ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
100 ஆண்டு கால தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரும் பிரச்சனை அடுத்த சில நாட்களிலோ, வாரங்களிலோ வரலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஜிஎஸ்டி
மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் ஒரே வரி என்ற திட்டத்தை மையப்படுத்தி ஜிஎஸ்டி-யை கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தியது. தியேட்டர்களுக்கும் 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி என்பது டிக்கெட் கட்டணங்களின் அடிப்படையில் விதிக்கப்பட்டது. 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட் கட்டணங்களக்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட் கட்டணங்களுக்கு 28 சதவீதும் ஜிஎஸ்டி வரி அமலாகியது.
மாநில அரசு வரி
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் அதை ஏற்றுக் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அந்த ஜிஎஸ்டி-யுடன், தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி 30 சதவீதமும் அமலாகும் என தமிழக அரசு சார்பில் புதிய அரசாணை ஒன்று வெளியானது.
ஸ்டிரைக்
ஜிஎஸ்டி வரியுடன், கேளிக்கை வரியும் விதிப்பதா என தமிழக அரசாங்கத்தை எதிர்த்து தியேட்டர்காரர்கள், வினியோகஸ்தர்கள் அடங்கிய தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்தும் பேராட்டத்தை அறிவித்தது.
100 கோடி நஷ்டம்
திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால் ஸ்டிரைக்குக்கு முன்னதாக வெளியான படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தியேட்டர்கள் நான்கு நாட்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டமான சுமார் 100 கோடி நஷ்டத்தை விட அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகம். அதிக வட்டி கொடுத்து பைனான்ஸ் வாங்கி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் தாறுமாறாக பாதிக்கப்பட்டனர்.
ஸ்டிரைக் வாபஸ்
ஸ்டிரைக் முடிந்ததும், ஜிஎஸ்டி வரியுடன் கூடிய புதிய கட்டணத்திற்கு வழக்கம் போல மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த தமிழ்த் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதிர்ச்சி தந்த டிக்கெட் விலை
நேற்று முதல் திறக்கப்பட்ட தியேட்டர்களில் கூட்டமே வராமல் திண்டாட ஆரம்பித்துள்ளார்கள். 50 ரூபாய் விற்ற டிக்கெட்டுகள் 59 ரூபாய்க்கும் 120 ரூபாய் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் 153 ரூபாய்க்கும், ஆன்லைன் சேர்த்தால் ரூ.183 முதல் ரூ.193 விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றத்தை பொதுமக்கள் சிறிதும் ஏற்கவில்லை என்பதை நேற்றைய ஒரு நாளே காட்டிவிட்டது.
இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் அனைத்தும் சரியாகி மக்கள் பழையபடி தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், அதிலும் அடி விழுந்துவிட்டது. தியேட்டர் வரை வந்த மக்கள் டிக்கெட் கட்டணங்களைக் கேட்டதும், அப்படியே திரும்பிப் போயுள்ளனர்.
முக்கிய பொழுதுபோக்கு
சினிமா பார்ப்பது என்பது தமிழக மக்களின் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று. டிவி, கேபிள் டிவி, வெளிநாட்டு சானல்கள், தமிழில் விளையாட்டு சானல்கள், திருட்டு விசிடி, திருட்டு இணையதளம் இப்படி எது வந்தாலும் தமிழ் சினிமாவைப் பாதிக்காமல் இருந்தது.
தியேட்டர் செல்ல ஆர்வமில்லை
ஆனால், தற்போதைய ஜிஎஸ்டி விதிப்பால் வந்துள்ள விலை உயர்வு என்பது மக்களுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்து மக்களை தியேட்டர் பக்கம் போக வைக்காமல் செய்து வருகிறது. அவர்களைப் பாதித்திருப்பது தியேட்டர் டிக்கெட் கட்டணம் மட்டுமல்ல. அதைவிட அவர்களுடைய தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பல அத்தியாவசியப் பொருட்களின் விலை 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வரி விதிப்பால் விலை ஏற்றப்பட்டுள்ளது. தண்ணீர் கேன் கூட 5 ரூபாய் விலை ஏறிவிட்டதே என்ற வருத்தத்தில் இருக்கும் பொதுமக்கள் இப்போது சினிமா டிக்கெட் விலை ஏற்றத்தைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை. தியேட்டர் பக்கம் போனால்தானே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணம்.
