பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மகேஷ் முத்துசாமி; ஆரம்ப காலத்தில், இயக்குனர் மிஷ்கினின், 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா' படங்களின் ஒளிப்பதிவில், மென்மையையும், வன்மையையும் கலந்து கொடுத்திருப்பார். இரவு நேரத்து ஒளியை அலங்கரிப்பது, இவருக்கு பிடித்தமான விஷயம்! தற்போது, 'பாப்டா' கல்வி நிறுவனத்தில், பகுதிநேரமாக ஒளிப்பதிவை கற்பிப்பது ஒருபுறம்; 'உப்பு கருவாடு, ஒரு குப்பை கதை, திருநாள்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு மறுபுறம் என, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார். கிடைத்த ஒரு சின்ன இடைவெளியில், தன் ஒளி அனுபவங்களை, நம்மோடு சந்தோஷமாய் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் பயணத்தின் துவக்கம் எப்படி?
எனக்கு பூர்வீகம் பழநி. பொறியியல் படிச்சிட்டு, புனேவுல வேலை பார்த்துட்டு இருந்தேன்; அப்போ, புகைப்படம் எடுக்கிறதுல ஒரு ஆர்வம். அந்த ஆர்வம், என்னை,'புனே பிலிம் இன்ஸ்டிடியூட்'ல கொண்டு போய் சேர்த்தது. அந்த படிப்பு தந்த அறிவும், பி.சி.ஸ்ரீராம் சார்கிட்டே கிடைச்ச அனுபவமும் தான், என்னை வளர்த்தது!
பி.சி.ஸ்ரீராமிடம் கற்றுக்கொண்ட முதல் விஷயம்?
அவர்கிட்டே நாலு ஆண்டுகள் உதவியாளரா இருந்தேன். 'இங்கே இருக்கிற செயல்முறையை கத்துக்கோ; அப்போ தான் ஜெயிக்க முடியும்,' - இது தான் அவர் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை! 'செட்'ல அவர் எப்படின்னா, படப்பிடிப்பு போயிட்டே இருக்கும்; திடீர்னு நம்ம கையில கேமராவை கொடுத்து, 'படம் எடு'ன்னு சொல்லிடுவார். அந்த தைரியம், நம்மகிட்டே இருக்குதான்னு சோதிக்கிறது அவரோட பழக்கம். அவரோட, 'வானம் வசப்படும்' படத்துல நான் ஒளிப்பதிவு பண்ணியிருப்பேன். முதல்முறையா, 'டிஜிட்டல்' கேமிராவுல ஒளிப்பதிவு பண்ணின படம் அது!
உங்கள் ஒளிப்பதிவு, இரவை அலங்கரிக்கும் ரகசியம்?
'ஹாலிவுட்' படங்கள்ல, இரவு நேரத்துல எடுக்கப்படுற காட்சிகள்ல, நீலத்திற்கும், பச்சைக்கும் இடையில இருக்கிற நிறத்தோட பயன்பாடு அதிகம் இருக்கும்! அதோட தாக்கம், என் ஒளிப்பதிவுலேயும் இருக்கும்! 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' படங்கள்ல, அப்படி நிறைய காட்சிகள் இருக்கு! மிஷ்கின் சாரும், தன் தேவைகளை தெளிவா சொல்லிடுவாரு. இந்த சூழல், என்னோட வேலையை சுலபம் ஆக்கிடும். அவ்வளவு தான்!
ஒரு ஒளிப்பதிவாளரின் சுதந்திர எல்லை?
சில இயக்குனர்களுக்கு, எல்லா காட்சிகளும், 'பளபள'ன்னு பளிங்கு மாதிரி வேணும். ஆனா, சில இயக்குனர்கள், 'ரிஸ்க்' எடுக்கத் தயங்க மாட்டாங்க. சாந்தகுமார் இயக்கிய, 'மெளனகுரு' படத்துல, மனநல காப்பகத்துல அருள்நிதி இருக்கிற மாதிரி ஒரு காட்சி. அந்த காட்சியை, மாறுபட்ட ஒளிக்கலவையில காட்சிப்படுத்தி இருப்பேன். இந்த மாதிரியான காட்சி, ரசிகர்கள் மத்தியில, 'ரீச்' ஆகுமான்னு ஆரம்பத்துல சந்தேகம் இருந்தது. ஆனா, நானும், சாந்தகுமாரும் துணிஞ்சு சில புதுமுயற்சிகள் பண்ணினோம். இந்த அடிப்படையில சொல்லணும்னா, இயக்குனரோடு ஏற்படுற புரிதல் தான், ஒளிப்பதிவாளரோட சுதந்திரத்தை தீர்மானிக்குது!
சரி... 'உப்பு கருவாடு' படத்தின் சிறப்பு?
'உப்பு கருவாடு,' திரைத்துறை பற்றிய படம்! ஆனா, கோடம்பாக்கம் பக்கமே போகாம, பெரும்பாலும், கடற்கரையை ஒட்டியே படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். பொதுவா, ராதாமோகன் சாரோட படங்கள்ல வசனங்கள் பலமா இருக்கும்; இதுலேயும் அப்படித்தான்! அழுத்தமான இந்த வசனங்களுக்கு ஈடுகொடுக்கிற மாதிரி, ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். கடற்கரையோர காட்சிகள், நிச்சயம் 'ப்ரெஷ்'ஷான உணர்வை கொடுக்கும்.
படம் இயக்கும் திட்டம்?
விருப்பம் இருக்கு. ஆனா, கதை எழுதுறதுல, நான் கொஞ்சம் சோம்பேறி (சிரிக்கிறார்...). அதனால, இப்போதைக்கு நான் ஒளிப்பதிவாளர் தான்!