ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனக்கென தனி அடையாளத்துடன், தமிழ் சினிமாவில் புது வழி வகுத்தவர், சந்தானம். எவ்வளவு பெரிய நடிகர்களையும், கலாய்த்தும், தட்டி கொடுத்தும் நடிப்பதில், சந்தானத்தை அடித்து கொள்ள ஆள் இல்லை. காமெடியை கடந்து, ஹீரோவாக நடிக்க துவங்கி, தொடர் வெற்றிகளை குவித்து வரும் சந்தானம், அடுத்து வெளிவரவுள்ள சக்க போடு போடு ராஜா படம் பற்றி பேசுகிறார்.
சக்க போடு போடு ராஜா பற்றி சொல்லுங்க...?
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை, இதுவரை வந்தது இல்லை. திரையுலகையே புரட்டி போடும் கதை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இது, ஒரு ஜாலியான படம். இரண்டு மணி நேரம், குடும்பத்துடன் சந்தோஷமாக பார்த்து விட்டு போகலாம். வேலைக்கு போகாமல், அப்பா காசில், ஜாலியாக ஊர் சுற்றும் ஒருவனை பற்றிய கதை இது. அவனுக்கு காதல் வருகிறது; அதை அவன் எப்படி கையாளுகிறான் என்பது தான், கதை.
வேலைக்கு போகாதவன் மீது, எப்படி ஒரு பெண்ணுக்கு காதல் வரும்?
நீங்கள், எந்த காலத்தில் இருக்கீங்க. இப்போதெல்லாம், வேலைக்கு போகாத பசங்களைத் தான், பெண்களுக்கு ரொம்ப பிடிக்குது. 24 மணி நேரமும், தங்களுடன் பேச வேண்டும்; வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என, இப்போதுள்ள பெண்கள் நினைக்கின்றனர்.
இந்த மாதிரி காதல், உங்கள் வாழ்க்கையில் நடந்தது உண்டா?
என்னை மட்டும் ஏன் குறி வைத்து கேட்குறீங்க? ஊரில் உள்ள முக்கால்வாசி பேருக்கு இது மாதிரி நடந்திருக்கும். ஸ்கூல் படிக்கும் போதெலாம் பார்த்திருக்கேன். டியூஷன் விடும் நேரம், ஒரு ஐந்து நிமிடம் அந்த பெண்ணை பார்ப்பதற்காக, இரண்டரை மணி நேரம் ரோட்டில் காத்து கிடப்போம்.
படத்தில் உங்க கேரக்டர் பேர்?
சந்தானம் என்ற என் பெயரை எல்லோரும் சாண்டா என்று தான் அழைப்பார்கள். அதனால், படத்திலும் அந்த பெயரை பயன்படுத்தியிருக்கோம். படம் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ் ஆவதால் இந்த சாண்டா பெயரும் பொருத்தமாக இருக்கும் என்று அதையே வைத்துவிட்டோம்.
இந்த படத்தில், விவேக் வந்தது எப்படி?
இதில் பெரிய காமெடி பட்டாளமே இருக்கு. சாமிநாதன், மயில்சாமி, பவர்ஸ்டார் என, பெரும் கூட்டமே இருக்கு. இதுவரை, விவேக், வடிவேலுவுடன் நடித்தது இல்லை என்ற குறை இருந்தது. இந்த படத்தில், எனக்கு சப்போர்ட்டா, ஒரு முக்கியமான கேரக்டர் தேவைப்பட்டது. அதனால், விவேக் சாரை இதில் நடிக்க வைத்தோம்.
இந்த படத்துக்கு, சிம்பு இசையமைத்தது எப்படி?
ஹாரிஸ் ஜெயராஜ் தான், இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவர், ஸ்பைடர் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், சிம்புவை சம்மதிக்க வைத்தோம். ஒரு கட்டத்தில், ரொம்ப வேகமாக வேலை பார்க்க துவங்கிவிட்டார். அவரது வேலையை பார்த்து, பிரமித்து போய் விட்டோம்.
சிம்பு தான் டைட்டில் பாடல் எழுதினாராமே?
உண்மை தான். "கலக்கு மச்சான்..." என்ற பாடலை அவர் தான் எழுதினார். தீம் மியூசிக் வேற பக்கவா போட்டு கொடுத்தார். என் படத்தின் டிரைலரையும் அவர் தான் கட பண்ணி கொடுத்தார். சிம்புவுக்கு என் மேல் கொஞ்சம் லவ் இருக்கு.
