சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் இன்றுடன் 50வது ஆண்டை நிறைவு செய்கிறது. விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாணக்யா இயக்கத்தில் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைப்பில் உருவான இந்தப் படம்1965ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளிவந்தது. 'நாடோடி மன்னன்' படத்திற்குப் பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், எம்ஜிஆரும் மீண்டும் இணைந்த படம் இது.
எம்ஜிஆர், சரோஜாதேவி, ரத்னா, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய் மற்றும் பலர் நடித்த படம்.
எம்ஜிஆர் நடித்த இரு வேடப் படங்களிலேயே இந்தப் படம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். இந்தப் படத்திற்கு முன் எம்ஜிஆர் முதன் முதலாக இரு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் 'நாடோடி மன்னன்'. இந்தப் படம் வெளிவந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் அடுத்து இரு வேடங்களில் நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் வெளிவந்தது. தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'ராமுடு பீமுடு' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
இப்படத்தை தயாரிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடி முடிவு எடுத்திருந்தாராம். அதனால் பல வினியோகஸ்தர்கள் எம்ஜிஆரை வைத்துப் படமெடுக்க வேண்டாமென தயாரிப்பாளரான நாகி ரெட்டியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து எம்ஜிஆரே படத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படம் ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது. சென்னை நகர வினியோக உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது.
படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளார்கள். வாலி, ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருக்கிறார்கள். டி.எம்.சௌந்தர்ராஜன், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களான, “கண்களும் காவடிச் சிந்தாகட்டும்..., குமரிப் பெண்ணின் உள்ளத்திலே..., மலருக்குத் தென்றல் பகையானால்..., நான் ஆணையிட்டால்..., நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..., பெண் போனாள்...” என இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
எம்ஜிஆர் இந்தப் படத்தில் ராமு - இளங்கோ என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார். இளங்கோ வீரமான கதாபாத்திரம், ராமு கோழையான கதாபாத்திரம். ஜமீன்தார் குடும்பத்து வாரிசான ராமு ஒரு கோழை. அவரது சொத்துக்களை தாய்மாமனான கஜேந்திரன் (நம்பியார்) நிர்வகித்து வருகிறார். ராமுவை உலகம் தெரியாத அப்பாவியாக வேண்டுமென்றே வளர்க்கிறார் கஜேந்திரன். ராமு தவறு செய்தால் அவரை சவுக்கு கொண்டு அடித்து விடுவார் கஜேந்திரன்.
தாய்மாமனின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு தப்பிக்கிறார் ராமு. அந்த சந்தர்ப்பத்தில் ராமுவைப் போலவே உருவ ஒற்றுமைகொண்ட தைரியசாலியான இளங்கோ அந்த வீட்டிற்குள் வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் இளங்கோ, தன்னை ராமுவாக காட்டிக் கொள்கிறார். ஆனால், கோழையாக இல்லாமல் தைரியசாலியாக கஜேந்திரனை எதிர்த்து நிற்கிறார். அதன் பின் ராமுவும், இளங்கோவும் உடன் பிறந்தவர்கள் என உண்மை தெரிய வர என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சரோஜாதேவி, ரத்னா இரண்டு கதாநாயகிகள் படத்தில், இருவருமே பொருத்தமாக நடித்திருப்பார்கள். அதிலும், சரோஜாதேவியின் கதாபாத்திரம் கொஞ்சம் பணக்காரத் திமிருடன் இருந்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று.
நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷ், தங்கவேலுவின் நகைச்சுவை, பண்டரிபாயின் பாசமான நடிப்பு அனைத்துமே படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.
பல திரையரங்குகளில் 100 நாட்களையும், சில திரையரங்குகளில் 200க்கும் மேற்பட்ட நாட்களும் ஓடி எம்ஜிஆரை 'எங்க வீட்டுப் பிள்ளை' என பல தாய்மார்களும் அழைக்க இந்தப் படம் காரணமாக அமைந்தது.