ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவை பார்வையாளன் பார்ப்பதற்கு முன், முதன்முதலில் கேமராவில் பார்ப்பவர் ஒளிப்பதிவாளர். சிவகங்கையில் ஓவிய ஆசிரியர் ராமலிங்கத்திற்கு மகனாக பிறந்தவர்; சிவில் இன்ஜினியரிங் பட்டயம் முடித்த பின், தனது தந்தையைப்போல், ஓவியத்தில் ஈர்ப்பு ஏற்பட்டதால், போட்டோகிராபி, எழுத்து என தனது தளங்களை விரிவாக்கியவர். சினிமா ஒளி "விஞ்ஞானி பி.சி.ஸ்ரீராம் பட்டறையின் வார்ப்பு. "உலக சினிமா, "பேசும்படம், "முகங்களின் திரைப்படம் புத்தகங்கள் எழுதியவர். "கல்லூரி, "ரெட்டைச்சுழி, "தென்மேற்கு பருவக்காற்று, "பரதேசி படங்களில் நம் மண்ணின் இயல்பை, அப்படியே திரையில் நிழலாடச் செய்தவர் ஒளிப்பதிவாளர் செழியன். மதுரையில் இவர் அளித்த நேர்காணல்.
* உங்கள் முதல் படம் "கல்லூரி. சொந்த ஊர் சிவகங்கையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதே?
ஏற்கனவே, அங்கு குறும்படம் எடுத்துள்ளேன். "கல்லூரிக்காக சிவகங்கையில் மே மாதம் படப்பிடிப்பு நடந்தது. மழையில் நனைந்தவாறு "கனவா இது நிஜமா..., பாடல் காட்சி வரும். செயற்கையாக மழையை பொழிய வைக்க, தண்ணீர் தொட்டிகளை தயாராக வைத்திருந்தோம். ஆனால், இயற்கையாகவே மதியம் 2 மணிக்கு மழை பெய்தது. மறுநாளும், மதியம் மழை கொட்டியது. இயற்கை மழையில், பாடல் காட்சியை படமாக்கியது மறக்க முடியாத அனுபவம்.
* "தென்மேற்கு பருவக்காற்றுக்கு தேசிய விருது கிடைத்ததை எப்படி உணர்கிறீர்கள்?
இங்குள்ள வாழ்க்கைமுறை, நிலவியல், கலாசாரத்தை பதிவு செய்த படம். படத்தில் வேலை செய்யும் போதே எனக்குத் தெரியும், மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று; அதுபோலவே நடந்தது. சிறந்த படம், நடிகை, பாடல் என மூன்று தேசிய விருதுகள். இரவில் ஆடு திருடும் காட்சியை, நிஜமான இரவு நிலா வெளிச்சத்தில் படமாக்கினோம். "இரவின் தன்மை கெடாமல் ஒளிப்பதிவு செய்துள்ளீர்கள், என இயக்குனர் பாலுமகேந்திரா பாராட்டினார்.
* "பரதேசி கதைக்களம் பற்றி...?
தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம். வரலாற்றில் நடந்ததை பதிவு செய்யும் கதை. ஏழைகளின் உணர்வுகள், வலிகளை படமாக்கியுள்ளோம். சிவகங்கை சாலூர், மூணாறு தேயிலைத் தோட்டங்கள், பெரியகுளத்தில் படமாக்கினோம். ஒளிப்பதிவு செய்யும் போதே, பல காட்சிகள் என்னை நெகிழ வைத்தன.
* அடுத்த படம்?
கதை பிடித்தால்தான், முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும். கதையை முழுமையாக புரிந்துகொண்டால் தான், உயிர்ப்புடன் கொடுக்க முடியும்.
* இயக்குனர் அவதாரம் எப்போது?
ஒளிப்பதிவுக்கு செல்லும்போது, சாதாரணமாக தெரிந்தது. உள்ளே நுழைந்த பின் தான், அதில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது என தெரிந்தது. நான், இன்னும் மாணவப் பருவத்தில் தான் உள்ளேன். படத்தின் ஆசிரியர் போன்றவர் இயக்குனர்; சக ஆசிரியர் ஒளிப்பதிவாளர். படத்திற்கு இயக்குனர் முழு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இயக்குனர் என்பதை, எனது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பார்க்கிறேன்.
* தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்கள், இந்தி மற்றும் பிறமொழி படவுலகில் சாதிக்கின்றனரே?
தமிழ் ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், ஆர்ட் கலைஞர்கள், இயக்குனர்கள் திறமைசாலிகள். அவர்கள் ஒரே சமமான வாழ்க்கையை, அனுபவித்தவர்கள் அல்ல. ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து சிற்றூர்களிலிருந்து, கோடம்பாக்கத்திற்கு ஆயிரம் கதைகள், பிரச்னைகளுடன் செல்கின்றனர். அதுவே கதையாக வெளிப்படுகிறது.
* யதார்த்த படங்கள் குறைந்துவிட்டதே...?
பத்து ஆண்டுகளுக்கு முன் யதார்த்த சினிமா இல்லை. மழைக்கு முன் மண்வாசம் வரும். அதுபோல், தற்போது சிறு படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இது மாற்றத்திற்கான அறிகுறி.
* சினிமாவில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அறிவுரை?
நமது வாழ்க்கை, நமக்கு தெரிய வேண்டும். நமக்குத் தெரிந்ததை சினிமாவாக எடுக்க வேண்டும். நல்ல படங்களை பார்க்க வேண்டும்.
இவருடன் கருத்துக்களை பரிமாற chezhian6@gmail.com எனும் இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும்.