14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
2018ம் ஆண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரை பரபரப்பான ஆண்டாக ஆரம்பித்துள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் அறிவித்த அரசியல் பிரவேசம் திரையுலகத்தையும் தாண்டி அரசியல் உலகத்தில் பொறி பறக்க வைத்தது.
அனைவரும் 2017ம் ஆண்டி திரையுலகம் எப்படி இருந்தது என்பது பற்றிய அலசல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விவாதித்து, பகிர்ந்து முடித்துவிட்டார்கள். கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகத்தின் டாப் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நடித்து எந்தப் படமும் வரவில்லை. ஆனால், 2018ல் அவர்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் 2.0 கோடை விடுமுறையிலும், அதற்கடுத்த சில மாதங்களில் காலா படமும் வெளிவந்துவிடும். கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 விரைவிலும், சபாஷ் நாயுடு எடுத்து முடிக்கப்பட்டால் இந்த ஆண்டிற்குள்ளும் நிச்சயம் வெளிவந்துவிடும்.
அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் ஏ.ஆர்.முருகதாஸ் படம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கும், அடுத்து செல்வராவனுடன் இணையும் படம் தீபாவளிக்கும், வெளிவரும்.
விக்ரம் நடித்து விரைவில் ஸ்கெட்ச் படமும், அடுத்து துருவ நட்சத்திரம், சாமி ஸ்கொயர் ஆகிய படங்களும், விஷால் நடித்து இரும்புத் திரை, சண்டக் கோழி 2 ஆகிய படங்களும் வருகின்றன.
கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது பற்றி இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா முதலிலும் பின்னர், வட சென்னை, மாரி 2 ஆகிய படங்களும் வரலாம்.
சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் படம் முதலில் வரும். அடுத்து அவர் எந்த படங்களில் நடிக்கப் போகிறார் என்பது பற்றி அறிவிப்பு வரவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்ற ஒரு பேச்சு உள்ளது.
கடந்த ஆண்டில் அபாரமான தோல்வியைக் கொடுத்ததோடு, பல சர்ச்சைகளிலும் சிக்கிய சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் பயிற்சியை சரியாக ஆரம்பித்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இந்தப் படம் சரியாக நடந்து முடிந்து வெளிவந்தால் சிம்புவின் மார்க்கெட் மாறலாம்.
விஜய் சேதுபதி நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விரைவிலும், அடுத்து, சூப்பர் டீலக்ஸ், 96, இடம் பொருள் ஏவல், ஜுங்கா, மணிரத்னம் படம் ஆகிய படங்களும் வரிசையாக வரலாம். கடந்த ஆண்டின் சிறந்த படமாகப் பலராலும் பாராட்டப்பட்ட விக்ரம் வேதா படத்தின் வெற்றி விஜய் சேதுபதியை இன்னும் மேலே உயர்த்தியது. அது இந்த ஆண்டிலும் தொடர வாய்ப்புள்ளது.
ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தை அடுத்து அடங்க மறு படத்தில் நடிக்க உள்ளார். சங்கமித்ரா படம் இந்த வருடம் ஆரம்பமானாலும் அடுத்த வருடம்தான் வெளிவரும்.
சங்கமித்ரா படத்தில் ஆர்யாவும் மற்றொரு கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவர் கதாநாயகனாக நடிக்க சந்தனத் தேவன் படம் கடந்த வருடத் துவக்கத்தில் ஆரம்பமாகி அப்படியே நிற்கிறது. தற்போது கஜினிகாந்த் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அதர்வா நடித்து வரும் இமைக்கா நொடிகள் முதலில் வெளிவரலாம். அடுத்து செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்தை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வந்துவிடும். கடந்த ஆண்டில் அவர் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதுவும் வெற்றி பெறாமல் போனது. இந்த ஆண்டில் இமைக்கா நொடிகள் அவருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த ஒரு படம் கூட வெற்றி பெறாமல் அவரையும் மற்றவர்களையும் ஏமாற்றியது. இந்த ஆண்டில் தற்போது அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் இவரே. பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள நாச்சியார் முதலில் வர வாய்ப்புள்ளது. தற்போது அடங்காதே, 4ஜி, ஐங்கரன், குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வெளிவந்தால் 2018ல் அதிகப் படங்களில் நடித்த ஹீரோக்களில் ஜி.வி.பிரகாஷ் முதலிடத்தைப் பிடித்துவிடுவார்.
தமிழ் சினிமாவில் 90களின் ஆரம்பத்தில் முன்னணி ஹீரோவாக உயர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபுதேவா, வெற்றிகரமான இயக்குனராக தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வலம் வந்தார். தற்போது மீண்டும் பரபரப்பான ஹீரோவாக மாறிவிட்டார். அவர் நடித்துள்ள குலேபகாவலி விரைவில் வெளிவர உள்ளது. அதற்கடுத்து, “விஜய் இயக்கத்தில் ஒரு படம், மெர்க்குரி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, அறிமுக இயக்குனர் ஆகாஷ் சாம் இயக்க உள்ள படம்”, என பயங்கர பிஸியாக உள்ளார்.
கடந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்தவரான கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த மாதத்தில் வெளிவர உள்ளது. அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி ஆகியவை வரும்.
ஜெய் கலகலப்பு 2, பார்ட்டி ஆகிய படங்களிலும், ஜீவா கலகலப்பு 2, கீ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
நடிகைகளில் கடந்த வருடத்தில் தன் கணக்கில் ஒரு படத்தைக் கூட வைத்துக் கொள்ளாத த்ரிஷா நடித்து இந்த ஆண்டில் “மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, 96” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
கடந்த வருடம் அறம் படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த நயன்தாரா நடிப்பில், இந்த ஆண்டில் “இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம் ஆகிய படங்கள் வெளிவரும்.
சமந்தா நடித்து இந்த ஆண்டில், இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படம், நடிகையர் திலகம் ஆகிய படங்கள் வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் விரைவில் வெளிவர உள்ளது. அடுத்து, சாமி ஸ்கொயர், சண்ட கோழி 2, நடிகையர் திலகம் ஆகியவை வெளிவர உள்ளன.
கடந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நிக்கி கல்ரானி நடித்துள்ள கலகலப்பு 2 இந்த மாதத்தில் வெளிவர உள்ளது. அடுத்து ஆண்டில் கீ, பக்கா, சார்லி சாப்ளின் 2 ஆகியவை வரலாம்.
நடிகைகளில் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்குள் இந்த ஆண்டில் போட்டி நிலவும்.
இந்த 2018ம் ஆண்டில் அனைத்து முன்னணி நடிகர்களும், நடிகைகளும் நடித்து வெளிவர உள்ள படங்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், 2017ஐ விட 2018ல் வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் அதிகமாக வாய்ப்புள்ளது. பலரும் போட்டியில் இருப்பதால் இந்த 2018ல் வியாபார ரீதியாக வசூல் ரீதியாக கடுமையான போட்டி நிலவும்.
பைரசி இணையதளங்கள் பிரச்சனை முற்றிலுமாக ஒழிந்து, பார்க்கிங், உணவுப் பொருட்களின் அநியாய விலை ஆகியவையும் நியாய விலைக்கு விற்கப்பட்டால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இதை சம்பந்தப்பட்ட சங்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.