ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கிராமிய கதாபாத்திரங்களை 1990...களில் வெள்ளித் திரையில் உலவ விட்ட, இயக்குனர். இவருக்கு முகவரி தந்தது, கிழக்கு வாசல். நட்சத்திர இயக்குனராக்கியது, எஜமான். வணிகரீதியாக வெற்றியை தந்தது, சிங்காரவேலன். தாலாட்டியது சின்னக்கவுண்டர்.
சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு... என பிரபலங்களை தன் படங்களில், இயல்பு மாறாமல் வெளிப்படுத்தியவர்... ஆர்.வி. உதயகுமார். திரைப்பட கல்லூரி உறுப்பினர், தமிழ்நாடு வரிவிலக்கு கமிட்டி உறுப்பினர், சினிமா விருதுக் குழு உறுப்பினர், தமிழ் திரைப்பட நல வாரிய உறுப்பினர் என பல பதவிகளுக்கு சொந்தக்காரரும் கூட. ""சாதனையாக அல்ல... சோதனையான காலக்கட்டத்தில் வேறுவழியின்றி சினிமாவுக்கு வந்தவன், என்கிறார், உதயகுமார். மதுரையில் அவருடன் பேசியதிலிருந்து...
* உங்கள் படங்களில் கிராமிய மணம் அதிகம் இருக்கிறதே. இயல்பாக எடுக்கப்பட்டதா?
நல்ல கதையை சொல்லியிருக்கிறேன். என் கதைக்கு பொருத்தமான கதாநாயகர்களைத் தேர்வு செய்தேன். இது தான் கதை... இது தான் கதாபாத்திரம் எனக்கூறி, சம்மதித்தால் தான் நடிக்க வைப்பேன். கிராமம் மட்டுமல்ல... எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டிருக்கிறேன்.
* நீங்கள் ரசித்த இயக்குனர் யார்?
கம்பரைத் தவிர யாருமில்லை. கம்பராமாயணத்தில் சொல்லப்படாத பாத்திரங்களா... திருப்பங்களா... காட்சியமைப்புகளா... "ராமா... நாளை நீ பட்டம் சூட்டி, அரியணை ஏறு என்று, தந்தை தசரதன் கூறும் போது, ராமனின் முகத்தை, சுவர் சித்திரத்தில் வரைந்த செந்தாமரையோடு காட்டுவார். காலையில், "ராமா... நீ காட்டுக்கு போ என்று தந்தை சொல்லும் போதும், அதே முறுவல் தான். அப்போதும் தாமரை சித்திரத்தை காட்டுவார். காட்சி அமைப்புக்கு ஏற்றபடி, தேர்ந்த "ஆர்ட் டைரக்டராய் சித்திரத்தை மாட்டியிருப்பார்.
சித்திரத்துத் தாமரை எப்போதும் வாடாது. அதை ராமனின் முறுவலுக்கு ஒப்பிட்டதை என்னவென்பது? அதே போல, உள்ளுணர்வைச் சொல்லும் போது, "அண்ணலும் நோக்கினாள்... அவளும் நோக்கினாள் எனும்போது, அவளை நினைத்த மாத்திரத்தில் ராமன் வில்லொடித்தான் என்று காதலை அழகாக சொல்லியிருப்பார். இவருக்கு மேல் ஒரு இயக்குனரா... நினைத்துப் பார்க்க முடியவில்லை.
* கம்பனை ரசிக்கும் நீங்கள்... கதாநாயகி தொப்புளில் (சின்னகவுண்டர்) பம்பரம் விட்டது சரியா?
இதற்கும் கம்பனை உதாரணமாகத் தருகிறேன். சீதையை "பொய்யோ எனும் இடையாளோடு என வர்ணித்திருப்பார். எப்படி நாயகியை வர்ணிக்கலாம் என கேட்கமுடியாது. அது கலை. பம்பரம் விட்டதும் அப்படித் தான். நாயகி சீண்டியதால், அவளே ஏற்றுக் கொண்டபடி பம்பரம் விடுகிறான் நாயகன். இதில் தவறும், அசிங்கமும், அநாகரீகமும் எங்கே வந்தது? இன்னும் சொல்லப்போனால்... பம்பரம் விடப் பழகும் ஒரு பெரிய மனிதனின் குழந்தைத் தனத்தை தான் காட்டியிருக்கிறேன்.
* இன்றைய சினிமா எப்படி இருக்கிறது? இளம் இயக்குனர்கள் குறித்து?
நன்றாக தான் இருக்கிறது. மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர் என்பதை எந்த காலத்திலும் சொல்ல முடியாது. நல்ல இயக்குனர் என்று சொல்லிக் கொள்வதை விட, வேகமாக சம்பாதிக்கும் இயக்குனர் என்பதில் தான் அதிக சிந்தனையுடன் இருக்கின்றனர். "கிராபிக்ஸ் உட்பட தொழில்நுட்பங்களை அதிகம் புகுத்துவதாலேயே நல்ல படம் என சொல்ல முடியாது. ஏனென்றால் இயந்திரங்கள் உணர்வுகளைச் சொல்வதில்லை.
* சினிமா திரையினருக்கு நல்ல படங்களைத் தருவதில் சமூக அக்கறை இல்லையே?
சினிமாவுக்கு மட்டும் சமூகப் பொறுப்பு வேண்டும் என்பது தவறு. சமூகப் பொறுப்பு அனைவருக்கும் வேண்டும். எங்கள் படம் பிடித்திருந்தால் தான், தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். வலிய அழைத்து வந்து சீரழிக்கவில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
* நல்ல படங்களை கொடுத்திருக்கிறீர்கள்... ஏன் இந்த நீண்ட இடைவெளி?
நூறுகோடி ரூபாய் பட்ஜெட்டில் படமெடுக்க கதை ஆலோசனை செய்து வருகிறேன். அமெரிக்க தயாரிப்பில் தமிழ் சினிமாவிற்காக எடுக்கப்படும் கதை இது. "காந்தி படம் போன்று, இதுவும் திரையில் பேசப்படும். இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும். மீதியை திரைக்கு வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.