ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015ம் ஆண்டு முழுவதுமாக டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் போது இந்த ஆண்டின் மொத்த படங்களின் எண்ணிக்கை கண்டிப்பாக 250ஐத் தொட்டுவிட அதிக வாய்ப்புள்ளது. ஒரு அரையாண்டிலேயே 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து முதல் ஆண்டாக 2015ம் ஆண்டு வாய்த்திருப்பது ஒரு பக்கம் சாதனைதான் என்றாலும் மறுபக்கம் வேதனையையும் தந்துள்ளது. ஏனென்றால், வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணி விடலாம். இவ்வளவு போட்டிக்கிடையிலும் தங்களின் திறமையால் தனித்துத் தெரிந்து சாதனை புரிந்து அசத்தியவர்களைப் பற்றிப் இனி பார்ப்போம்...
இயக்குனர்
இந்த அரையாண்டில் 'ஐ' படம் இயக்கிய ஷங்கர், 'என்னை அறிந்தால்' படம் இயக்கிய கௌதம் மேனன், 'காக்கி சட்டை' படம் இயக்கிய துரை செந்தில் குமார், 'கொம்பன்' படம் இயக்கிய முத்தையா, 'ஓ காதல் கண்மணி' படம் இயக்கிய மணிரத்னம், 'காஞ்சனா 2' படம் இயக்கிய ராகவா லாரன்ஸ், 'உத்தம வில்லன்' படம் இயக்கிய ரமேஷ் அரவிந்த், '36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ், 'மாஸ்' படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன், 'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜீது ஜோசப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கமர்ஷியல் ரீதியான மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனராக ராகவா லாரன்ஸ் இருக்கிறார். இவர் இயக்கிய 'காஞ்சனா 2' படம் மிகப் பெரும் வசூலைக் குவித்து ராகவா லாரன்ஸுக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட மிகப் பெரும் இயக்குனர்களும் படத்தைக் கொடுத்திருந்தாலும் யாருமே செய்யத் துணியாத ஒரு கதையைத் தேர்வு செய்து மிகப் பெரும் நட்சத்திரங்கள் இல்லாமல் தமிழில் இப்படி ஒரு படமா என வியக்க வைத்த 'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் அனைவரையும் மிஞ்சி முதலிடத்தில் நிற்கிறார். ஷங்கர், மணிரத்னம் ஆகியோர் கூட கமர்ஷியல் இயக்குனர்கள்தான். ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் போன்ற முதல் நிலை தொழில்நுட்பக் கலைஞர்களுடன் மட்டுமே இவர்கள் பயணிப்பவர்கள். ஆனால், தன்னுடைய தனித் திறமையை நம்பி 'காக்கா முட்டை' படத்தைக் கொடுத்த மணிகண்டன்தான் மணி மணியான பாராட்டுகளுக்கு உரித்தானவர்.
இசையமைப்பாளர்
'ஐ, ஓ காதல் கண்மணி' படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், 'என்னை அறிந்தால், அனேகன்' படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், 'காக்கி சட்டை' படத்திற்கு இசையமைத்த அனிருத், 'கொம்பன், காக்கா முட்டை' படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், 'வை ராஜா வை, மாஸ்' படங்களுக்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா, 'எனக்குள் ஒருவன், 36 வயதினிலே' படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், 'உத்தம வில்லன், பாபநாசம்' படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இதுவரை வெளிவந்த படங்களில் குறிப்பிட வேண்டிய இசையமைப்பாளர்கள்.
ஆனால், கமர்ஷியலாகவும், இனிமையான பாடல்களைக் கொடுத்த விதத்திலும், சிறந்த ஒரு படத்திற்கு இயல்பான இசையையும் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்தான் மற்றவர்களைக் காட்டிலும் முத்திரை பதித்திருக்கிறார். அவருடைய இசையில் வெளிவந்த 'கொம்பன்' படத்தின் பாடல்கள் கிராமிய இசையில் தனித்துத் தெரிந்தது. 'காக்கா முட்டை' படம் அதற்கான பின்னணி இசையில் நம்மை படத்துடன் இணைத்து லயிக்க வைத்தது. ரகுமான் போன்ற ஆஸ்கர் நாயகர்கள் இந்தப் போட்டியில் இருந்தாலும் தான் இசையமைத்த இரண்டு படங்களிலுமே ரகுமான் இனிமையான பாடல்களைக் கொடுக்கத் தவறிவிட்டார்.
மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு வெற்றிகரமான படங்களிலும், நம் மண்ணின் இரண்டு வித்தியாசமான ரசனையைத் தனது இசையில் காட்டிய ஜி.வி.பிரகாஷ் இந்த அரையாண்டில் அசத்திய இசையமைப்பாளராக இருக்கிறார்.
