ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முத்தக்காட்சியில் நடிப்பது ஒன்றும் தப்பான விசயமல்ல. ஆனால் அது படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு ஆபாசமாகி விடக்கூடாது. எதிலும் ஒரு அழகியல் இருக்க வேண்டும் என்கிறார் காயத்ரி. 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் நடித்த காயத்ரி, தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி...
* முதல் படத்திலேயே கிளாமராக நடித்த நீங்கள் பின்னர் அப்படி நடிக்காதது ஏன்?
18 வயது படத்தில் கிளாமராக நடித்தேன். காரணம் அது அந்த மாதிரியான கதை. ஆனால் அதன்பிறகு எனக்கு கிளாமர் கதைகள் கிடைக்கவில்லை. காயத்ரி என்றாலே குடும்பக் கதைகளுக்குத்தான் பொருந்துவார் என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ, என்னை உடம்பு முழுக்க கவர் பண்ணிக்கொள்ளும் காஸ்டியூம்களையே அணியச்சொல்கிறார்கள். அதனால் டைரக்டர்கள் காட்டும் பாதையிலேயே என் பயணம் செல்கிறது.
* பெரும்பாலும் ஹீரோயிசம் கொண்ட கதைகளில் நீங்கள் நடிப்பதில்லையே?
ஹீரோயிசம், ஹீரோயிசம் இல்லாதது என்று நான் கதைகளை பிரித்துப்பார்ப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை ஹீரோ யார் என்று கேட்டு கதை கேட்கும் பழக்கமும் இருந்ததில்லை. நல்ல கம்பெனி, நல்ல டைரக்டராக தெரிந்தால் கதை கேட்பேன். கடைசியாக அவர்களாக சொல்கிறபோதுதான் ஹீரோ யார் என்று தெரிந்து கொள்வேன். அந்த அளவுக்கு ஹீரோக்களை கருத்தில் கொண்டு நான் படங்களை செலக்ட் பண்ணுவதில்லை.
* நடித்த படங்களின் தோல்வி மக்கள் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும்?
சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமானதுதான். ஒரு கதையை படமாக்கும் முயற்சியில் இறங்குபோது கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நூறு சதவிகிதம் நம்பித்தான் இறங்குகிறார்கள். ஆனால் பல படங்கள் தோற்று விடுகிறது. அதற்காக யாரும் இடிந்து போய்விடுவதில்லையே. அடுத்தடுத்து படம் பண்ணத்தானே செய்கிறார்கள். அதேபோல்தான் நானும், நடிக்கிற படங்கள் வெற்றி பெற்றால் சந்தோசப்படுவேன். தோல்வியடைந்தால் இரண்டொரு நாள் பீல் பண்ணுவேன். அதன்பிறகு சகஜநிலைக்கு மாறி விடுவேன்.
* நிஜத்தில் நீங்கள் கலகலப்பானவரா இல்லை சீரியஸ் டைப்பா?
நான் ரொம்ப கலகலப்பானவள். எனக்கு பெங்களூரில் நிறைய தோழிகள் இருக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேதான் என்பதால், இப்போதும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பெங்களூர் சென்று தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றுவேன். முக்கியமாக ஒரு நீச்சல் குளத்துக்கு நான் என் தோழிகளுடன் படிக்கிற காலத்தில் இருந்தே சென்று நீந்திக்குளிப்பேன். அதை இப்போதுவரை தொடர்கிறேன். நான் அங்கு சென்று விட்டால் என் தோழிகள் பலரும் வந்து விடுவார்கள். அதையடுத்து ஒரே கும்மாளம்தான்.
* விஜயசேதுபதிதான் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ என்கிறார்களே அப்படியா?
அவர் ரொம்ப நல்ல நடிகர். அவருடன் நடிக்கும்போது எந்தவித டென்சனும் இருக்காது. சீன் பேப்பரை கையில் வாங்கியதும் கேமரா முன்பு எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை முன்பே ரிகர்சல் பார்த்துக்கொள்வோம். அதோடு உடன் நடிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் அவர். அதை வைத்துதான் எனக்கு பிடித்தமான ஹீரோ விஜயசேதுபதி என்று சொல்லியிருக்கிறேன. ஆனால், நடிப்பது மட்டுமின்றி நிஜத்திலும் அவர் ரொம்ப நல்ல மனிதர். அந்தவகையில், நான் இதுவரை ஜோடி சேர்ந்த ஹீரோக்களில் எனக்கு அதிகம் பிடித்தமான ஒரே ஹீரோ விஜயசேதுபதிதான். என் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
* அப்படியென்றால் உங்களுக்கு அவர் சிபாரிசு ஏதும் செய்கிறாரா?