தின்பண்டமும் கிடுகிடு
தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் மட்டும்தான் விலை ஏறியுள்ளது என்று கவலைப்படுபவர்களுக்கு மத்தியில் தியேட்டர் தின்பண்டங்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக இது பற்றி அதிகம் பேசாத மக்கள் சமூக வலைத்தளங்களில் அது பற்றிய கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். வெளியில் கடையில் வாங்கும் தண்ணீர் பாட்டில் 20 ரூபாய், தியேட்டரில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாப் பார்ன் 5 ரூபாய்க்கு வாங்கலாம், ஆனால் பல தியேட்டர்களில் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளியிலிருந்து எடுத்துச் செல்லும் தின்பண்டங்களையும் தியேட்டர்களுக்குள் அனுமதிப்பதில்லை. தியேட்டர்களில் மக்கள் குடிப்பதற்கு பல தியேட்டர்காரர்கள் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் கூட வைப்பதில்லை.
பயமுறுத்தும் பார்க்கிங்
தின்பண்டங்கள் மட்டுமா பைக்கில் சென்றால் பார்க்கிங் கட்டணமாக 150 ரூபாய் வரையும், காரில் சென்றால் பார்க்கிங் கட்டணம் 300 ரூபாய் வரையும் செலவாகிறது. இப்படி ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு தவிர மற்ற செலவுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நடுத்தரக் குடும்பத்தால் மாதம் ஒரு படம் போவதே பெரிய செலவாகிறது.
மலைக்க வைக்கும் நடிகர்கள் சம்பளம்
ஒரு படம் ஓடி விட்டாலே ஹீரோக்கள் பல கோடிகள் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். விஜய், அஜித், சூர்யா ஆகியோரது சம்பளத்தைக் கேட்டால் 30 முதல் 40 கோடி வரை என்கிறார்கள். நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா போன்றவர்களது சம்பளம் 3 கோடி வரை என்கிறார்கள். சமீபத்தில் வளர்ந்து வந்த ஹீரோக்களின் சம்பளம் கூடி 20 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். நடிப்பவர்களுக்கு அவ்வளவு கோடி சம்பளம் கொடுத்து ஒரு படத்தை உருவாக்க சராசரியாக 50 கோடி வரை செலவு செய்து எடுத்தாலும் அந்தப் படத்தைத் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும்படியா இருக்கிறது.
அரசு நடவடிக்கை எப்போது?
கேளிக்கை வரி தொடர்பான அரசு பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் திரைத் துறையினரால் பதிலே சொல்ல முடியவில்லை. பெரிய ஹீரோக்களின் படம் வெளியானால் சில நாட்களுக்கு டிக்கெட் விலை 500, 1000 என விற்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம், தின்பண்டம் என பலவற்றிலும் பகல் கொள்ளை அடிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் அமைதியாக இருக்கிறது.
மக்களுக்கு பயனில்லை
இத்தனை வருடங்களாக வரி விலக்கு என்ற பெயரில் வழங்கப்பட்ட வரி விலக்கு மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஆனால், அவற்றை தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
ஜிஎஸ்டியால் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தது போதாது என்று டிக்கெட் விலையை மாற்றியமைக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது விரைவில் பேச்சு வார்த்தை மூலம் புதிதாக நிர்ணயிக்கப்படலாம். கேளிக்கை வரியும் 30 சதவீதம் இல்லை என்றாலும் கொஞ்சம் குறைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படலாம். அதன் பின் பழையபடி வரிவிலக்கு என்பது வரும், ஆனால் மக்கள் பயன்பெறுவதற்காக அல்ல, திரையுலகினர் பயன் பெறுவதற்காக.
என்ன செய்ய வேண்டும்
உண்மையிலேயே திரையுலகத்தினருக்கு மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் பின் வரும் முக்கிய விஷயங்களைக் கடைபிடிப்பார்களா....
1. அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே டிக்கெட் விற்பனை
2. பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் அனைத்தும் சரியான விலையில்
3. ஆன்லைனில் புக் செய்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை
4. வருடம் தவறாமல் அனைத்து கலைஞர்களும் வருமான வரியை கட்டாயம் கட்டுவது
5. தங்களது சம்பளங்களை உடனடியாகக் குறைத்துக் கொள்வது
6. 100 கோடி வசூல் என சில நாட்களிலேயே பொய்யாக அறிவிப்பது
7. ஒவ்வொரு படத்திற்குமான வரவு, செலவுகளை சரிபார்த்து சரியான கணக்கைத் தாக்கல் செய்வது
தங்களது படங்களில் மட்டுமே சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களைச் சொல்வது, சமூகப் பிரச்சனை என்றால் உடனடியாக அறிக்கை கொடுப்பது மட்டும் சரியல்ல. அதை நிஜ வாழ்க்கையில் கடைபிடிப்பதும் திரையுலகினரின் கடமைதான்.
இதையெல்லாம் செய்தால் மட்டுமே தடுமாற்றத்தில் இருக்கும் தமிழ் சினிமா தொடர்ந்து வாழும்... இல்லை என்றால்... எதிர்காலத்தில் தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறுவதும், மக்கள் டிவிக்களில் மட்டுமே படங்களைப் பார்ப்பதும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.