நாயகன்
'ஐ' படத்தில் உடலை ஏற்றியும், இறக்கியும், தன்னை உருக்கி தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் விக்ரம். 'என்னை அறிந்தால்' படத்தில் ஆக்ஷனில் அசத்தியிருந்தார் அஜித். 'கொம்பன்' படத்தில் மீண்டும் ஒரு 'பருத்தி வீரன் ' நடிப்பிலான திறமையை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி. 'அனேகன்' படத்தில் விதவிதமான கதாபாத்திரங்களில் அசத்த முயற்சித்த தனுஷ், 'மாஸ்' படத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த சூர்யா, 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தில் மூவரில் கொஞ்சம் முன்னணியில் இருந்த விஜய் சேதுபதி, 'உத்தம வில்லன், பாபநாசம்' என இரண்டு படங்களில் நடித்த கமல்ஹாசன் என இந்த அரையாண்டில் போட்டி கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது.
இருந்தாலும் நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத, இதுவரை கேமராவுக்கு முன்பு நின்றிருக்காத இரண்டு சிறுவர்கள் 'காக்கா முட்டை' படத்தில் அசத்தி தேசிய விருது வரை வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்களை விட பொருத்தமான அசத்தல் மன்னர்களாக யார் இருக்கப் போகிறார்கள். 'காக்கா முட்டை' படத்தில் அறிமுகமாகி தேசிய விருது வாங்கிய ரமேஷ், விக்னேஷ் இருவரும்தான் இந்த அரையாண்டில் தங்களது நடிப்பால் நம்மை மெய்சிலிர்க்க வைத்தவர்கள்.
நாயகி
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான நாயகிகள் பாடல் காட்சிகளுக்கும், நாயகனை காதலிப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறார்கள். ஏதோ ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களுக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து தப்பித் தவறிக் கூட யாரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட நடிப்பதில்லை. தங்களது இமேஜ் பாதிக்கப்பட்டு எதிர்கால சினிமா வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு சிறந்த படத்தில் தானும் இருக்க வேண்டும், எந்த இமேஜ் பற்றியும் கவலையில்லை என 'காக்கா முட்டை' படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்தான் இந்த அரையாண்டுப் படங்களில் நாயகியாக அசத்தியவர்.
ஒரு கைக் குழந்தைக்குத் தாய் என்றாலே நம் ஹீரோயின்கள் பல மைல் தூரம் ஓடி விடுவார்கள். ஆனால், இரண்டு சிறுவர்களுக்குத் தாய் என்று சொன்ன பிறகும் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு தேசிய விருதுக் குழுவாலேயே அங்கீகரிக்கப்படாதது பெரும் குறையே. இந்த தைரியமான நாயகிக்கு முன்னால் வேறு எந்த நாயகியின் பெயரைக் கூட ஒப்பிட முடியாத அளவிற்கு ஐஸ்வர்யா ராஜேஷின் நிறைவான நடிப்பு மற்றவர்களைவிட மிதமிஞ்சியே உள்ளது. ஹன்சிகாக்களும், ஸ்ருதிஹாசன்களும், காஜல் அகர்வால்களும் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வரட்டும். அதன் பின் அவர்களையும் ஹீரோயின்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
நகைச்சுவை நடிகர்
இந்த அரையாண்டில் தமிழ் சினிமா மறந்து போன ஒரு விஷயம் நகைச்சுவை. இன்னும் சூரிக்கு நாயகனாக மாறும் ஆசை வரவில்லையா என்றே நம்மை கேட்க வைக்கிறது. சந்தானம் 'இனிமே இப்படித்தான்' மூலமாகவும், வடிவேலு மீண்டும் 'எலி' மூலமாகவும், கருணாஸ் மீண்டும் 'லொடுக்கு பாண்டி' படம் மூலமாகவும் நாயகனாகவே இந்த அரையாண்டில் அறியப்பட்டார்கள். அவர்கள் தங்களை நகைச்சுவை நடிகர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட ஹீரோக்கள் என முன்னிலைப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த அரையாண்டில் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை நிறையவே சோதித்துப் பார்த்திருக்கிறது. ஒரு பக்கம் பேய்ப் படங்கள், ஒரு பக்கம் வழக்கமான கமர்ஷியல் படங்கள் என வந்தாலும் ஒரு சில தரமான படங்களே வந்திருப்பது தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் தலைக் குனிவுதான். ஆனாலும் 'காக்கா முட்டை' போன்ற வித்தியாசமான படமும், '36 வயதினிலே, பாபநாசம்' போன்ற ரீமேக் படங்களும் வந்து ஓரளவிற்கு தரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
புதுப் புதுக் கலைஞர்கள் வரும் போதுதான் புதுவிதமான எண்ணங்களும் பாயும். அரைத்த மாவையே அரைப்பதை விட்டு விட்டு வித்தியசாமான கதைகளுடன் வரும் படங்கள் நிச்சயம் தரமான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை இயக்குனர்களுக்கு எப்போது முழுமையாக வருகிறதோ அன்று தமிழ் சினிமாவின் தரம் இன்னும் உயரும். அந்த நம்பிக்கை நட்சத்திரங்களுக்காக அடுத்த அரையாண்டு காத்திருப்போம்.