ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசைஞானி இளையராஜா ஒரு ஞானக்குழந்தை. அவர் ராஜராஜ சோழனின் போர்வாள் படத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் கம்போஸிங் செய்தபோது கண்கலங்கி விட்டார். 37 ஆண்டுகளாக அறைக்குள் அகப்பட்டுக்கிடந்த என்னை, மக்கள் மத்தியில் கொண்டு வந்த சினேகனுக்கு இந்த இளையராஜாவின் சரித்திரத்தில் ஒரு இடம் உண்டு என்றார். அந்த வார்த்தையை இந்த படத்துக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என்கிறார் சினேகன்.
தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ...
* இதுவரை எவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்?
2500 பாடல்கள் வரை எழுதியிருக்கிறேன். இப்போது 25 படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பாடல் எழுதுவதில் எப்போதும் நான் பிசிதான். மேலும், சின்ன படம் பெரிய படம் என்று பிரித்துப்பார்க்காமல் என்னிடம் தரப்படும் எந்தவொரு பாடலையும் ஒரே விதமான மனநிலையுடன் முதல் பாடல் எழுதுவது போன்ற அதே உற்சாகத்துடன்தான் எழுதி வருகிறேன். குறிப்பாக, மறந்து போன நம்முடைய பழமை வாய்ந்த தமிழ் வார்த்தைகளையும இன்றைய இளவட்ட சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆடுகளம் படத்தில் வெள்ளாவியில் வைத்து வெளுத்தார்களா என்றெல்லாம் எழுதுகிறேன். காரணம், வெள்ளாவி என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதேபோல் ராஜராஜசோழனின் போர்வாள் படத்திலும் ராஜராஜசோழன் காலத்தில் நம் மக்கள் பயன்படுத்திய நிறைய தமிழ் சொற்களை பயன்படுத்தி பாடல் எழுதியிருககிறேன். ஆக என் பாடல்கள் மூலம் மக்களுக்கு அரிய தமிழ் வார்த்தைகளையும் ஞாபகத்துக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறேன்.
* பாடலுக்கு பாடல் புதுமை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும்போது, நடிப்பில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
கவிதை, பாடல் எழுவதில்தான் சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் மிகுதி. ஆனால் நடிப்பு என்பது திடீரென்று தோன்றியதுதான். யோகி படத்தில் அமீருடன் நடித்தேன்.ஆனால் அந்த படத்தில் என் நடிப்புக்கு பெரிய பாராட்டு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு என்னைப்பார்த்த பலரும் நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருந்தாக சொன்னதோடு, அடுத்த படம் எப்போது என்றார்கள். அதன்காரணமாகவே உயர்திரு 420 படத்தில் நடிக்க வேண்டியதாகி விட்டது. ஆக, ரசிகர்களின் ஆதரவும், தூண்டுதலுமே என்னை தொடர்ந்து நடிக்க வைத்து விட்டது.
* இந்த இருவழிப்பாதை பயணம் உங்களது பாடல்களின் தரத்தை குறைக்காதா?
தமிழும், கவிதையும் என் உயிர் மூச்சு. அதை என்னிடமிருந்து யாராலும பிரிக்க முடியாது. என்னாலும் அதிலிருந்து விலக முடியாது. அதனால் என்னதான் நடிப்பில் நான் வளர்ந்தாலும், கவிதைக்கே முதலிடம் கொடுப்பேன். அதைப்பற்றியே அதிகமாக யோசிப்பேன்.
மேலும், நான் முதல் படத்தில் நடித்தபோதே உனக்கெல்லாம் எதுக்குடா இந்த வேண்டாத வேலை என்று யாராவது கேட்டிருந்தால் நடிப்பை விட்டிருப்பேன். ஆனால் நடித்த படங்கள் ஓடாதபோதும் சினேகனின் நடிப்பு மட்டும் சிறப்பாக இருந்தது என்று சொன்னார்கள். அதையடுத்து பல டைரக்டர்கள் நடிக்க அழைத்தனர். அப்போது நான் நல்ல கேரக்டர் வந்தால் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த போதுதான், ஒரு நட்புக்காக உயர்திரு 420 படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு தான் என்னை முதன்முதலில் நடிகராக்கி பார்க்க ஆசைப்பட்ட நண்பர் அமுதேஷ்வர் ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தின் கதையை சொன்னார். மிகச்சிறப்பாக இருந்தது. அதனால் இப்படத்தை நானே தயாரித்து நடிக்கவும் முடிவு செய்தேன்.
* பொதுவாக நீங்கள் நடிக்கிற வேடங்கள் எந்த மாதிரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
நான் நடிக்கிற ஒவ்வொரு படமும் சமுதாயத்துக்கு நல்ல விசயங்களை சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அப்படி நல்ல கதை சொல்லக்கூடிய வேடமாக இருக்கும்பட்சத்தில் அசிங்கமான வேடங்களில்கூட நடிக்க தயாராக உள்ளேன். நல்ல விசயத்தை சொல்வதற்காக எத்தனை அசிங்கமான வேடங்களிலும் நடிப்பேன்.
* ராஜராஜசோழனின் போர்வாள் படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது?
