இடம் பொருள் ஏவல் படத்துக்காக 50 லட்சத்தை விட்டுக்கொடுத்த விஜய்சேதுபதி!
25 மே, 2015 - 15:14 IST
உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையில் சிக்கியதால் லிங்குசாமி தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - இடம் பொருள் ஏவல்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ரஜினிமுருகன்.
இந்த இரண்டு படங்களும் ஏறக்குறைய முடிவடைந்தநிலையில் உள்ளன. சில நாட்கள் பணிகள் நடைபெற்றால் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற நிலையில் தயாராக உள்ளன. இவற்றில் இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன. அப்படத்தின் நாயகனான விஜய்சேதுபதி டப்பிங் பேசாததினால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த விஜய் சேதுபதி ஐந்து கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது, தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சீனுராமசாமிக்காக ஒன்றரை கோடி சம்பளத்துக்கு நடிக்க முன் வந்து படம்தான் இடம் பொருள் ஏவல். இத்தனை குறைவான சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும், விஜய் சேதுபதிக்கு பேசியபடி ஒன்றரைகோடி சம்பளத்தை தரவில்லை. ஒருகோடியை மட்டும் கொடுத்துவிட்டு ஐம்பது லட்சம் பாக்கி வைத்திருந்தனர். படப்பிடிப்பு முடிவடையும்வரை சம்பள பாக்கியைக் கேட்காத விஜய்சேதுபதி, படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பேச அழைத்தபோது தனக்கு வர வேண்டிய ஐம்பது லட்சம் சம்பள பாக்கியைக் கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர்கள் தரவில்லை. கடுப்பான விஜய்சேதுபதி, சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று இடம் பொருள் ஏவல் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், இடம் பொருள் ஏவல் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் லிங்குசாமி, சமீபத்தில் விஜய்சேதுபதியை சந்தித்துள்ளார். அப்போது உத்தமவில்லன் படத்தில் தனக் ஏற்பட்ட பல கோடி நஷ்டத்தை சோகத்துடன் விவரித்துள்ளார். உத்தமவில்லன் ரிலீஸ் நேரத்தில் நடந்த சம்பவங்களைக் கேட்டு மனம் உருகிவிட்டாராம் விஜய்சேதுபதி. எனக்கு தர வேண்டிய ஐம்பது லட்சம் சம்பள பாக்கி வேண்டாம் என்று அப்போதே சொன்னதோடு, டப்பிங் பேசி முடித்துக் கொடுக்கிறேன். படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி. நெகிழ்ந்து போனாராம் லிங்குசாமி. இடம் பொருள் ஏவல் டப்பிங் இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது.