ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேர்தல் வந்தால், நடிகர், நடிகையர், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியல்வாதிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதும், வாடிக்கை. அவர்களை பார்க்க, ரசிகர்கள் அதிகம் வருவர் என்பதால், கூட்டத்தை கூட்டுவதற்காக, அரசியல்வாதிகளும், அவர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், பிரசாரத்திற்கு வரும் நடிகர்களில் பலர், ஒரு தேர்தலுடன் காணாமல் போய் விடுகின்றனர். அப்படி காணாமல் போனவர்கள் குறித்த விவரம் இதோ:
ரஜினிகாந்த்
இவர், 1996 சட்டசபைத் தேர்தலில், த.மா.கா., - தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, வாய்ஸ் கொடுத்தார். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட, காப்பாற்ற முடியாது என கூறியது, மக்களை கவர்ந்தது. அந்த தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், ஒவ்வொரு தேர்தலிலும், அவரது வாய்ஸ் பெற, கட்சிகள் போட்டி போட்டன. ஆனால், அவர் அமைதியாகி விட்டார். கடந்த சட்டசபைத் தேர்தலில், அவர் அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டதாக, தகவல் வெளியானது. சமீபத்தில், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரை சந்தித்தார். பா.ஜ., தலைவர்கள், அவரது ஆதரவை பெற, குட்டிகரணம் போட்டபடி உள்ளனர். ஆனாலும், இதுவரை ரஜினி வாய் திறக்கவில்லை.
விஜய்
இவர் கடந்த தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இவ்வெற்றிக்கு, இவரே காரணம் என்பது போல், அவரது தந்தையும், இயக்குனருமான, சந்திரசேகர் கூறி வர, அதிகாரத்தில் இருந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர். இதையடுத்து, விஜய் நடித்த படத்திற்கு குடைச்சல் கொடுக்க, கெடுபிடி தாங்க முடியாமல், முதல்வரை சந்திக்க கோடநாடு சென்றார் சந்திரசேகர். ஆனால், முதல்வரை சந்திக்க, முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்பட்டார். அதனால், விஜய் இப்போது சுருதி குறைந்து, அரசியலே வேண்டாம் என, ஒதுங்கி உள்ளார்.
டி.ராஜேந்தர்
தி.மு.க.,வில் நீண்ட காலமாக இருந்தவர்; எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் செய்தவர்; யாருக்கும் அஞ்சாதவர்; அடுக்குமொழி பேச்சாளர்; கருணாநிதியின் தொண்டர் என, அரசியலில் வலம் வந்தார். அவரது வளர்ச்சி, தி.மு.க., வாரிசு தலைவருக்கு பிடிக்கவில்லை; முட்டல் ஏற்பட்டது. இதையடுத்து, தி.மு.க.,விலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவக்கினார். சமீபத்தில், கட்சியை கலைத்துவிட்டு, தி.மு.க.,வில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின், இணையவில்லை என, பேட்டி அளித்தார். இப்போது எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலை. ஒவ்வொரு தேர்தலிலும், இவரது அடுக்குமொழி வசனங்களை கேட்ட வாக்காளர்களுக்கு, இந்த முறை, அந்த வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமே.
பாக்யராஜ்
எம்.ஜி.ஆர்., ரசிகன் என, அறிமுகப்படுத்திக் கொண்டு, அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனிக்கட்சி துவக்கினார். அதை நடத்த முடியாததால், மூடு விழா நடத்தினார். இதையடுத்து, தி.மு.க.,வில் சேர்ந்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது, எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே, தெரியாத நிலை உள்ளது.
ராதாரவி
தி.மு.க.,வில், நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அ.தி.மு.க., கூட்டங்களில், தி.மு.க., தலைவரையும், அவரது குடும்பத்தினரையும், கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வினர் அவரை கண்டுகொள்ளவே இல்லை.
வடிவேலு
தன் நகைச்சுவை நடிப்பால், தமிழக ரசிகர்களை கட்டிப்போட்டவர். விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலால், அவருக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக, தி.மு.க.,வில் சேர்ந்தார். அவரை பார்க்க, ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்கள் எல்லாம் ஓட்டுப்போட்டு விடுவர் என, அவரும், தி.மு.க.,வினரும் கனவு கண்டனர். ஆனால், முடிவு தலைகீழாக, வடிவேலுவின் அரசியல் வாழ்வு மட்டுமின்றி, சினிமா வாழ்வும் ஸ்தம்பித்தது. இனி, அரசியலே வேண்டாம் என ஒதுங்கி, மீண்டும் சினிமாவில், கவனம் செலுத்த துவங்கி உள்ளார். சினிமாவில் இருந்து, யாரேனும் அரசியலுக்கு போவதாக இருந்தால், போவாதீங்க என, தடுத்து வருகிறார்.
சிம்ரன்
தமிழ் திரையுலகில், கொடி கட்டி பறந்தவர். ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இடையழகி என புகழப்பட்டார். திடீரென அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கடந்த தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஓட்டு கேட்டு வந்தார். தற்போது, எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
அம்பிகா - ராதா
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகி ஓட்டு கேட்டார். இவரது தங்கை, ராதாவும் ஓட்டு கேட்டு வந்தார். தற்போது, சகோதரிகள் அமைதியாக உள்ளனர். அ.தி.மு.க.,வினரும் கண்டு கொள்ளவில்லை.
இப்படி, பல நடிகர், நடிகையர் காணாமல் போனாலும், அரசியல் களத்தில் இறங்கும் நடிகர்களுக்கும் பஞ்சமில்லை. அ.தி.மு.க., சார்பில், ராமராஜன், தியாகு, சிங்கமுத்து, செந்தில், சரவணன், நடிகை விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி, வாசுகி, பபிதா, ஆர்த்தி என, பலரும் கலக்கி வருகின்றனர். முன்பெல்லாம், தி.மு.க.,வில் தான் நடிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கும். இந்த தேர்தலில், அந்த நிலை மாறியுள்ளது. தி.மு.க.,விற்காக, நடிகர்கள் சந்திரசேகர், வாசுவிக்ரம், போன்றோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- நமது நிருபர் -