எப்போதுமே நான் ஒருகோடு போட்டு அதற்கு வெளியே நிற்பவன். அதில் நின்றுதான் இந்த சமூகத்தை பார்ப்பேன். அந்த வகையில் இந்த படம் ஒரு பெரிய சமூக சிந்தனை கொண்ட படம். நான் தூக்கி போடும் ஒரு கல் நாளை ஒரு சாலை போடுவதற்கு, ஒரு கட்டிடம் கட்டுவதற்கு என யாருக்காவது பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும. அந்த வகையில் இந்த படம் நீதிக்கும், அநீதிக்கும் இடையில் நடக்கும் ஒரு யுத்தம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜ ராஜ சோழனின் காலத்தையும், இன்றைய காலகட்டத்தையும் கலந்து கதை பண்ணப்பட்டிருக்கிறது.
* ராஜராஜசோழனின் போர்வாள் படத்தின் பாடல் கம்போசிங்கை மக்கள் மத்தியில் நடத்தியதேன்?
ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்றுதான் அப்படி செய்தோம். ஆனால், இதைப்பற்றி நான் இளையராஜாவிடம் சொன்னபோது, அது சாத்தியப்படுமா என்றார். ஆனால் கண்டிப்பாக ஆகும் என்றேன். உங்களுக்கு சாத்தியம் என்றால் நான் வருகிறேன் என்றார். அதையடுத்து ராஜராஜசோழனின் குரு கரூர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தை தேர்வு செய்து மக்கள் முன்னிலையில் பாடல் கம்போஸிங் செய்தார் இளையராஜா.
அதில் 25000 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுவரை எந்த இசையமைப்பாளர்களும் செய்யாத சாதனை அது. கரூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினோம்.
* அப்போது இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்தது?
அந்த நிகழ்வின்போது இளையராஜா கண் கலக்கிபோனார். 37 வருடமாக என்னை அடைத்து போட்டுவிட்டனர். இன்றைக்குத்தான் முழுசாக வேலை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது என்று சொன்ன இளையராஜா, எனது சரித்திரத்தில் சினேகனுக்கும் ஒரு இடம் உண்டு என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இந்த படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும்.
* சரித்திர கால கதை என்கிறபோது பட்ஜெட் எகிறுமே?
இந்த படத்தில் சரித்திர காலம், நிகழ் காலம் என இரண்டும் இடம்பெறுகிறது. இருப்பினும் தேவையான செலவை எந்த குறையும இல்லாமல் செய்திருக்கிறேன்.
மேலும், இந்த படம் மீது இளையராஜாவுக்கு பிரியமும், ஈடுபாடும் அதிகம். அவரைப்பற்றி ஆயிரம் பக்க அளவில் ஒரு புத்தகமே எழுதுவேன். அவர் ஒரு ஞான குழந்தை போல் செயல்பட்டுள்ளார். மேலும் அவரிடத்தில் இந்த இளையராஜா வேண்டாம் 80களில் உள்ள இளையராஜாதான் எனக்கு வேண்டும் என்றேன். பதிலுக்கு சிரித்தார். என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்யுங்கள் என்றேன். செலவுக்கணக்கைப் பார்க்கும் அளவுகோல் வேண்டாம். எனக்கு இளையராஜாதான் வேண்டும் என்றேன். அதனால் பாடல்களுக்கு தேவையான செலவை தாராளமாக செய்து பாடல்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில், இது இளையராஜாவின் படம். 1100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நீதி மன்னனுக்கும், இளையராஜாவின் இசைக்கும் இருக்கிற உறவுதான் இந்த படம். இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளையராஜா, திரும்பி வீட்டிற்கு வந்த உடனேயே என்னை அழைத்தார். நாளைக்கே ரெக்கார்ட்டிங் வச்சிக்கலாமா, என்றார். அத்தனை ஈடுபாடு அவருக்கு. அவர் உடம்பை விட இந்த படத்தின் பாட்டு நல்லாயிருக்கனும்னு நெனச்சார். அந்த வகையில், மருத்துவமனையில் இருந்து வந்ததும் முதன்முதலாக என் படத்துக்குத்தான் இசையமைத்தார் இளையராஜா.
* சமீபகாலமாக டெக்னாலஜியின் பின்னால் சினிமா உலகம் ஓடிக்கொண்டிருக்கிறதே? நீங்கள் எப்படி??
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி உள்ளது. நிறைய பேர் டெக்னாலஜிகளை நம்புகிறார்கள். படைப்பாளிக்கான மரியாதை குறைந்துள்ளது. டெக்னாலஜி பின்னாடி ஓடும் ஆட்டு மந்தைகளாக சினிமா கூட்டம் உள்ளது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. 2 படம் ஓடும் பின்பு அவனால் சினிமாவுல நிற்க முடியாது. திறமைதான் என்றைக்கும் நிலைக்கும். கிரியேட்டர்களோடு பயணம் செய்யும்போதுதான் நல்ல சினிமாவை தர முடியும். ஆக, கதை வறட்சி இருப்பது உண்மை. இந்த நிலை மாறும் என்பதும் உண்மை.
நீங்கள் நடிக்கிற, தயாரிக்கிற படங்களில் எந்தமாதிரியான கதைக்களம் அதிகமாக இடம்பெறும்?
இந்த தலைமுறைகளுக்கு வெள்ளாவி என்ற வார்த்தை தெரியவில்லை. அதனால்தான் ஆடுகளம் படத்தில் நான் எழுதிய வெள்ளாவியில் வச்சி வெளுத்தாகளா என்ற அந்த பாடலை உலகமே கொண்டாடினார்கள். அதனால் நான் நடிக்கிற தயாரிக்கிற படங்கள் அனைத்துமே என கிராமத்து மக்களின் சிரிப்பு, அழகை, சிணுங்கல்களை நான் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது அதற்கான களமே எனது உழவர் திரைக்களம் என்கிறார் சினேகன்.