ஹேர்ஸ்டைல், லுக் எல்லாம் கலக்குறீங்களே...?
காமெடி நடிகராக இருந்தபோது, கார குழம்பில் இருந்து கறிக்குழம்பு வரை, எல்லாத்தையும் சாப்பிட்டேன். ஹீரோவானதும், சப்பாத்தி, காய்கறிகள் தான் சாப்பிடுகிறேன்.
இனி மற்ற நடிகர்களுடன் சேர்ந்து, சப்போர்ட் ரோலில், நீங்க நடிப்பீங்களா; மாட்டீங்களா?
பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்குற மாதிரியே கேக்குறீங்களே. இனி, அந்த மாதிரி ரோலில் நடிக்க மாட்டேன். இரண்டு ஹீரோ கதைகளில் வேண்டுமானால் நடிப்பேன்.
எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரத் துவங்கிட்டாங்க; நீங்க எப்போது?
கேளுங்க... கேளுங்க... நல்லா கேளுங்க. இதுவரை எனக்கு அந்த மாதிரி யோசிக்க தோன்றவில்லை. என்னிடம் நகைச்சுவையைத் தான், ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சில தவறுகள் நடக்கும்போது, அதை தட்டிக் கேட்க தோன்றும். ஆனால், அது வேறு மாதிரியாகி விடும். விளம்பரத்துக்காக நான் அப்படி செய்வதாககூறி விடுவர். அதனால், அமைதியாக இருந்துட்டு போயிடலாம் என, முடிவு செய்திருக்கிறேன்.
பிக் பாஸ் நடத்த கூப்பிட்டால் போவீங்களா?
கமல் சாரே போய்விட்டு வந்தபின், நான் போக மாட்டேனா; அழைத்தால் கண்டிப்பாக போவேன்.
எந்த ஹீரோயினுடன் நடிக்க ஆசை?
நம்ம செல்லக் குட்டி தீபிகா படுகோனே தான். அவங்க கூட, ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. இப்போ, அவங்க தலைக்கு, கோடிக் கணக்கில் பணம் தருவதாக, பயமுறுத்துகின்றனர்.
பத்மாவதிக்கு உங்க ஆதரவு இருக்கா ?
நல்லா, மாட்டி விடறீங்களே. ராஜஸ்தானிலிருந்து நேராக வந்து, என் வீட்டில் இறங்கிடப் போறாங்க. ஆனாலும், என் மனதில் பட்டதை கூறுகிறேன்; எந்த படத்தையும், திரைக்கு வருவதற்கு முன்பே விமர்சிப்பது, நடிகர்களை மிரட்டுவது எல்லாம் சரியான செயல் அல்ல.
ஆர்யா டுவிட்டரில் பெண் தேடுறாராமே?
அந்த வீடியோ பார்த்து பலரும் எனக்கு போன் செய்து உண்மையா என்று கேட்டார்கள். மச்சான் இதயே படமா பண்ணு... படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று ஆர்யாவிடம் சொன்னேன். உன் படத்தோடு டிரைலர் கூட இந்த அளவுக்கு ரீச் ஆகல, அதனால் நீ இந்த மாதிரி ஒரு கதை பண்ணி நடி, நிச்சயம் ஹிட்டாகும் என்றேன். இந்த முறை ஆர்யாவுக்கு கண்டிப்பாக திருமணமாகிவிடும், இல்லையென்றால் நாங்களே ஒரு நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு பண்ணியிருக்கோம்.
நீங்களும், சிவகார்த்திகேயனும் மோதிக்க போறீங்க?
கிறிஸ்துமஸ் பண்டிகையில் என் படமும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படமும் ரிலீஸாவதாக சொல்றாங்க. என் படம் சென்சார் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கு தயாராக உள்ளோம். அவர் படம் பற்றி எனக்கு தெரியவில்லை. அவர் படமும் வந்தாலும் வரட்டுமே, அதனால் என்ன, விடுமுறை நாளை ரசிகர்கள் கொண்டாடட்டும்.
வரபோகும் படங்கள் ?
முதலில் சக்க போடு போடு ராஜா, பிறகு சர்வர் சுந்தரம், அடுத்து செல்வராகவனின் மன்னவன் வந்தானடி, அதன்பின் ஓடி ஓடி உழைக்கனும் ரிலீஸாகும்.