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு நடிக்கிறேன். எந்தவொரு முன்னோடியும் இல்லாமல் முழுக்க முழுக்க எனது சொந்த முயற்சியால் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. என் வெற்றிக்கு பின்னால் யாரும் இல்லை, முழுக்க முழுக்க நான் மட்டும் தான் இருக்கிறேன்.
தற்போது நீங்கள் தான் நம்பர்-1 நடிகையா..?
தொடர் வெற்றியால் தற்போது நான் முன்னணி நடிகையாக இருக்கிறேன். என்னைப்போன்று பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்து தற்போது சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளுக்கு எல்லாம் நான் தான் முன்னோடியாக திகழ்கிறேன். நான் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து வந்தவள் தான். எனக்கு சரியாக ஆங்கிலம் கூட பேச வராது. ஒருவர் கூட எனக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை, முழுக்க முழுக்க எனது சொந்த முயற்சியால் முன்னேறியுள்ளேன். அதனால் தான் நான் டாப் நடிகையாக வளர்ந்துள்ளேன். என்னை போன்று சிறிய கிராமத்திலிருந்து வந்து பெரிய நடிகையாக வர நினைப்பவர்களுக்கு நான் தான் முன்னோடி.
வெற்றி பெற நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் என்ன.?
என்னுடைய 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். இந்த வயதில் எல்லாம் மற்ற பெண்கள் படித்து கொண்டிருந்தார்கள், ஆனால் நான் எனது குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருந்தது. இந்தக்காலகட்டத்தில் என்னால் பயன் பெற்றவர்கள் ஏராளம். என்னுடைய ஆரம்பகால சினிமாவில் நிறைய தோல்விகளை சந்தித்தேன். ஆனால் எனது குடும்ப உறுப்பினர்கள் தான், உன்னிடம் நிறைய திறமை இருக்கிறது, நீ கண்டிப்பாக ஜெயிப்பாய் என்று ஊக்கப்படுத்தினார்கள். இப்போது எனது திறமை பேசுகிறது. இந்தநேரத்தில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன், என்னுடைய போராட்ட காலங்கள் என்னை வலிமைப்படுத்தின.
பெண்கள் தொடர்பான படங்களுக்கு நீங்கள் எந்தளவு முன்னுரிமை கொடுப்பீர்கள்.?
நான் எப்போதும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுப்பேன். ஏனென்றால், அதுபோன்ற படங்களில் நடித்து தான் எனக்கு இவ்வளவு பெரிய பெயர், புகழ் எல்லாம் கிடைத்தது. இப்போது கூட நான் ராணி லட்சுமி பாய் தொடர்பான வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறேன். நானும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, என்னுடைய ரோலும், ஹீரோவின் ரோலும் சமமாக இருக்க வேண்டும். அடுத்து வௌிவர இருக்கும் எனது படங்களான கட்டி பட்டி மற்றும் ரங்கூன்-ல் என்னுடைய ரோல் ஹீரோவுக்கு சமமாக இருக்கும்.
இவ்வாறு கங்கனா கூறினார்.