ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிசோடா படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தேன். அப்போது நான் வருகிற ஒவ்வொரு காட்சியின்போதும் பலமாக கைதட்டினார்கள். அந்த ஒவ்வொரு கைதட்டல்களையும் ஒவ்வொரு விருது கிடைத்த மாதிரி உணர்ந்தேன். என்னையுமறியாமல் என் கண்கள் குளமாகி விட்டன என்கிறார் நடிகர் இமான் அண்ணாச்சி. தினமலர் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி இதோ...
* நீங்கள் நடிகரான கதையை கொஞ்சம் சொல்லுங்கள்?
அது ஒரு பெருங்கதை. 1994ல் நடிகனாக வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்டம், ஏரல் என்ற ஊரில் இருந்து சென்னைக்கு வந்தேன். ஆனால் சினிமாவில் நடிக்க யாரை சந்திப்பது, எப்படி முயற்சி எடுப்பது என்பது புரியாமல் தடுமாறினேன். அதோடு சென்னையில் காலம் தள்ளுவதற்காக ஆபீஸ் பாயாக வேலை பார்த்திருக்கிறேன். மளிகை கடையில், காய்கறி கடை என்றெல்லாம் வேலை பார்த்திருக்கிறேன். இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் ஊருக்கு சென்று விட்டேன்.
அந்த நிகழ்ச்சியில் நான் திருநெல்வேலி தமிழ் பேசி காமெடி பண்ணியிருந்ததைப்பார்த்த டைரக்டர் சுந்தர்.சி, தலைநகரம் படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். அதையடுத்து வேட்டைக்காரன், அங்காடித்தெரு, கோ என சில படங்களில் சின்னச்சின்ன வேடங்களாக கிடைத்தன. இருப்பினும், அது சென்னையில் குடும்பம் நடத்த தேவையான வருமானத்தை எனக்குத்தரவில்லை. அதனால் சின்னத்திரையில் எல்லாமே சிரிப்புதான், கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் சேட்டை, சொல்லுங்கண்ணே சொல்லுங்க, சுட்டி குட்டீஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றபடி, சென்னையிலுள்ள கோயம்பேட்டில் காய்கறி வியாபாரமும் செய்து வந்தேன். ஒருகட்டத்தில் ஓரளவு வருமானம் வரத் தொடங்கிய பிறகுதான் காய்கறி வியாபாரம் செய்வதை நிறுத்தி விட்டு முழுநேர நடிகனாக மாறினேன்.
* எந்த மாதிரியான வேடங்களாக நடிக்க விரும்புகிறீர்கள்?
படம் பார்க்கிறவர்களின் மனதில் பதியக்கூடிய வேடங்களாக எதிர்பார்க்கிறேன். முக்கியமாக நான் நடிக்கிற வேடங்களில் காமெடி அதிகமாக இருக்க வேண்டும். எனக்குள் இயற்கையாகவே காமெடித்தன்மை இருப்பதால், எதிர்காலத்தில் பெரிய காமெடி நடிகராக வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால் என்னைத் தேடி வரும் படங்களில் காமெடி கேரக்டர்களுக்கே முதலிடம் கொடுத்து நடிக்கிறேன். மற்றபடி சின்ன படம் பெரிய படம் என்ற வித்தியாசமெல்லாம் நான் பார்ப்பதில்லை. எந்த படமாக இருந்தாலும் ஒரேவிதமான மனநிலையுடனேயே நடிக்கிறேன். வெற்றிதான் படங்களின் தரத்தை தீர்மானிக்கிறது என்பது எனது கருத்து.
* அப்பா வேடங்களில் நடிக்க நீங்கள் மறுப்பதாக கூறப்படுகிறதே?
அப்பா வேடங்களில் நடிக்கிற அளவுக்கு எனக்கு ஒன்றும் வயதாகி விடவில்லை. மேலும், காமெடி நடிகனாக வேண்டும் என்பதுதான் எனது லட்சியமே. அதனால் நான் அந்த மாதிரி வேடங்கள் பக்கம் திரும்பினால் எனது காமெடி ரூட் மாறிவிடும். அதோடு, ஒரு அடையாளம் இல்லாமல் போய் விடும். அதனால், காமெடியனாக என்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
* காமெடியில் உங்களது ரோல் மாடல் யார்?
சின்ன வயதில் இருந்தே தங்கவேலு, டி.எஸ்.பாலையா போன்றவர்களின் காமெடியை ரொம்ப ரசிப்பேன். அவர்களது நடிப்பில் யதார்த்தமிருக்கும். அதை நடிப்பு என்றே சொல்ல முடியாது. அதனால் அவர்களைப்போன்றே இயல்பான காமெடியனாக நடிக்க விரும்புகிறேன். அதோடு, திருநெல்வேலி தமிழ் பேசி நான் நடிப்பதால், அதுவும் ஒரு பாணியாகி விட்டது. அதனால், இதே ரூட்டில் பயணித்து நானும் ஒரு தனித்துவமான காமெடியனாகி மக்களை மகிழ்வித்துக்கொண்டேயிருப்பேன்.
* உங்களது நடிப்பிலும் வடிவேலுவின் சாயல் இருப்பது போல் தெரிகிறதே?
இப்போதைய காமெடியன்களுக்கு வடிவேலுவின் சாயல் இல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சிறந்த காமெடியன் அவர். அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக அவர் நடித்த காமெடி காட்சிகளைத்தானே பார்த்து வருகிறேன். அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறேன். அப்படி இருக்கும்போது நம்மையும் அறியாமல் அவரது சாயல் வெளிப்படத்தானே செய்யும். என்னைப்பொறுத்தவரை அது பெருமைக்குரிய விசயம்தான். ஆனபோதும் காலப்போக்கில் எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொள்வேன். இப்போது நடித்து வரும் படங்களுக்கு பிறகு இமான் அண்ணாச்சிக்கென்று ஒரு காமெடி ஸ்டைல் உருவாகும்.
* உங்கள் நடிப்புக்கு ரசிகர்களிடம் அதிக கைதட்டல் வாங்கித்தந்த படம் எது?
நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலுமே என்னைப்பார்த்ததுமே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். குறிப்பாக, விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்த கோலிசோடா என்னை பெரிய இடத்துக்கு கொண்டு சென்று விட்டது. ரொம்ப அற்புதமான வேடம். அந்த படத்தைப்பார்ப்பதற்காக சென்னையில் உள்ள உதயம தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்தேன். அப்போது நான் வரும் ஒவ்வொரு காட்சியின்போதும் பலத்த கரகோஷம் எழுப்பினார்கள் ரசிகர்கள். அதைக்கேட்டு என்னையுமறியாமல் கண்கலங்கி விட்டேன். அவர்களின் ஒவ்வொரு கைதட்டலும் ஒரு விருது கிடைத்ததற்கு சமமாக உணர்ந்தேன்.
* தற்போது கைவசம் என்னென்ன படங்கள் உள்ளன?
நீயெல்லாம் நல்லா வருவடா, போங்கடி நீங்களும் உங்க காதலும், பட்டய கெளப்பு பாண்டியா, வாழைப்பழம், டாணா என பல படங்களில் நடிக்கிறேன்.இந்த படங்கள் திரைக்கு வரும்போது என் நடிப்பு இன்னும் பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில், 2015ல் தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது எனக்கு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் சிறந்த காமெடியனுக்கான விருது வாங்க வேண்டும் என்ற எனது லட்சியம். அடுத்த ஆண்டே நிறைவேறி விடும் என எதிர்பார்க்கிறேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.