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்தபோதுதான் எங்களுக்கு அறிமுகம். அதையடுத்து ரம்மியில் நடித்தேன். ஆனால் இனிகோவுக்கு ஜோடியாகத்தான் நடித்தேன். அதைத் தொடர்ந்து இப்போது மெல்லிசையில் இணைந்திருக்கிறேன். நாங்கள் நடிக்கிற படம் வெற்றி பெற்று வருவதால் அந்த செண்டிமென்ட் அடிப்படையில் இந்த படத்தில் எங்களை இணைத்திருக்கிறார்கள். இந்த படத்திலும் வழக்கம்போல் வித்தியாசமான பர்பாமென்சை கொடுக்கிறார் விஜயசேதுபதி. அதைப்பார்த்து நானும் எனது பர்பாமென்ஸை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி வருகிறேன். அதற்காக எனக்கு அவ்வப்போது நடிப்பு டிப்சும் கொடுத்தார் விஜயசேதுபதி.
* கமர்சியல் நடிகை வட்டத்திற்குள் எப்போது வருவீர்கள்?
இப்போதெல்லாம் கவர்ச்சிகரமான உடையணிந்து குத்துப்பாட்டுக்கு ஆடும் நடிகைகளைத்தான் கமர்சியல் நடிகை என்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. கவர்ச்சியாக நடித்தாலும் அதில் ஒரு அழகியல் இருக்க வேண்டும். நடனமாடினாலும் அதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை எனது பாணியாக வைத்திருக்கிறேன். இந்த வட்டத்திற்குள்தான் நான் எனது கேரக்டர்களை ஓ.கே செய்கிறேன். இப்படி நான் நடிக்கிற படங்கள் வெற்றி பெற்று அதன்மூலம் எனக்கொரு கமர்சியல் நடிகை அங்கீகாரம் கிடைத்தால் சந்தோசமே.
* இப்போதெல்லாம் லட்சுமிமேனன் போன்ற குடும்ப இமேஜ் கொண்ட நடிகைகளே லிப் லாக் காட்சிகளில் நடிக்கிறார்களே. நீங்கள் எப்படி?
சில கதைகளுக்கு முத்தக்காட்சி அவசியம் தேவை என்கிறபோது அப்படி நடிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே அந்த மாதிரியான காட்சிகளை உருவாக்கக்கூடாது. என்னிடமும் அந்த மாதிரி இரண்டு படங்கள் வந்தன. ஆனால், மழையில் நனைந்தபடியே அந்த காட்சியல் நடிக்க சொன்னவர்கள், உதட்டு முத்தம் கொடுத்தும் நடிக்கச்சொன்னார்கள். அது ரொம்ப ஆபாசமாக இருந்ததால் நான் தவிர்த்துவிட்டேன. என்னைப்பொறுத்தவரை முத்தக்காட்சியானது படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கக்கூடாது. அதை அவர்கள் ரசிக்கும் வகையில் இருக்கிற பட்சத்தில் கட்டாயம் நடிப்பேன்.
* சில ஆடியோ விழாக்களில் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு அழுகிறீர்களே ஏன்?
பொன்மாலைப்பொழுது படத்தின் ஆடியோ விழாவில்தான் அழுதேன். காரணம். இந்த டீமில் இருந்த அனைவரும் என்னிடம் மிக அன்பாக பழகினார்கள். படப்பிடிபபு நடந்தபோது ஒரு குடும்பம் போலவே இருந்தோம். அதனால் அந்த ஆடியோ விழாவுக்கு பிறகு இனிமேல் அடிக்கடி சந்திக்க மாட்டோம் என்றபோது என்னையுமறியாமல் அழுகை வந்து விட்டது. காரணம் நான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவள். எந்த விசயமாக இருந்தாலும் மனதிற்குள் அதை அடைத்து வைக்காமல் உடனே வெளிப்படுத்தி விடுவேன். இதனால் எனது மனது ரிலாக்சாகும்.
* தமிழ் சினிமாவில் உங்களது ட்ரீம் ஹீரோ யார்?
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அஜீத்தான் எனது ட்ரீம் ஹீரோவாக இருந்தார். ஆனால் இப்போது விஜய், சூர்யா என்று பலர் அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை மனசு முழுக்க உள்ளது. காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிறார் காயத்ரி.