மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எதிர்பார்த்தது போலவே "வழக்கு எண் 18/9" படத்திற்கு தேசிய விருது கிடைத்து விட்டது. சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல். தயாரிப்பாளர் லிங்குசாமி, பாலாஜி சக்திவேலின் காலில் விழுந்து தன் நன்றியை காணிக்கையாக்கியதில் நெகிழ்ந்து போயிருக்கிறார். அந்த மகிழ்ச்சி, நெகிழ்ச்சிக்கிடையே பாலாஜி சக்திவேல் அளித்த சிறப்பு பேட்டி:
* தேசிய விருது கிடைத்த செய்தியை எப்படி எதிர்கொண்டீர்கள்?
லிங்குசாமி எனக்கு போன் பண்ணி சொன்னபோது ஏதோ விளையாட்டாக சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். பூங்கொத்தோடு வீட்டில் வந்து நின்றபோதுதான் நம்பினேன். நான் விருதுகளை எதிர்பார்க்கவில்லை. ஆனால் லிங்குசாமி எதிர்பார்த்தார். படத்தை முதலில் பார்த்து விட்டு "அண்ணே தேசிய விருது வாங்குறதுக்கு கோட்சூட் தைக்கணும்"னு சொல்லி மறுநாளே ஆளை அனுப்பி அளவெடுத்துட்டு போனார். அந்த அளவுக்கு அவர் நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது அந்த கோட்சூட்டை அணியும் வாய்ப்பு வந்திருக்கிறது.
* இந்திய அளவில் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த படம். மாநில அளவில் விருது பெற்றிருப்பது உங்களுக்கு திருப்பி தந்திருக்கிறதா?
நான் அப்படி நினைக்கவில்லை. இது உங்கள் கருத்து, எனது நண்பர்கள் சிலரின் கருத்து. சினிமாவின் ஜாம்பவான்களை கொண்டதுதான் தேசிய விருது கமிட்டி. அவர்களின் தீர்ப்புக்கு நான் மதிப்பளிக்கிறேன். வரவேற்கிறேன். இந்தியா பெரிய நாடு, அதில் என் படத்தைவிட சிறப்பான படம் வராமலா இருக்கும். இந்த விருதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
* இந்த விருது உங்கள் உழைப்புக்கு கிடைத்த விருதாக கருதுவீர்களா?
அதைவிட இதை படைப்பு சுதந்திரத்திற்கு கிடைத்த விருதாகத்தான் கருதுகிறேன். ஒரு படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் மிகவும் முக்கியம். அதை எனக்கு லிங்குசாமி வழங்கினார். படம் எடுத்து முடியும் வரை அவருக்கு என்ன கதை என்றுகூட தெரியாது. கேட்கிறபோதெல்லாம் பணம் கொடுத்தார். கணக்கு கேட்டது கிடையாது. கேட்கிற வசதிகளை செய்து கொடுத்தார், ஏன் எதற்கு என்று கேட்டது கிடையாது. படத்துக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். ஏன் லேட் பண்றீங்கன்னு கேட்டது இல்லை. அந்த சுதந்திரம்தான் இந்த விருதை கொடுத்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் இப்படித்தான் இருக்கிறேன்.
* அடுத்த படத்துக்கு லிங்குசாமி மாதிரி சுதந்திரம் தராத தயாரிப்பாளர் அமைந்தால்...?
படமே இயக்க மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை சுதந்திரமாக அனுமதிப்பவர்களிடம் மட்டுமே பணியாற்றுவேன். அப்படி ஒத்துவராத பலரிடம் அட்வான்சை திருப்பிக் கொடுத்திருக்கிறேன்.
* இந்த விருதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க?
சினிமாங்றது ஒரு கூட்டு முயற்சி. சினிமாவை தனிப்பட்ட ஒருவரின் சாதனை என்பதை ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஒரு விளையாட்டில் ஒரு அணி வெற்றி பெறும்போது கோப்பையை கேப்டன் கையில்தான் கொடுப்பார்கள். அதற்காக அந்த வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று சொல்வது தவறு. ஒவ்வொரு வீரனின் உழைப்புதான் அந்த வெற்றியைக் கொடுத்திருக்கும். அப்படித்தான் சினிமாவும். நான் கேப்டன், என் கையில் விருதை கொடுக்கிறார்கள். அதில் படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் அதில் பங்கு உண்டு. என் படத்தில் பணியாற்றிய லைட்மேனில் இருந்து தயாரிப்பாளர் வரை அனைவருக்கும் இதை டெடிகேட் பண்றேன்.
* சினிமா இயக்குனராகும்போதே தேசிய விருது படம் எடுப்போம்னு நினைச்சு பார்த்தீங்களா?
நான் எதையுமே எதிர்பார்த்து செய்யவில்லை. எனக்கு தெரிஞ்சதை செய்து கொண்டே இருக்கிறேன். சில அங்கீகரிக்கப்படும், சில நிராகரிக்கப்படும். கல்லூரி படம் நிராகரிக்கப்பட்ட படம்தான். அதலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டேன். காதலும், வழக்கு எண்ணும் அங்கீகரிக்கப்பட்ட படங்கள். அதிலிருந்து பொறுப்பை கூடுதலாக சுமக்க தயாராகிக் கொண்டேன்.
* அடுத்த படம்....?
ஸ்கிரிப்ட் வேலைகளை 90 சதவிகிதம் முடித்து விட்டேன். படம் வெளிவரும் வரையில் படம் இப்படித்தான் இருக்கும் என்று என்னால் சொல்லவே முடியாது. காரணம் எனது படங்கள் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை.