ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
2018ம் ஆண்டின் கடைசி மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோம். கடந்த எட்டு மாதங்களில் தமிழ் சினிமா பலவிதமான சர்ச்சைகள், போராட்டங்கள், தடங்கல்கள் என எதை எதையோ சந்தித்து, தட்டுத் தடுமாறி போய்க் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜுலையுடன் முடிந்த ஏழு மாதங்களில் வாரத்திற்கு சராசரியாக நான்கைந்து படங்கள்தான் வெளிவந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 27 படங்கள் வெளிவந்து ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் 3ம் தேதி பத்து படங்கள் வெளிவந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை படங்கள் வெளிவந்தும் மூன்று படங்கள் மட்டுமே ஓரளவிற்கு வெற்றி பெற்று வசூலையும் கொடுத்தது.
வசூல் ரீதியிலான படங்கள் வெளிவந்தாலும் சில தரமான படங்கள் வெளிவந்த மாதமாகவும் ஆகஸ்ட் மாதம் அமைந்தது. “கடிகார மனிதர்கள், மேற்குத் தொடர்ச்சி மலை, 60 வயது மாநிறம்” ஆகிய படங்கள் வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து விலகி வேறுபட்ட படங்களாக இருந்தன. இப்படிப்பட்ட படங்கள் ஒரே மாதத்தில் வந்தன. இருந்தாலும் இந்தப் படங்களுக்கு விமர்சகர்கள் கொடுத்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இப்படிப்பட்ட படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் மேலும் உயரும்.
ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி “அரளி, எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், காட்டுப்பய சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்” ஆகிய 10 படங்கள் வெளியாகின. இவற்றில் 'கஜினிகாந்த்' படத்தைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே சிறிய படங்கள்தான். இந்த ஒரு படத்தைத் தவிர மற்ற 9 படங்கள் வெளிவந்தது பற்றி ரசிகர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றில் யார் நடித்திருக்கிறார்கள், அவை என்ன மாதிரியான படம் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூட அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஆர்யா, சாயிஷா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தும், அதற்கு முன் இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனரான சன்தோஷ் பி ஜெயகுமார் இயக்கிய 'கஜினிகாந்த்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானது. கடந்த சில படங்களாகத் தொடரும் ஆர்யாவின் தோல்வி இதிலும் தொடர்கிறது.
ஆகஸ்ட் 10ம் தேதி “3 ரசிகர்கள், அழகு மகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் பெரிய படம் என்று பேசப்பட்ட 'விஸ்வரூபம் 2' படம் ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றியது. முதல் பாகத்தின் மிஞ்சிய காட்சிகளை வைத்து கமல்ஹாசன் ஏனோ தானோவென ஒரு படத்தைக் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் கருதினர். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மற்ற படங்கள் வெளிவந்ததா என ரசிகர்களே கேள்வி எழுப்புவார்கள்.
ஆகஸ்ட் 17ம் தேதி “கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' விமர்சன ரீதியாகப் பெரிதாகப் பாராட்டப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நிறைவாக வசூலித்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆகஸ்ட் 24ம் தேதி “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை” ஆகிய படங்கள் வெளியாகின. இந்தப் படங்களில் விஜய் சேதுபதி தயாரித்து வெளிவந்த 'மேற்குத் தொடர்ச்சி மலை' ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் பாராட்டினர். ஆனாலும், பெரும்பான்மையான ரசிகர்கள் இம்மாதிரியான படங்களைப் பார்த்து பேராதரவு தருவதில்லை என்பது வருத்தமான விஷயம்.
'தேவி' எனப் பெயர் வைத்து வெற்றி பெற்றதைப் போல 'லக்ஷ்மி' எனப் பெயர் வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த இயக்குனர் விஜய், பிரபுதேவா ஆகியோருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. 'களரி' இந்த வருடப் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய மேலும் ஒரு படம்.
ஆகஸ்ட் 30ம் தேதி 'இமைக்கா நொடிகள்' படம் வெளிவந்தது. ஒரே மாதத்தில் நயன்தாரா நடித்து இரண்டு படங்கள் வெளிவந்து இரண்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ஏற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தயாரிப்பாளர்களே தெரிவிக்கிறார்கள். இதனால், நயன்தாராவின் மார்க்கெட்டும், சம்பளமும் மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி “60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே' ஆகிய படங்கள் வெளிவந்தன. '60 வயது மாநிறம்' வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட படமாக இருந்தது. கதைகக்கும், இயல்பான கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிப்பட்ட படங்களை ரசிக்கத் தயங்குவதை ரசிகர்கள் தவிர்த்தே ஆக வேண்டும். வெறும் கமர்ஷியல் படங்கள் மட்டும் தமிழ் சினிமாவை வாழ வைக்காது. 'அண்ணனுக்கு ஜே' மாதிரியான படங்களை ரசிகர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டார்கள். 'ஆருத்ரா' படம் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆகஸ்ட் மாதம் வந்த இவ்வளவு படங்களிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற, விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். வெளிவரும் படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, படங்களின் தரம்தான் முக்கியம் என்பதை ரசிகர்கள் பல முறை உணர்த்தியும் திரையுலகத்தினர் இன்னும் அதைப் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமளிக்கிறது.
ஆகஸ்ட் மாதம் வெளியான படங்கள்...
ஆகஸ்ட் 3 : அரளி, எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், காட்டுப்பய சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்
ஆகஸ்ட் 10 : 3 ரசிகர்கள், அழகு மகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2
ஆகஸ்ட் 17 : கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே
ஆகஸ்ட் 24 : எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை
ஆகஸ்ட் 30 : இமைக்கா நொடிகள்
ஆகஸ்ட் 31 : 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே